குறுந்தொகை - 59. பாலை - தோழி கூற்று
(தலைவன் பொருள்தேடச் சென்ற காலத்தில் அவனது பிரிவை ஆற்றாமல் வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின்னை மறவார்; தமக்கு வேண்டிய பொருளைப் பெற்று விரைவில் மீளுவர்" என்று தோழி கூறியது.)
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறுநின் நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும் சுரம்பல விலங்கிய அரும்பொருள் |
5 |
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. | |
- மோசி கீரனார். |
ஒருகண்மாக்கிணையை இயக்கும் தாளத்தையுடைய பாணர் முதலிய இரவலரைப் பாதுகாப்பவனது அரலையென்னும் குன்றத்தின்கண் உள்ள அகன்ற வாயையுடைய ஆழமுள்ள சுனையின்கண் அலர்ந்த குவளை காட்டுமல்லிகையின் மணம் வீசும் நினது நல்ல நெற்றியை தலைவர் மறப்பாரோ? பலநாள் நின்று முயற்சிகளைச் செய்தாலும் பாலைநிலம் பல குறுக்கிட்ட கிடைத்தற்கரிய பொருள் முற்றக் கை கூடாவாதலின் முற்றும் பெற்றே மீள்வே மென்று கருதித் தலைவர் காலம் நீட்டித்துத் தங்குதல் இலதாகும்; ஆதலின் நீ வருந்துதலை ஒழிவாயாக.
முடிபு: நறுநுதல் மறப்பரோ? பொருள் நிரம்பா ஆகலின் நீடல் இன்று.
கருத்து: தலைவர் விரைவில் மீளுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 59. பாலை - தோழி கூற்று, தலைவர், இலக்கியங்கள், தோழி, குறுந்தொகை, கூற்று, பாலை, நிரம்பா, பொருள், ஆகலின், மறப்பரோ, விரைவில், எட்டுத்தொகை, சங்க, மீளுவர்