குறுந்தொகை - 330. மருதம் - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவி, "தலைவர் சென்றநாட்டில் என்னை வருத்தும் மாலையும் புலம்பும் இலவோ?" என்றுதோழிக்குக் கூறியது.)
நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத் தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும் பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ இன்கடுங் கள்ளின் மணமில கமழும் |
5 |
புன்கண் மாலையும் புலம்பும் இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே. |
|
- கழார்க் கீரனெயிற்றியனார். |
தோழி! நன்மையையும் அழகையும் உடைய வண்ணாத்தி கஞ்சியிலே தோய்த்து எடுத்து முதல் தப்பலைத் தப்பிவிட்டு தண்ணிய நீர்நிலையிலே போகட்ட அந்நீரிலே பிரியாத பருத்த ஆடையின் முறுக்கைஒக்கும் பெரிய இலையையுடைய பகன்றையினது கூம்பு மலர்ந்தவெள்ளிய மலர் இனிய கடுமையாகியகள்ளைப் போல நறு நாற்றமில்லாதனவாகி நாறுகின்ற துன்பத்தைத்தரும் மாலைக் காலமும் தனிமையும் அத்தலைவர் நம்மைப் பிரிந்து சென்றநாட்டிலே இல்லையோ.
முடிபு: தோழி, மாலையும் புலம்பும் அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?
கருத்து: மாலைக்காலமும் தனிமையும் எனக்கு வருத்தத்தை உண்டாக்குகின்றன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 330. மருதம் - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், கூற்று, புலம்பும், மருதம், மாலையும், குறுந்தொகை, தோழி, தனிமையும், சென்ற, இன்றுகொல், எட்டுத்தொகை, சங்க