குறுந்தொகை - 92. நெய்தல் - தலைவி கூற்று
(மாலைப்பொழுது வந்ததுகண்டு தலைவி, “பறவைகள் தம் பார்ப்புக் களுக்குரிய இரையை வாய்க்கொண்டு தம் கூடுகளை நோக்கிச் செல்கின்றன” என்று கூறி, “இனிஆற்றேன்” என்பதுணர்த்தியது.)
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த பிள்ளை யுள்வாய்ச் செரீஇய இரைகொண் டமையின் விரையுமாற் செலவே. |
5 |
- தாமோதரனார். |
கதிரவன் மறைந்த அகன்ற இடம் பொருந்திய ஆகாயத்தில் வளைந்த சிறகுகளையுடைய பறவைகள் தாம் தங்கும்படி உயர்ந்த வழியின் அயலில் வளர்ந்த கடம்பின்கண் உள்ள கூட்டிலிருக்கும் குஞ்சுகளின் வாயினுள்ளே செருகும் பொருட்டு இரையைத் தம் அலகில் எடுத்துக் கொண்டமையால் விரைந்து செல்லும்; அவை இரங்கத்தக்கன.
முடிபு: பறவை செலவு விரையும்; அளிய.
கருத்து: மாலைக்காலம் வந்தது; இனிக் காமநோயை ஆற்றேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 92. நெய்தல் - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, நெய்தல், குறுந்தொகை, கூற்று, பறவை, அளிய, எட்டுத்தொகை, சங்க