குறுந்தொகை - 79. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)
கான யானை தோனயந் துண்ட பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை அலங்கல் உலவை யேறி ஒய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் |
5 |
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே. |
|
- குடவாயிற் கீரத்தனார். |
தோழி! யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் சொல்லாமற் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓமைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஒய்யென்று தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ?
முடிபு: சொல்லாதகறல் வல்லுவோர் சேந்தனர்கொல்?
கருத்து: தலைவர் இனி மீளாரோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 79. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, தலைவர், குறுந்தொகை, கூற்று, சென்ற, தாம், சங்க, எட்டுத்தொகை, சொல்லாமற்