குறுந்தொகை - 126. முல்லை - தலைவி கூற்று
(தலைவி மீண்டுவருவேனெனக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த பின்பும் அவன் வாராமையால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; முல்லைக் கொடிகள் அரும்பின; தலைவர் இன்னும் வந்திலர்” என்று கூறியது.)
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர் இவணும் வாரார் எவண ரோவெனப் பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கெயி றாக நகுமே தோழி நறுந்தண் காரே. |
5 |
- ஒக்கூர் மாசாத்தியார். |
தோழி! இளமையது அருமையைப் பாராராகி பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர் இவ்விடத்தும் இன்னும் மீண்டு வந்திலர்; எவ்விடத்தில் உள்ளாரோ? என்று யாம் எண்ணியிருப்ப நறிய தண்ணிய கார் காலம் மழையாற் பாதுகாக்கப்பட்ட பூவையுடைய முல்லைக் கொடியினது தொக்க முகைகளை விளங்குகின்ற தன்பற்களாகக் கொண்டு நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.
முடிபு: தோழி, சென்றார் எவணரோ என, கார் நகும்.
கருத்து: கார்காலம் வந்துவிட்டது; தலைவர் வந்திலர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 126. முல்லை - தலைவி கூற்று, தலைவி, இலக்கியங்கள், முல்லை, தலைவர், குறுந்தொகை, கூற்று, தோழி, இன்னும், கார், வந்திலர், சென்ற, எட்டுத்தொகை, சங்க, வந்துவிட்டது, முல்லைக்