நற்றிணை - 152. நெய்தல்
மடலே காமம் தந்தது; அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே; இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர, புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்; எல்லாம் தந்ததன்தலையும் பையென |
5 |
வடந்தை துவலை தூவ, குடம்பைப் பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ, கங்குலும் கையறவு தந்தன்று; யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே? |
யான் கொண்ட காமமோ இந்தப் பனங்கருக்காலே கட்டிய பரியைத் தந்தது; ஊராரெடுக்கும் அலரோ ஆவிரை, பூளை, உழிஞை என்று இன்னன மலர்களை இடையிட்டுக் கட்டிய எருக்கம் பூ மாலையைத் தந்தது; எல்லாம் விரும்புதலைச் செய்கின்ற ஆதித்த மண்டிலமோ தன்னொளி விசும்பின் மேலே செல்லும்படி விளங்கிய கதிர்கள் மழுக்க மடைந்து எனக்குத் துன்பத்தைத் தந்தது; முற்கூறிய யாவும் எல்லாவற்றையுந் தந்தவற்றின் மேலும்; மெல்லென வாடைக்காற்றுப் பனித்துளியைத் தூவுதலாலே; கூட்டிலே தன் பெடையைப் பிரியாது புணர்ந்திருக்கும் அன்றிற் பறவையின் இயங்குகின்ற குரலுடனே அளாவிக்கொண்டு; இராப் பொழுதென்பதும் என் செயலெல்லாம் அழியும்படி கையறவைத் தந்தது; கண்டோர் யாவராலும் இரங்கும்படியாகிய நிலைமையையுடைய யான்; இவ்வளவு துன்பஞ் சூழ்ந்துகொள்ள இவற்றிடையே இனி எவ்வண்ணம் உய்குவேனோ?
மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது. - ஆலம்பேரி சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 152. நெய்தல், தந்தது, இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, யான், கட்டிய, எல்லாம், தந்தன்றே, எட்டுத்தொகை, சங்க