நற்றிணை - 100. மருதம்

உள்ளுதொறும் நகுவேன்- தோழி!- வள்உகிர் மாரிக் கொக்கின் கூரல் அன்ன குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி, என் வயின் வான் கோல் எல் வளை வெளவிய பூசல் |
5 |
சினவிய முகத்து, 'சினவாது சென்று, நின் மனையோட்கு உரைப்பல்' என்றலின், முனை ஊர்ப் பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தை, பேர் இசைப் புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் |
10 |
மண் ஆர் கண்ணின் அதிரும், நன்னர் ஆளன் நடுங்கு அஞர் நிலையே. |
தோழீ ! பெரிய உகிரையுடைய கார்காலத்து உலாவுங் கொக்கினது கூரிய மூக்குப்போன்ற ஆழ்ந்த நீரின் முளைத்த ஆம்பற் பூவையுடைய; தண்ணிய துறையையுடைய ஊரன் நெய்ம் மணங் கமழ்கின்ற என் கூந்தலைப் பற்றி யீர்த்து வைத்து என் கையிலுள்ள வெளிய கோற்றொழிலமைந்த ஒளியையுடைய வளையைக் கழற்றிக் கோடலினாகிய பூசலாலே; ஊர்முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக் கொண்டு வருகின்ற இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மையுடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு; வேற்று நாட்டிருந்து வந்த பெரிய இசையையுடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிர்வதுபோலும் அதிர்ச்சியோடு; நன்மையை மேற்கொள்ளும் அவன் தான் நடுங்கிய வருத்தத்தையுற்ற நிலையை நினைக்குந்தோறும் நகை தோன்றுதலாலே யான் நகாநிற்பேன்காண் !;
பரத்தை, தலைவிக்குப்பாங்காயினார் கேட்ப, விறலிக்கு உடம்படச்சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 100. மருதம், இலக்கியங்கள், மருதம், நற்றிணை, புரி, பெரிய, நன்மையை, தேர், ஊரன், எட்டுத்தொகை, சங்க, பற்றி