அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள்
அம்மா..! எந்த ஒரு பெண்ணுக்கும் இதைவிட உற்சாகம் தரும் சொல் வேறு எதுவும் இருக்கமுடியாது. கேட்டமாத்திரத்தில் உள்ளம் குளிரும்.இதமான உணர்வு பொங்கி பிரவாகித்து, முகத்தில் சந்தோஷம் பூக்கும்.பெண்குலத்துக்கென்றே இயற்கை அளித்திருக்கும் இணையற்றவரம் தாய்மை! தனது குடும்ப வாரிசுக்கு உயிர்கொடுத்து, உருவமும் கொடுக்கும் பிரம்மாக்கள் பெண்கள்தானே! ஆனாலும், இந்தப் பெருமையை அனுபவிக்கவிடாமல் பெண்களை பயமுறுத்துவதற்கென்றே ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன. இவற்றைக் கேட்டு தாய்மை என்பதையே திகிலான அனுபவமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள் பல பெண்கள். தாய்மை ரொம்ப சுலபமான விஷயமில்லைதான்.
கருவில் உதித்த சிசுவை பத்து மாதங்கள் வயிற்றில் சுமந்து, உடலளவிலும் உள்ளத்து அளவிலும் பல மாற்றங்களை சந்தித்து, அதைப் பிரசவிக்கும்வரை அவள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம்தான். சொல்லப்போனால், பிரசவம் என்பதே ஒரு பெண்ணுக்கு மறுஜென்மம் போன்றதுதான். ஆனாலும், தாய்மைப்பேறு என்பது பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. ஒவ்வொரு பெண்ணும் அனுபவித்து மகிழவேண்டிய அற்புதமான விஷயம்! பத்து மாதங்கள் பட்ட கஷ்டமெல்லாம் பிரசவித்த நொடியில், தனது குலக்கொடியை பார்த்தமாத்திரத்தில் பஞ்சாகப் பறந்துவிடுமே!
கருத்தரித்த நாளில் இருந்து, பிரசவிக்கும் நாள் வரை இளம்தாய்களுக்கு தோன்றும் சந்தேகங்கள் ஏராளம். அம்மாவிடம், மாமியாரிடம், அண்டை அயலாரிடம் கேட்டுத் தெளிவுபெற்றாலும், விடை சிக்காத எத்தனையோ கேள்விகள் அவர்களின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் முழுமையான விளக்கங்கள் தருவதும், தாய்மைப் பேறு பற்றிய கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் இந்த இணைப்பின் நோக்கம்.
உங்கள் சார்பாக நாங்கள் கேள்விகளை தொடுக்க, பத்து மாத பராமரிப்பு பற்றி விளக்கங்களும் டிப்ஸ்களும் தந்தார்கள் மகப்பேறு மருத்துவத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்ற டாக்டர் ஞானசெளந்தரி மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் ஆகியோர். வாருங்கள்.. தாய்மைப்பேறின் மகத்துவத்தை அறிவோம்!
கருத்தரித்திருப்பதை எப்படி உறுதிப்படுத்திக் கொள்வது?
மாதவிலக்கு தள்ளிப் போவது கர்ப்பத்துக்கான முதல் அறிகுறி. பிறகு, மருத்துவரை அணுகி சிறுநீர்ப் பரிசோதனை மூலம் அது கர்ப்பம்தானா என்பதை உறுதிசெய்துகொள்ளலாம். முன்புபோல 40, 45 நாட்களெல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, விலக்காக வேண்டிய நாளிலிருந்து இரண்டாவது நாளே சிறுநீர்ப் பரிசோதனை மூலம் கர்ப்பமா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு மருத்துவம் இப்போது முன்னேறியுள்ளது.
எந்த வயதில் கருத்தரித்தால் தாய்க்கும் சேய்க்கும் நலம்?
இருபத்தோரு வயதிலிருந்து முப்பத்தைந்து வயதுவரைதான் கருவுறுதலுக்கான சரியான காலகட்டம். அப்போதுதான் கருப்பை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்கும். கருவுறுதலுக்குக் கைகொடுக் கும் வகையில், மாதாமாதம் ஆரோக்கியமான சினைமுட்டை சீறிவருவதும் இந்த வயதில்தான். முப்பத்தைந்து வயதுக்குப் பிறகு கருத்தரித்தல் என்பது தாய்க்கும் அசெளகரியம். குழந்தையும் உடல் கோளாறுகளோடு பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.
