எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
* நீங்கள் ஒரு நாடகத்தை எப்படித் தயாரிக்கிறீர்கள் என்பதை விளக்க முடியுமா?
* ஒரு நாடகத்தை எடுக்கும்போது அதன் உள்ளடக்கத்தைப் பார்ப்பேன். அது எனக்கு ஓர் உள்ளக் கிளர்ச்சியைத் தர வேண்டும். பின்பு அதைக் கலையழகுடன் வெளிப்படுத்த முடியுமா என்று யோசிப்பேன். அதில் ஒரு சவாலையும் எதிர்பார்ப்பேன். அப்படி இல்லாத நாடகத்தை எடுக்க மாட்டேன். அப்படி முடிவு செய்த நாடகப் பிரதியைக் கிட்டத்தட்ட நூறு தடவை படிப்பேன். அதன் சகல அம்சங்களையும் உணர்வேன். நாடகத்தில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிரசவிக்கப்படும் சரியான நேரம் எது என்பதையும் உறுதியாக நிச்சயித்துக் கொள்வேன். இங்குக் கணம் தவறினால் கூடப் பாத்திரம் செத்துப் பிறந்த சிசுவாகி விடும். அதற்குள் நாடகமும் மனப்பாடமாகிவிடும். நாடகத்தின் மேடைக்குறிப்பைத் தேவைக்கேற்ப மாற்றியமைப்பேன். பிறகு நாடகச் செய்தி முக்கியத்துவத்திற்கு ஏற்ப வேகத்தைத் தீர்மானிப்பேன். நாடக ஆசிரியனின் வேகத்திலிருந்து என் வேகம் மாறுபடலாம். நடிகர்களுக்கும் பிற கலைஞர்களுக்கும் சவாலை ஏற்படுத்தி அதற்கு உறுதுணையாக இருப்பேன். நடிகர்களுடன் சந்திக்கும் முதல் சந்திப்பில் நாடகப் பிரதியை உடனே அறிமுகம் செய்யாமல், வேறு அடிப்படையான விஷயங்களில் பயிற்சி நடத்துவேன். பிறகு காட்சிகளாக வியூகங்களை அமைத்து, வியூகங்களுக்கு ஏற்ப காட்சிப் பொருட்களைப் பயன்படுத்துவேன். இதற்குப் பின்தான் பிரதியைக் கையில் எடுப்பேன். இந்த நேரத்தில் எந்த நடிகர் எந்தப் பாத்திரத்தை ஏற்க முடியும் என்பது உறுதியாகிவிடும். பிறகு பின் மேடைக் கலைஞர்களுடன் வேலை செய்வேன். இப்படிக் கூட்டாக விவாதித்துத் தயாரிப்பில் ஈடுபட்டாலும் தனித்துவத்திற்கு இடம் கொடுப்பேன். ஆலோசனைகளை வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்துவேன். இப்படி ஆண்டு ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு நாடகங்களைச் செய்தாலே போதும் என்று நினைக்கிறேன்.
* யாழ்ப்பாணத்தில் உள்ள நாடக அரங்கக் கல்லூரி பற்றிப் பலரும் பெருமையாகச் சொல்கிறார்கள். அக்கல்லூரி நாடகத்திற்கு ஆற்றிய பங்கு என்ன?
* நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பித்தபோது பயிற்சியளிக்க எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு முன்பே நாடகம் செய்த அனுபவம் நம்பிக்கையளித்தது. அதன் பொருட்டுக் கொழும்புவிலிருந்து யாழ்ப்பாணம் வந்து சனி, ஞாயிறுகளில் பயிற்சி கொடுத்தேன். பயிற்சி பெறப் பல பகுதிகளிலிருந்தும் பலர் வந்தார்கள். சிலர் அரை நாள் பிரயாணம் செய்து முறையான பயிற்சிக்காக வந்தார்கள். அவற்றையெல்லாம் நினைத்து அக்கறையோடு செய்தேன். இப்படிப் பயிற்சிக்காக வந்தவர்களும், குழந்தை சண்முகலிங்கம் என் மீது வைத்த நம்பிக்கையும் ஒரு வாரம் கூட தவறாமல் போக வேண்டிய மன உறுதியைத் தந்தது. மேலை நாட்டுப் பயிற்சிகள், குரல் பயிற்சி, நாட்டுக் கூத்தில் நான் பெற்ற ஆட்டப் பயிற்சிகள் அனைத்தையும் கொடுத்தேன். பல கூத்துக் கலைஞர்களை அழைத்து ராக, ஆட்டங்களைக் கற்றோம். அவர்களுக்கு வேறு சில பயிற்சிகளைக் கற்பித்தோம். இந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒவ்வொருவரும் கொண்டு வரும் கட்டுச் சோற்றை எடுத்து, தனி தட்டில் நிரப்பி நான் உண்ணத் தருகிறபோது, எழுபது எண்பது வித