நற்றிணை - 168. குறிஞ்சி

சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப் பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல், புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் |
5 |
நன் மலை நாட! பண்பு எனப் படுமோ- நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய், அணங்குடை அரவின் ஆர் இருள் நடு நாள், மை படு சிறு நெறி எஃகு துணை ஆக ஆரம் கமழும் மார்பினை, |
10 |
சாரற் சிறுகுடி ஈங்கு நீ வரலே? |
வண்டுகள் உண்ணுமாறு மலர் விரிந்த கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையிலே; தேனீக்கள் மொய்த்தலாலே கசிந்து கல்லின் குழிகளில் வடிந்த இனிய தேன்; குறவரின் இளமகாஅர் வழித்துண்டெஞ்சியதை; மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணாநிற்கும் நல்ல மலைநாடனே!; நின்னை விரும்பியுறையும் இவளது இனிய உயிர் படுகின்ற துன்பமின்னதென்று கருதாமல்; வருத்துந் தன்மையுடைய பாம்புகள் இயங்குகின்ற வருதற்கரிய இரவின் நடுயாமத்தில் மயக்கந்தருகின்ற சிறிய வழியின் கண்ணே; நின் கையிலேந்திய வேற்படையையே நினக்குரிய துணையாகக் கொண்டு சந்தனம் பூசுதலால் அதன் நறிய மணங்கமழ்கின்ற மார்பினையுடையையாய்; சாரலின்கணுள்ள சிறுகுடியாகிய இவ்விடத்து நீ தனியே வருதல் தகுதிப்பாடுடையதாமோ? ஆதலின் இனி இங்கு இரவில் வரற்பாலை அல்லைமன்!
தோழி இரவுக்குறி மறுத்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 168. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, நற்றிணை, நின், உயிர், இனிய, தேன், விரிந்த, எட்டுத்தொகை, சங்க, தொடுத்த