அகநானூறு - 176. மருதம்
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின் நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால், களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில், கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை |
5 |
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க, பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து, வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல், |
10 |
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் நீர் மலி மண் அளைச் செறியும் ஊர! மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ, விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து, |
15 |
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல் புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து, நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய, |
20 |
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி, அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ் நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு, கூர்நுனை மழுகிய எயிற்றள் |
25 |
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே. |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம்- பாடிய இளங்கடுங்கோ
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 176. மருதம், மருதம், இலக்கியங்கள், மலர், அகநானூறு, நின், அன்ன, கண்டன்ன, சங்க, எட்டுத்தொகை