குறுந்தொகை - 58. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தன்னை இடித்துக் கூறிய பாங்கனை நோக்கி, “எனது காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று; இதனை நீங்கச் செய்யின் நன்றாகும்” என்று தலைவன் கூறியது.)
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையில் ஊமன் கண்ணிற் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் |
5 |
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. | |
- வெள்ளி வீதியார். |
இடித்துரைக்கும் நண்பரே நுமது காரியமாக என் காமநோயை நிறுத்தலைச் செய்தால் மிக நன்று; எனது விருப்பம் அது; சூரியன் வெயில் எறிக்கும் வெம்மையையுடைய பாறையினிடத்தே கையில்லாத ஊமையன் தன் கண்ணினாலே பாதுகாக்க முயலுகின்ற உருகிய வெண்ணெயைப்போல என்பாலுண்டான இக்காமநோய் பரவியது; பொறுத்துக்கொண்டு நீக்குத்தற்கு அரிதாயிருக்கின்றது.
முடிபு: கேளிர், நிறுக்கலாற்றின் நன்றுமன்; இந்நோய் பரந்தன்று; நோன்றுகொளற்கரிது.
கருத்து: காமநோய் பொறுத்தற்கரியதாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 58. குறிஞ்சி - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவன், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, கேளிர், பொறுத்தற்கரியதாயிற்று, எட்டுத்தொகை, சங்க, காமநோய்