அகநானூறு - 325. பாலை
அம்ம! வாழி, தோழி! காதலர், 'வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர், நளி இருங் கங்குல் புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக அலர்ந்தன்று; அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும்; பின் பெரிது |
5 |
இவண் உறைபு எவனோ? அளியள்!' என்று அருளி, 'ஆடு நடைப் பொலிந்த புகற்சியின், நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை, வள் உயிர் மாக் கிணை கண் அவிந்தாங்கு, மலை கவின் அழிந்த கனை கடற்று அருஞ் சுரம் |
10 |
வெய்யமன்ற; நின் வை எயிறு உணீஇய, தண் மழை ஒரு நாள் தலையுக! ஒள் நுதல், ஒல்கு இயல், அரிவை! நின்னொடு செல்கம்; சில் நாள் ஆன்றனைஆக' என, பல் நாள், உலைவு இல் உள்ளமொடு வினை வலி உறீஇ, |
15 |
எல்லாம் பெரும் பிறிதாக, வடாஅது, நல் வேற் பாணன் நல் நாட்டு உள்ளதை, வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை, ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலைப் போகி, |
20 |
ஒழியச் சென்றோர்மன்ற; பழி எவன் ஆம்கொல், நோய் தரு பாலே? |
கொண்டு நீங்கக் கருதி ஒழிந்த தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 325. பாலை , இலக்கியங்கள், நாள், அகநானூறு, பாலை, எட்டுத்தொகை, சங்க