ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.096.திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
7.096.திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - பஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
975 |
தூவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் காவாயா கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் நாவாயால் உன்னையே நல்லன சொல்லுவேற் காவாஎன் பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.1 |
தூய்தாகிய வாயினையுடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி யிருக்கின்ற தலைவனே, உனக்குத் தொண்டு செய்பவர்கள் படுகின்ற துன்பங்களை நீக்கமாட்டாயோ! ஐவர்கள் என்னை எப்போதும் குறிக்கொண்டு நோக்கி, உன்னை அடையவொட்டாமல் தடுப்பினும், நாவையுடைய வாயால், உன்னையே, நல்லவற்றைச் சொல்லிப் புகழ்வேனாகிய எனக்கு, 'ஆவா' என்று இரங்கி, அச்சந் தீர்த்தருள்.
976 |
பொன்னானே புலவர்க்கு நின்புகழ் போற்றலாம் தன்னானே தன்னைப் புகழ்ந்திடுந் தற்சோதி மின்னானே செக்கர்வா னத்திள ஞாயி றன்னானே பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.2 |
பொன்போலச் சிறந்தவனே, தன்னாலே தன்னைப் புகழ்கின்ற, தானே விளங்குவதோர் ஒளியானவனே, ஒரோவொரு கால் தோன்றி மறைதலால் மின்னலொடு ஒப்பவனே, செக்கர் வானத்தில் தோன்றும் இளஞ்சூரியன் போலும் திருமேனியை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே, நின் புகழை எடுத்துரைத்தல், ஞானியர்க்கு இயல்வதாம்,
977 |
நாமாறா துன்னையே நல்லன சொல்லுவார் போமாறென் புண்ணியா புண்ணிய மானானே பேய்மாறாப் பிணமிடு காடுகந் தாடுவாய்க் காமாறென் பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.3 |
புண்ணியத்தின் பயனாயும், புண்ணியமாயும் உள்ளவனே, திருப்பரவையுண்மண்டளியுள் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நீ அருளாதுவிடின், நாப்பிறழாது உன்னையே நல்லனவற்றாற் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு? பேய்கள் நீங்காத, பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடியவராதல் எவ்வாறு?
978 |
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமைக் காக்கின்றார் கண்டுகொண் டார்ஐவர் காக்கிலும் வாக்கென்னும் மாலைகொண் டுன்னை என்மனத் தார்க்கின்றேன் பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.4 |
திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றார். அவ்வாறு காத்து நிற்பினும், சொல்லென்னும் மாலையால், உன்னை என் மனத்தில் இருத்துகின்றேன்; உன்னையே நினைக்கின்றேன்.
979 |
பஞ்சேரும் மெல்லடி யாளையொர் பாகமாய் நஞ்சேரும் நன்மணி கண்டம் உடையானே நெஞ்சேர நின்னையே உள்கி நினைவாரை அஞ்சேலென் பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.5 |
செம்பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை யுடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு, நஞ்சு காணப்படும், நல்ல நீலமணி போலும் கண்டத்தை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார்களை, 'அஞ்சேல்' என்று சொல்லிக் காத்தருள்.
980 |
அம்மானே ஆகம சீலர்க் கருள்நல்கும் பெம்மானே பேரரு ளாளன் பிடவூரன் தம்மானே தண்டமிழ் நூற்புல வாணர்க்கோர் அம்மானே பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.6 |
யாவர்க்கும் தலைவனே, ஆகம ஒழுக்கத்தை உடையவர்கட்கு, உனது திருவருளைத் தருகின்ற பெரியோனே, திருப்பிடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே, தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு, ஒப்பற்ற முதல்வனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவனே, உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை 'அஞ்சேல்' என்று சொல்லிக் காத்தருள்.
981 |
981 விண்டானே மேலையார் மேலையார் மேலாய எண்டானே எழுத்தொடு சொற்பொருள் எல்லாமுன் கண்டானே கண்டனைக் கொண்டிட்டுக் காட்டாயே அண்டானே பரவையுண் மண்டளி யம்மானே. |
7.096.7 |
'மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம், எண், எழுத்து, சொல், பொருள் மற்றும் எல்லாவற்றையும் முதலிற் படைத்தவனே, வானுலகத்தில் உள்ளவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, முன்பு என் கண்ணைக் கொண்டாய்; இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னைக் காட்டியருள்.
982 |
காற்றானே கார்முகில் போல்வதொர் கண்டத்தெம் கூற்றானே கோல்வளை யாளையொர் பாகமாய் நீற்றானே நீள்சடை மேல்நிறை யுள்ளதோர் ஆற்றானே பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.8 |
காற்றாய் உள்ளவனே, கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தையுடைய, எம் இனத்தவனே, கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு திரு நீற்றை அணிந்தவனே, நீண்ட சடையின் மேல் நிறைவுள்ளதாகிய ஒரு நதியை உடையவனே, திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே.
983 |
செடியேன்நான் செய்வினை நல்லன செய்யாத கடியேன்நான் கண்டதே கண்டதே காமுறும் கொடியேன்நான் கூறுமா றுன்பணி கூறாத அடியேன் நான் பரவையுண் மண்டளி அம்மானே. |
7.096.9 |
திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, நான் குற்றமுடையேன்; செய்யும் செயல்களை நல்லனவாகச் செய்யாத தீமையேன்; கண்டதையெல்லாம் பெற விரும்பும் கொடியேன்; உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடு மாற்றாற் பாடாத ஓர் அடியேன்.
984 |
கரந்தையும் வன்னியும் மத்தமுங் கூவிளம் பரந்தசீர்ப் பரவையுண் மண்டளி அம்மானை நிரம்பிய ஊரன் உரைத்தன பத்திவை விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே. |
7.096.10 |
கரந்தை, வன்னி, ஊமத்தை, கூவிளை இவைகளை அணிந்த பரவிய புகழையுடைய திருப்பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனை, அன்பு நிறைந்த நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை விருப்புற்றுப் பாடுவோர், மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.096.திருவாரூர்ப்பரவையுண்மண்டளி , தலைவனே, மண்டளி, பரவையுண், அம்மானே, மண்டளியில், திருப்பரவையுண், எழுந்தருளியிருக்கின்ற, உன்னையே, நல்லன, உன்னை, மேல், மேலையார், உள்ளவனே, திருமுறை, உடையவனே, திருவாரூர்ப்பரவையுண்மண்டளி, ஒப்பற்ற, தேவாரப், காத்தருள், அஞ்சேல், நினைக்கின்ற, அடியார்களை, சொல்லிக், ஏழாம், நான், இவைகளை, மேலோர்க்கு, அடியேன், கண்டதே, உள்ளார்க்கு, செய்யாத, கொண்டு, பாகமாகக், கண்டுகொண், தன்னைப், குறிக்கொண்டு, என்னை, எழுந்தருளி, டார்ஐவர், போலும், திருச்சிற்றம்பலம், பாகமாய், காணப்படும், யாளையொர், காக்கின்றார், பதிகங்கள், எவ்வாறு, காக்கிலும்