சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள்
இந்தச் சமயத்தில்தான் நமது சுவாமிகள் தமிழ் நாடக உலகில் ஒழுங்கும் கட்டுப்பாடும் நிலவ வழி கோலினார்; அந்தக் காலத்திலே நடைபெற்று வந்த புராண, இதிகாச, கற்பனை நாடகங்களுக்கெல்லாம் பாடல்களும் உரையாடல்களும் எழுதி வரம்புக்குட்படுத்தியதோடு, புதிய நாடகங்கள் பலவற்றை இயற்றி உதவினார்.
ஒருநாள் மாலை சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று அபிமன்யு சுந்தரி அம்மானைப் பாடல் பிரதியொன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு ஓர் 'அரிக்கன்' விளக்கை அருகில் வைத்துக் கொண்டு எழுதத் தொடங்கினார். மறுநாள் பொழுது விடிந்து நாங்கள் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவரது படுக்கையருகே அபிமன்யு நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது. இது வெறும் கட்டுக்கதையன்று; உயர்வு நவிற்சியுமன்று; கண்கண்ட உண்மை.
நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள்!.... அதற்கேற்ற உரையாடல்கள்! துவக்கத்திலிருந்து முடிவுவரை அடித்தல் திருத்தல் கிடையாது! ஒரு புத்தகத்தைப் பார்த்து நகல் எடுக்கும் வேலையைக் கூட இவ்வளவு விரைவாகச் செய்யமுடியாது. கற்பனையாக நான்கு மணிநேரம் நடைபெறக்கூடிய ஒரு நாடகத்தையே எழுதி முடித்து விட்டார் சுவாமிகள். அவருடைய புலமைத் திறனை என்னென்று கூறுவது!
ஒரே இரவில் இவ்வளவு விரைவாக எழுதி முடித்த 'அபிமன்யு' நாடகத்தில் உள்ள பாடல்களிலும் உரையாடல்களிலும் கருத்துக்கள் எண்ணி எண்ணி இன்புறுதற்குரியன. சுவை மிகுந்த ஒன்றைக் குறிப்பிடுகிறேன்:
"துந்துபிகளெல்லாம் தும் தும் தும் என்றும், சங்கங்களெல்லாம் பம் பம் பம் என்றும், தாள வகைச் சல்லரி மல்லரி கரடிகைகளோ தீம் தீம் தீம் என்றும், முரசு, பேரிகை, மிருதங்கங்களோ தோம் தோம் தோம் என்றும் தொனிக்கின்றன. ஆகவே, இவ்வகை வாத்திய ஒலிகள் எல்லாம் ஒன்றுகூடித் தும்பம் தீம் தோம், தும்பம் தீர்ந்தோம், துன்பம் தீர்ந்தோம், துன்பம் தீர்ந்தோம் என்னும் பொருளைக் கொடுக்கலாயின. ஆகா! நான் செய்த பாக்கியமே பாக்கியம்."
இந்த உரைநடையை அபிமன்னனை மணந்து கொள்ள இருந்த சுந்தரி பேசி முடித்ததும், அந்த நாளில் சபையோர் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிப்பார்கள்.
கோவலன் நாடகத்தை முதன்முறை மதுரையில் அரங்கேற்றியபோது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி சுவாமிகளின் புலமைக்கு மற்றோர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 'கோவலன்' நாடகக் கதை எல்லோருக்கும் தெரிந்திருப்பதால் விளக்கமாகக் குறிப்பிட வேண்டியதில்லை. கண்ணகி கொடுத்த காற்சிலம்பை விற்றுவர மதுரை நகருக்குப் போவதாகக் கூறுகிறான் கோவலன். அப்போது கண்ணகியின் வாய்மொழியாக,
"மாபாவியோர் கூடிவாழும் மதுரைக்கு
மன்னா போகாதீர் இன்று"
என்ற பாடல் பாடப்படுகின்றது. மதுரை நகரில், அவர்கள் முன்னிலையிலேயே மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்குப் போக வேண்டாம் என்று பாடினால் அவர்கள் மனம் எப்படியிருக்கும்? இந்தப் பாடலைப் பாடத் தொடங்கியதும் சபையோர் கூச்சலிட்டு, "எங்கே சங்கரதாசர்? கொண்டு வா மேடைக்கு" என்று ஆரவாரம் செய்தார்கள்.
சுவாமிகள் மேடைக்கு வந்து பெருமிதத்துடன் நின்றார். சபையிலிருந்து கேள்விகள் சரமாரியாகக் கிளம்பின. "மாபாவியோர் கூடி வாழும் மதுரை" என்று குறிப்பிட்டு எழுதியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென மக்கள் குழப்பம் செய்தனர். சுவாமிகள் தமது கரங்களை உயர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டு தமது கருத்தை விளக்கத் தொடங்கினார்.
