குறுந்தொகை - 364. மருதம் - இற்பரத்தை கூற்று
(வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “மகளிர் துணங்கை யாடும் நாளும், மள்ளர் சேரிப்போர் செய்யும் நாளும் வந்தன; இப்பொழுது தலைவன் வலிய என்பால் அன்பு கொள்ளுதலை அறியலாம்” என்று கூறியது.)
அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன் பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி எற்புறங் கூறும் என்ப தெற்றென வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் |
5 |
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக் கண்பொர மற்றதன் கண்ணவர் மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே. |
|
- அவ்வையார். |
பிணக்கையுடைய கொடிப் பிரம்புகளைப் போன்ற கோடுகள் பொருந்திய புறத்தையுடைய நீர் நாயானது வாளை மீனாகிய நாட்காலை உணவைப் பெறுகின்ற ஊருக்குத் தலைவனுடைய பொன்னாலாகிய திரட்சியையுடைய விளங்குகின்ற வளையையணிந்த தனக்குப்பொருந்திய தகுதியுடைய பரத்தை என்னைப் புறங்கூறுவளென்று கூறுவர; அவள் கூறுவது உண்மையா அன்றா என்பது விளங்கும்படி வளைந்தசந்தையுடைய மூங்கிலைப் போன்ற தோள்களில் விளக்கத்தை யுடைய வளையையணிந்த மகளிர்க்குரிய துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன; அக்காலத்தில் ஒருவர்கண் மற்றொருவர்கண்ணோடு மாறுபடும்படி அத்துணங்கைக் கூத்தினிடத்து அம்மகளிரது மணத்தைக் கொள்ளும் பொருட்டு மள்ளர்களுடைய சேரிப் போரானது விரும்பிக்கொள்ளப்படும்.
முடிபு: ஊரன் தகுவி புறங்கூறுமென்ப; தெற்றென நாளும்வந்தன; அதன்கண் மள்ளர்போர் அவர் மணங்கொளற்கு இவரும்.
கருத்து: என்னைத் தலைவனே விரும்பி அடைந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 364. மருதம் - இற்பரத்தை கூற்று, இலக்கியங்கள், இற்பரத்தை, வந்தன, நாளும், குறுந்தொகை, கூற்று, மருதம், ஊரன், தெற்றென, வளையையணிந்த, வாளை, தகுவி, துணங்கை, எட்டுத்தொகை, சங்க, பரத்தை, மள்ளர்