குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று
(தலைவன் பிரிவை ஆற்றாமலிருந்த தலைவியை நோக்கி, "அவர் நின் துன்பத்தையறிவர்; ஆதலின் விரைவில் மீளவர்" என்று தோழி கூற, "அவர் அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்" என்று தலைவி கூறியது.)
பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப் புன்றலை மன்றம் நோக்கி மாலை மடக்கண் குழவி அலவந் தன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர்தோழி சேய்நாட் டோரே. |
5 |
- கருவூர்க் கதப்பிள்ளை. |
தோழி! பல பசுக்கள் நெடிய வழியின்கண் நீங்கிச் சென்றன வாக அவை தங்கி யிருத்தற்குரிய புல்லிய இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து மாலைக்காலத்தில் மடப்பம் பொருந்திய கண்ணையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்தினாற் போன்ற தம் வரவு நோக்கிய துன்பத்தை யுடையேமாதலை அறிந்திருந்தும் நெடுந்தூரத்தேயுள்ள நாட்டுக்குச் சென்ற தலைவர் இன்னும் நெடுந்தூரத் திலேயுள்ளார்
முடிபு: தோழி, சேய்நாட்டோர் நோயேமாகுதல் அறிந்தும் சேயர்.
கருத்து: தலைவர் நாம் துன்புறுவோமென்பதை அறிந்தவராயிருந்தும் இன்னும் வந்திலர்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, இன்னும், முல்லை, குறுந்தொகை, கூற்று, தோழி, வந்திலர், பார்த்து, தலைவர், அறிந்தும், நோக்கி, எட்டுத்தொகை, சங்க, அவர், அறிந்தவராயிருந்தும்