"மா என்ற சொல் திருமகளாகிய இலக்குமியையும், பா என்ற சொல் கலைமகளாகிய பாரதியையும், வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதியையும் குறிக்கிறது" என்று கூறி, அதற்கு ஆதராமாகப் பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலிருந்து சில செய்யுட்களைப் பாடி விளக்கம் தந்தார். "மாபாவியோர் கூடி வாழும் மதுரை என்றால் திருமகளும் கலைமகளும் மலைமகளும் சேர்ந்து வாழும் மதுரை என்று பொருள் படுகிறது.
அதாவது, சகல செல்வங்களும் நிறைந்து விளங்கும் மதுரையில் செல்வம் கொழிக்கும் அத் திருநகரில், இந்தச் சிலம்பை வாங்க ஆள் கிடைக்காதே என்ற கருத்துப்பட "மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு மன்னா போகாதீர்" என்று மதுரை நகரைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கிறேனே தவிர, சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை" என்றார். சபையோர் சுவாமிகளின் புலமையை வியந்து கைதட்டிப் பாராட்டினார்கள்.
ஒருமுறை உடுமலைச் சரபம் முத்துச்சாமிக் கவிராயர் அவர்கள் சுவாமிகளை நோக்கி, "சங்கரதாச சுவாமிகளே! உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும் போல் இருக்கின்றன" என்றாராம். உடனே சுவாமிகள் சிரித்துக் கொண்டே, "கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக்கின்றனவே!" என்றாராம். புலவர்களின் விளையாட்டு பேச்சுகளிலே கூட இனிமை சொட்டுவதைக் காண்கிறோம். முள்ளும் முரடும், கல்லும் கரடும் என்பவற்றை மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் முரட்டுத்தனமான பாடலென்றும், கடினமான பாடலென்றும் தான் பொருள் தோன்றும். ஆனால் உட்பொருள் அதுவன்று. முள்ளும் முரடும் போல் என்றால், பலாசுளையைப் போல் இனிக்கிறது என்றும், கல்லும் கரடும் போல் என்றால், கற்கண்டைப் போன்றது என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
அக்காலத்தில் தமிழறிஞர்களையும் புலவர்களையும் ஆதரித்து வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் சுவாமிகளைக் காண விரும்பினார் மன்னருடைய செயலாளர் ஒருவர் சுவாமிகளை அணுகி, நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவருமில்லையே! சுவாமிகள் மட்டும் ஏன் இன்னும் மன்னர் மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினால் உங்களுக்கும் பெரும் பொருள் தருவாரே மன்னர்!" என்றார்.
சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்து பாடுவதில்லையென்று நோன்பு கொண்டவர். ஆதலால் மன்னர் மீது புகழ் மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பலர் வந்து இதுபற்றி வற்புறுத்தியபோது சினங்கொண்டு, "மன்னனும் மறவன்; நானும் மறவன்; என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன். எதற்காக நான் அவனைப் புகழவேண்டும்? மன்னன்மீது பாடினால்தான் எனது புலமை மன்னனுக்கும் புரியுமோ?" என்று கூறிவிட்டார். சுவாமிகள் இறுதி வரையில் மனிதர்களைப் பாடவேயில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
சுவாமிகள் மறைந்தார். அவரது பாடல்கள் என்றும் மறையா; அழியா. சுவாமிகளின் திருட்பெயர் தமிழ் உலகம் உள்ளளவும் மங்காது நின்று ஒளி வீசுமாக!!!
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கரதாஸ் சுவாமிகள் வரலாறு - நாடகக் கலைக் கட்டுரைகள், சுவாமிகள், என்றும், மதுரை, மாபாவியோர், வாழும், தோம், பொருள், தீம், போல், பாடல்கள், மன்னர், கூடி, நாடகக், வந்து, தும், சுவாமிகளின், தீர்ந்தோம், சபையோர், சங்கரதாஸ், என்றால், சொல், கோவலன், முள்ளும், அபிமன்யு, கல்லும், எழுதி, கட்டுரைகள், பாடல், கலைக், வரலாறு, முரடும், கொண்டு, மீண்டும், மறவன், மேடைக்கு, மனிதர்களைப், தமது, கரடும், என்றாராம், கவிராயர், சுவாமிகளை, என்றார், பாடினால், சேதுபதி, பாடலென்றும், மீது, கொள்ள, தமிழ், வந்த, மாலை, சுந்தரி, நமது, இந்தச், drama, arts, கலைகள், நாடகம், தொடங்கினார், அவரது, நான், மதுரையில், மதுரைக்கு, மன்னா, துன்பம், தும்பம், முடித்து, இவ்வளவு, எண்ணி, போகாதீர்