குறுந்தொகை - 94. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.)
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே மானே மருள்வேன் தோழி பானாள் இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும் என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே |
5 |
அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலை தருங் குரலே. |
|
- கதக்கண்ணனார். |
தோழி! பெரிய தண்மை யையுடைய மழைக்காலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன; அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்; ஆயினும் என்னைப் பிரிந்திருப்பவராகிய இன்னும் என்பால்வந்து சேராமல் தனித்து இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடு இரவில் கேட்டால் தாம் முன்னரே பிரிவினால் வருந்துவதன்றி மீட்டும் எந்த நிலையை உடையவராவரோ!
முடிபு: தோழி, பித்திகத் தரும்பு மிகச் சிவந்தன; யானே மருள்வேன்? பிரிந்திசினோர், இன்னுந் தமியர் மழைக்குரலைக் கேட்பின் என்னாகுவர்!
கருத்து: தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 94. முல்லை - தலைவி கூற்று, தோழி, இலக்கியங்கள், தலைவி, கூற்று, தலைவர், பெரிய, முல்லை, குறுந்தொகை, தமியர், தாம், சிவந்தன, மிகச், இன்னுந், ஆயினும், எட்டுத்தொகை, சங்க, கார்ப்பருவம், கேட்டு, மருள்வேன்