உணவுகள் வந்ததுபோல எழுபது எண்பதுவித உறவுகளும் வந்தன. சாதி, மதம் பற்றித் தீவிரமாக இருந்தபோதுகூட, பெரிய சாதியைச் சேர்ந்த முதிய நடிகர்கள் பலர், பல சாதிச் சாப்பாட்டிலிருந்து ஒரு கவளம் எடுத்துக் கொள்ளக் காலப் போக்கில் பழகினார்கள். பிறகு நானும் யாழ்ப்பாணத்திற்கு வேலையை மாற்றிக் கொண்டேன். இந்தப் பயிற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நாடகத்தில் புதுப்புது வியூகங்களை அமைக்க மாணவர்களும் பயின்றார்கள். ஆசிரியர்கள் ஊக்கம் பெற்றார்கள். நாடகத்தில் பொய்மையை அறுக்க சத்திய உணர்வை வலியுறுத்தினேன். நடிகர்களிடமும் நாடக ஆசிரியர்களிடமும் அது வந்தது. யாழ்ப்பாண மக்களின் மனநிலையைப் புரிந்து பலரையும் குழந்தை சண்முகலிங்கம் ஒன்று சேர்த்தார். கால சந்தியை ஏற்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. இப்படியான சூழ்நிலையில் நாடக அரங்கக் கல்லூரியில் கூடிப் படித்தவர்கள் புது மெருகோடு தங்கள் ஊரில் தொடர்ந்து நாடகங்களைப் படைத்தார்கள். நாடக உருவகமும் உள்ளடக்கமும் புதுப் பரிமாணங்கள் பெற்றன என்று சொல்லலாம். என்னை 'நெருப்பன்' என்பார்கள். அதாவது நான் கோபப்படுவதை அப்படிச் சொல்வார்கள். நான் கோபப்பட்டால் குழந்தை சண்முகலிங்கம் அமைதிப்படுத்துவார். அதுகூட ஒரு முக்கிய அம்சம். ஆகவே ஈழத்துத் தமிழ் நாடகம் என்று வந்தால் அனைவரையும் ஒன்றாக்கிய பணியில் என்னைவிட குழந்தை சண்முகலிங்கத்தின் பங்குதான் மிகப் பெரியது.
* நாடகத்திற்கும் நாடகப் பயிற்சிக்கும் மரபுக் கலைகள் எப்படி உதவின?
* நாட்டுப்புறக் கலைகளை அதிகம் பேர் பார்ப்பதில்லை. அதனால் அவற்றை நாடகத்தில் ஊடாகப் பாதுகாக்கலாம் என சில கட்டங்களை விவரிக்கக் கூத்து வடிவங்களைப் பயன்படுத்தினேன். உதாரணமாக, புதியதொரு வீடு நாடகத்தில் கூத்தையும் நாட்டுப் பாடல்களையும் பொருத்தம் கண்டு பயன்படுத்தினேன். ஏணித்தரு என்பது ஒரு முக்கிய தீர்மானத்திற்குமுன் பாடப்படுகிற பாட்டு, அதைப் 'புதியதொரு வீடு' நாடகத்தில் பயன்படுத்தினேன். மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணக் கூத்துக்களையும், சிங்களக் கண்டிய நடனத்தையும் இணைத்துத் தேவைக்கேற்ப, பலமான அரங்க வடிவை வெளிக்கொண்டு வந்தோம். அதன் தாக்கம் பழமைவாதிகளின் வாயை அடைத்தது. தமிழ்த் தேசிய நாடக வடிவம் உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியபோது, நாட்டுக் கூத்து, கிராமியக் கூத்து, கோலாட்டம், நாட்டுப் பாடல் வடிவங்கள் அடங்கிய 'பொறுத்தது போதும்' என்ற நான் எழுதி வடிவமைத்த நாடகம் வந்தது. அது பாரதம் போன்ற காவியத்தைக் கூட, தேவைப்பட்டால் ஒரு சிறிய அரங்கில் மேடையேற்றலாம் என்ற துணிச்சலை பல நாடக ஆசிரியர்களுக்குக் கொடுத்ததாகக் கைலாசபதி போன்ற விமரிசகர்கள் சொன்னார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகப், நாடகத்தில், நான், பிறகு, குழந்தை, நாடகம், பயிற்சி, நாட்டுப், கலைக், வந்தது, சண்முகலிங்கம், எனது, அரங்கக், கலைகள், நாடகக், பார்வை, கட்டுரைகள், பயன்படுத்தினேன், நாடகத்தை, கூத்து, எனக்கு, நாட்டுக், பலர், வீடு, கொடுத்தேன், வந்தார்கள், பயிற்சிக்காக, பயிற்சிகள், எழுபது, கொண்டு, புதியதொரு, முக்கிய, ஒன்று, செய்த, பிரதியைக், drama, அப்படி, வேண்டும், arts, முடியுமா, வரும், தேவைக்கேற்ப, நேரத்தில், என்பது, போதும், வியூகங்களை, வேறு, ஏற்ப, அதற்கு, கல்லூரி