ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.091.திருவொற்றியூர்
7.091.திருவொற்றியூர்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. இது திருவிளம்பூதூரென்று வழங்குகிறது.
சுவாமிபெயர் - படம்பக்கநாதர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
923 |
பாட்டும் பாடிப் பரவித் திரிவார் ஈட்டு வினைகள் தீர்ப்பார் கோயில் காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே ஓட்டுந் திரைவாய் ஒற்றி யூரே. |
7.091.1 |
உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து நிற்பார் செய்த வினைகளை நீக்குகின்ற இறைவரது இடம், மக்கள் தம் பால் சேர்க்கின்ற பெரிய மரக்கலங்களையும், சிறிய படகு களையும் கரையிற் சேர்க்கின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
924 |
பந்துங் கிளியும் பயிலும் பாவை சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர் எந்தம் மடிகள் இறைவர்க் கிடம்போல் உந்துந் திரைவாய் ஒற்றி யூரே. |
7.091.2 |
பந்தாடுதலையும், கிளியை வளர்த்தலையும் பலகாலும் செய்கின்ற, பாவை போல்வாளாகிய உமையவளது மனத்தைக் கவர்பவரும், சிவந்த நெருப்புப்போலும் நிறத்தையுடைய வரும், எங்கள் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடமாவது, பல பொருள்களைத் தள்ளி வருகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
925 |
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன் கவளக் களிற்றின் உரிவை போர்த்தான் தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல் உகளுந் திரைவாய் ஒற்றி யூரே. |
7.091.3 |
பவளமும், கனியும் போலும் இதழையுடைய, பாவை போன்றவளாகிய உமையது பாகத்தை உடையவனும், கவளத்தை உண்கிற களிற்றி யானையினது தோலைப் போர்த்தவனும், தவழ்ந்து பெயரும் பிறை பொருந்திய சடையையுடையவனும் ஆகிய இறைவனுக்கு இடமாவது, புரளுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரே.
926 |
என்ன தெழிலும் நிறையும் கவர்வான் புன்னை மலரும் புறவில் திகழும் தன்னை முன்னம் நினைக்கத் தருவான் உன்னப் படுவான் ஒற்றி யூரே. |
7.091.4 |
முதலில் யான் நினைக்குமாறு தன்னைத் தருபவனும், பின்பு என்னால் நினைக்கப்படுவனும் ஆகிய இறைவன், எனது அழகையும், மன உறுதியையும் கவர்தற்பொருட்டு, திருவொற்றியூரில், புன்னை மலர்கள் மலர்கின்ற கானலிடத்தே விளங்குவான்.
927 |
பணங்கொள் அரவம் பற்றி பரமன் கணங்கொள் சூழக் கபாலம் ஏந்தி வணங்கும் இடைமென் மடவார் இட்ட உணங்கல் கவர்வான் ஒற்றி யூரே. |
7.091.5 |
படத்தையுடைய பாம்பைக் கையில்பிடித்திருப்பவனும், மேலானவனும், பூத கணங்கள் சூழத் தலையோட்டை ஏந்திச் சென்று, துவளுகின்ற இடையினையுடய மகளிர் இடுகின்ற சோற்றை ஏற்பவனும் ஆகிய இறைவன் திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான்.
928 |
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன் விடையார் கொடியன் வேத நாவன் அடைவார் வினைகள் அறுப்பான் என்னை உடையான் உறையும் ஒற்றி யூரே. |
7.091.6 |
படைக்கலத் தன்மை பொருந்திய மழுவையும், பால்போலும் வெள்ளிய திருநீற்றையும், இடபம் பொருந்திய கொடியையும், வேதத்தை ஓதுகின்ற நாவையும் உடையவனும், தன்னை அடைக்கலமாக அடைபவரது வினைகளை ஒழப்பவனும், என்னை ஆளாக உடையவனும் ஆகிய இறைவன்' திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான்.
929 |
சென்ற புரங்கள் தீயில் வேவ வென்ற விகிர்தன் வினையை வீட்ட நன்று நல்ல நாதன் நரையே றொன்றை உடையான் ஒற்றி யூரே. |
7.091.7 |
வானத்தில் உலாவிய மதில்கள் நெருப்பில் வெந்தொழியுமாறு அவற்றை வென்ற, வேறுபட்ட தன்மையை உடையவனும், வினைகளைப் போக்குதற்கு மிகவும் நல்ல கடவுளும், வெண்மையான இடபம் ஒன்றை உடையவனும் ஆகிய இறைவன், திருவொற்றியூரிலே நீங்காது எழுந்தருளியிருப்பான்.
930 |
கலவ மயில்போல் வளைக்கை நல்லார் பலரும் பரவும் பவளப் படியான் உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான் உலவுந் திரைவாய் ஒற்றி யூரே. |
7.091.8 |
தோகையையுடைய மயில்போலும், வளையை அணிந்த கைகளையுடைய அழகிய மகளிர் பலரும் துதிக்கின்ற, பவளம்போலும் உருவத்தையுடையவனாகிய இறைவன், கரையில் வந்து உலாவுகின்ற கடல் அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே, உலகில் உள்ளவரது வினைகளை எல்லாம் தீர்ப்பான்.
931 |
பற்றி வரையை யெடுத்த அரக்கன் இற்று முரிய விரலால் அடர்த்தார் எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம் ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே. |
7.091.9 |
தமது மலையைப்பற்றி அசைத்த அரக்கனாகிய இராவணனை, அவனது உறுப்புக்கள் ஒடிந்து முரியும்படி நெருக்கின வராகிய இறைவர், கடல் நீர் சூழ்ந்த, அலைகள் பொருந்திய திருவொற்றியூரில் இருந்தே, அடியவரைத் தாக்குகின்ற வினைகளை நீக்குவார்.
932 |
ஒற்றி யூரும் அரவும் பிறையும் பற்றி யூரும் பவளச் சடையான் ஒற்றி யூர்மேல் ஊரன் உரைத்த கற்றுப் பாடக் கழியும் வினையே. |
7.091.10 |
ஒன்றை ஒன்று உராய்ந்து ஊர்கின்ற பாம்பும், பிறையும் பற்றுக்கோடாக நின்று ஊரும் பவளம்போலும் சடையை உடைய இறைவனது திருவொற்றியூர்மேல் நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களை நன்கு கற்றுப்பாடினால், வினைகள் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.091.திருவொற்றியூர் , ஒற்றி, யூரே, பொருந்திய, ஆகிய, இறைவன், கடல், அலைகள், திரைவாய், உடையவனும், வினைகள், பாவை, வினைகளை, திருமுறை, பற்றி, எழுந்தருளியிருப்பான், நீங்காது, திருவொற்றியூரிலே, திருவொற்றியூரில், திருவொற்றியூர், திருவொற்றியூரே, நல்ல, வென்ற, உடையான், ஒன்றை, இடபம், தீர்ப்பான், யூரும், பிறையும், இருந்தே, பவளம்போலும், என்னை, பலரும், திருச்சிற்றம்பலம், புன்னை, கவர்வான், இடமாவது, தேவாரப், தன்னை, ஏழாம், கிடம்போல், மகளிர், பதிகங்கள், தீர்ப்பார், சேர்க்கின்ற