குறுந்தொகை - 14. குறிஞ்சி - தலைவன் கூற்று
(பாங்கியினாற் குறை மறுக்கப்பட்ட தலைவன், ‘‘என்னைத் துன்புறுத்தியவள் இன்னாள் என்பதை யாவரும் அறிந்து கூறும்படி மடன் மாஊர்ந்து மறுகிற் செல்வேன்’’ என்று அப்பாங்கி கேட்பக்கூறியது.)
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெறுகதில் அம்ம யானே பெற்றாங் கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில் நல்லோள் கணவன் இவனெனப் |
5 |
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே. | |
- தொல்கபிலர். |
அமுதத்தின் இனிமை நிரம்பிய செவ்விய நாவானது அஞ்சும்படி முளைத்த நேராகி விளங்குகின்ற கூர்மையாகிய பற்களையும் சிலவாகிய சொற்களையும் உடைய தலைவியை நான் மடன்மா ஏறுதலாற் பெறுவேனாக; பெற்றபின்பு இந்த ஊரில் உள்ளார் அறிவாராக; பலர் வீதியில் இந்த நல்லாளுடைய தலைவன் இவன் என்று சொல்லா நிற்க நாம் சிறிது நாணுவேம்!
முடிபு: யான் பெறுக; ஊர் அறிக; பல்லோர் கூற யாம் நாணுகம்.
கருத்து: யான் மடல் ஏறுவேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 14. குறிஞ்சி - தலைவன் கூற்று, தலைவன், இலக்கியங்கள், குறிஞ்சி, குறுந்தொகை, கூற்று, யான், பல்லோர், எட்டுத்தொகை, சங்க