குறுந்தொகை - 366. குறிஞ்சி - தோழி கூற்று
(காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு, “இஃதுஎக்காரணத்தால் உண்டாகியது?” என்று வினவிய செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.)
பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற் சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ வெறியாள் கூறவும் அமையாள் அதன்தலைப் பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை |
5 |
பழுத கண்ண ளாகிப் பழூதன் றம்மவிவ் வாயிழை துணிவே. |
|
- பேரிசாத்தனார். |
இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி வெறி யாடும் மகள் இந்நோய் முருகனாலாயது என்று சொல்லவும் அமைதி பெறாளாய் அதன் மேலும் பசிய இடத்தையுடைய கரிய சுனையினிடத்தே பல கட்டு அவிழ்ந்த வளவிய இதழையுடைய நீலமலரைப் பார்த்து நெஞ்சுள்ளே வருந்தி அழுத கண்களையுடையவளாகி துணிந்தது குற்றமற்றது; பழவினையினாலே வரையறுத்துப் பொருத்தப் பட்டதன்றி அத்தலைவர் திறத்தில் தகுதியை வரையறுத்து அறிவதற்கு யாம் எத்தகுதியை உடையேம்?
முடிபு: இவ்வாயிழை அமையாள், நீலம் நோக்கி அழுதகண்ணளாகித் துணிவு பழுதன்று.
கருத்து: தலைவிக்கு நீலப்பூவைத் தந்து நட்புச்செய்த அன்பன் ஒருவன் உளன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 366. குறிஞ்சி - தோழி கூற்று, இலக்கியங்கள், தோழி, குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, நோக்கி, நீலம், எட்டுத்தொகை, சங்க, அமையாள்