மாதவிலக்குக்குப் பிறகு எந்தெந்த நாட்களில் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் கரு தங்கும்?
மாதவிலக்கு ஆன தினத்திலிருந்து பதினான்கு அல்லது பதினைந்தாவது நாள்தான் அந்த சுபயோகத் திருநாள். அப்பொழுதுதான் சினைப் பையிலிருந்து சினை முட்டை வெடித்து வெளியே வரும். மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் இந்த சினை முட்டை ஒரே ஒரு நாள்தான் உயிரோடு இருக்கும். அதற்குள் தாம்பத்ய உறவு நடந்தால்தான் பெண்ணின் வஜினாவில் சேரும் உயிரணு, சினை முட்டையோடு சேர்ந்து கருவாகும்.
இதில் ஆச்சரியமான விஷயம்.. சினைமுட்டை வெடிக்கும் அந்த நாளில் பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கும். அதை வைத்தும் இன்றுதான் ‘அந்த’ நாள் என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஆணும் பெண்ணும் உடலால் இணையும் உறவுதான் கருத்தரித்தலின் முதல் நிலை.. ஓ.கே. அதன்பிறகு என்ன நடக்கிறது?
உடல் உறவின்போது பெண்ணின் வஜினாவை அடையும் ஆணின் விந்துவில் கோடிக்கணக்கான உயிரணுக்கள் இருக்கும். அவை அனைத்தும் பெண்ணின் சினை முட்டையைத் தொட்டுவிட வேண்டும் என்று முட்டி மோதினாலும், கடைசியில் வெற்றி வாய்ப்பு ஒரே ஒரு உயிரணுவுக்குத்தான். உடனே, மற்ற உயிரணுக்கள் உள்ளே நுழைய முடியாதபடி சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிவிடும். இப்போது வெற்றி பெற்ற உயிரணுவும், சினை முட்டையில் இருக்கும் உட்கருவும் கைகோர்க்க, பெண் கர்ப்பிணி ஆகிறாள்.
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பது எப்போது, எப்படி தீர்மானிக்கப்படுகிறது?
பெண்குழந்தை பெற்றாள் என்பதற்காகவே மனைவியை வெறுக்கும் கொடிய மனம்கொண்ட கணவர்களுக்கு இந்த பதில் அதிர்ச்சியைத் தரும். ஆமாம், குழந்தை ஆணா, பெண்ணா என்பதை தீர்மானிப்பதே கணவன்தான். சினைமுட்டை யின் உள்ளே செல்லும் ஆணின் உயிரணுவில் உள்ள குரோமோசோம்தான் அதை தீர்மானிக் கிறது.. அதுவும்கூட உயிரணுவும் சினைமுட்டையும் சேரும் அந்த நொடியிலேயே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அம்மாவாகும் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி! - பெண்கள் மருத்துவக் கட்டுரைகள், பெண்கள், சினை, கட்டுரைகள், இருக்கும், articles, பத்து, என்பது, பெண்ணின், வேண்டிய, விஷயம், பிறகு, சினைமுட்டை, அம்மாவாகும், அந்த, என்பதை, தாய்மை, women, வழிகாட்டி, அன்பான, பெண்களுக்கு, ladies, மருத்துவக், உயிரணுக்கள், உடல், தாம்பத்ய, முப்பத்தைந்து, சேரும், இப்போது, தாய்க்கும், வெற்றி, உறவு, குழந்தை, உயிரணுவும், பெண்ணா, ஆணின், நாள்தான், உள்ளே, முட்டை, கேள்விகள், தரும், உணர்வு, தனது, ஆனாலும், எந்த, பிரசாத், பகுதி, section, ஞானசெளந்தரி, ஸ்ரீகலா, மாதங்கள், பெண்ணுக்கு, எப்படி, மாதவிலக்கு, சிறுநீர்ப், பரிசோதனை, பெற்ற, முழுமையான, பெண்ணும், நாளில், நாள், மூலம்