குறுந்தொகை - 265. குறிஞ்சி - தோழி கூற்று
(வரைபொருட்குத் தலைவன் பிரிந்தானாக, அவன் வரையாது பிரிந்தான் என வருந்திய தலைவிக்குத் தலைவன் பிரிந்த காரணங் கூறித் தோழி ஆற்றுவித்தது.)
காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும் தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடனறி மாக்கள் போல இடன்விட் டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன் |
5 |
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை யான்றனக் குரைத்தனெ னாகத் தானா ணினனி தாகா வாறே. |
|
- கருவூர்க்கதப் பிள்ளை. |
தோழி! காந்தளினது அழகிய கொழுவிய அரும்பை தானாக மலரும் வரையில் காத்து நில்லாமல் வண்டுகள் மூடிய இதழ்களைத் திறக்கும் சமயத்தில் முன்பும் தாம் அறிந்த நடுநிலைமையை உடைய சான்றோரைக் கண்ட எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரைப் போல இடம் கொடுத்து இதழ்கள் பிணிப்பவிழ்ந்த உயர்ச்சியை உடைய மலைகளை உடைய தலைவன் நினது நிலையை நான் தனக்குச் சொன்னேனாக இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி நாணத்தை அடைந்தான்; அவன் நின்னை வரைந்து கொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.
முடிபு: தோழி, நின்னிலை யான் உரைத்தனெனாக, வெற்பன் இஃது ஆகாவாறு நாணினன்; நன்னர் நெஞ்சத்தன்.
கருத்து: நின்னை வரைந்து கொள்ளுதல் காரணமாகவே தலைவன்பிரிந்தானாதலின் நீ வருந்தற்க.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 265. குறிஞ்சி - தோழி கூற்று, தோழி, இலக்கியங்கள், குறிஞ்சி, உடைய, கூற்று, தலைவன், குறுந்தொகை, அறிந்த, நின்னிலை, வரைந்து, நின்னை, கொள்ளுதல், நெஞ்சத்தன், திறக்கும், சங்க, எட்டுத்தொகை, அவன், கண்ட, வெற்பன், நன்னர்