ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.037.திருவாரூர்
7.037.திருவாரூர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வன்மீகநாதர்.
தேவியார் - அல்லியங்கோதையம்மை.
372 |
குருகுபா யக்கொழுங் கரும்புக ணெரிந்தசா றருகுபா யும்வயல் அந்தண்ஆ ரூரரைப் பருகுமா றும்பணிந் தேத்துமா றுந்நினைந் துருகுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. |
7.037.1 |
குருகுகளே, நீங்கள் பறந்து உலாவுவதனால் செழுமையான கரும்புகள் நெரிந்து பெருகிய சாறு, அருகாகச் சென்று பாய்கின்ற வயல்களையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை, யான் உள்ளத்தால் திளைக்கின்றவாறும், திசைநோக்கி வணங்கித் துதிக்கின்றவாறும், நினைந்து நெஞ்சு உருகுகின்றவாறும் ஆகிய இவைகளை என் பொருட்டு அவர்க்குத் தெரிவிக்க வல்லீர்களோ?
373 |
பறக்குமெங் கிள்ளைகாள் பாடுமெம் பூவைகாள் அறக்கணென் னத்தகும் அடிகள்ஆ ரூரரை மறக்ககில் லாமையும் வளைகள்நில் லாமையும் உறக்கமில் லாமையும் உணர்த்தவல் லீர்களே. |
7.037.2 |
பறக்கும் இயல்புடைய எங்கள் கிளிகளே, பாடும் இயல்புடைய எங்கள் நாகணவாய்ப் புட்களே, அறத்திற்குக் கண் என்று சொல்லத் தக்க தலைவராகிய திருவாரூர் இறைவரை, யான் ஒரு ஞான்றும் மறக்க இயலாமையையும்,. அது காரணமாக எனது கைவளைகள் நில்லாது கழன்று வீழ்தலையும், கண்கள் உறங்குதல் இல்லாமையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?
374 |
சூழுமோ டிச்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் ஆளும்அம் பொற்கழல் அடிகள்ஆ ரூரர்க்கு வாழுமா றும்வளை கழலுமா றும்மெனக் கூழுமா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. |
7.037.3 |
சுற்றிலும் ஓடிச் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, அடியவர்களை ஆளுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் இவ்வுடம்பின் நீங்காது வாழுமாறும், என்வளைகள் கழலுமாறும், மாறாத முறையும் என்னிடத்து மாறி நிகழுமாறும் ஆகிய இவைகளை என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?
375 |
சக்கிரவா கத்திளம் பேடைகாள் சேவல்காள் அக்கிரமங் கள்செயும் அடிகள்ஆ ரூரர்க்கு வக்கிரமில் லாமையும் வளைகள்நில் லாமையும் உக்கிரமில் லாமையு முணர்த்தவல் லீர்களே. |
7.037.4 |
'சக்கிரவாகம்' என்னும் இனத்து, இளைய பேடைகளே, சேவல்களே, முறையல்லாதவற்றைச் செய்கின்ற தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, யான் மனம் மாறுபடாமையையும், எனது வளைகள் நில்லாது கழலுதலையும், அவர்மீது புலவி தோன்றாமையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?
376 |
இலைகொள்சோ லைத்தலை இருக்கும்வெண் ணாரைகாள் அலைகொள்சூ லப்படை யடிகள்ஆ ரூரர்க்குக் கலைகள்சோர் கின்றதுங் கனவளை கழன்றதும் முலைகள்பீர் கொண்டதும் மொழியவல் லீர்களே. |
7.037.5 |
இலைகளைக் கொண்ட சோலையிடத்து இருக்கின்ற வெள்ளிய நாரைகளே, அழித்தல் தொழிலைக் கொண்ட சூலப்படையையுடைய தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது உடை நெகிழ்கின்றதையும், உயர்ந்த வளைகள் கழன்றொழிந்ததையும், கொங்கைகள் பசலை அடைந்ததையும் என்பொருட்டுச் சொல்ல வல்லர்களோ?
377 |
வண்டுகாள் கொண்டல்காள் வார்மணற் குருகுகாள் அண்டவா ணர்தொழும் அடிகள்ஆ ரூரரைக் கண்டவா றுங்காமத் தீக்கனன் றெரிந்துமெய் உண்டவா றும்மிவை உணர்த்தவல் லீர்களே. |
7.037.6 |
வண்டுகளே, மேகங்களே, நுண்ணிய மணல்மேல் இருக்கின்ற குருகுகளே, வானத்தில் வாழ்வோராகிய தேவர்கள் வணங்குகின்ற தலைவராகிய திருவாரூர் இறைவரை ஒரு நாள் யான் கண்டவாறும், அன்றுமுதல் காமத் தீ, கனன்று எரிந்து என் உடம்பை உண்டுவிட்ட வாறும் ஆகிய இவைகளை என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?
378 |
தேனலங் கொண்டதேன் வண்டுகாள் கொண்டல்காள் ஆனலங் கொண்டவெம் மடிகள்ஆ ரூரர்க்குப் பானலங் கொண்டவெம் பணைமுலை பயந்துபொன் ஊனலங் கொண்டதும் உணர்த்தவல் லீர்களே. |
7.037.7 |
தேனினது இன்பத்தை நுகர்ந்த தேன்களே, வண்டுகளே, மேகங்களே, பசுவினது பயனாகிய பால் முதலியவற்றை உவந்து கொண்ட எம் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு,பாலாகிய நற்பொருளைக் கொண்ட எனது பருத்த கொங்கைகள் பசப்பெய்தி, பொன்போலும் பசலை என் மேனியினது அழகையெல்லாம் கொள்ளை கொண்டமையை என் பொருட்டுத் தெரிவிக்கவும் வல்லீர்களோ?
379 |
சுற்றுமுற் றுஞ்சுழன் றுழலும்வெண் ணாரைகாள் அற்றமுற் றப்பகர்ந் தடிகள்ஆ ரூரர்க்குப் பற்றுமற் றின்மையும் பாடுமற் றின்மையும் உற்றுமற் றின்மையும் உணர்த்தவல் லீர்களே. |
7.037.8 |
சுற்றியுள்ள இடம் முழுவதும் சுழன்று திரியும் வெள்ளிய நாரைகளே, யாவர்க்கும் தலைவராகிய திருவாரூர் இறைவருக்கு, எனது துன்பத்தை முடியச் சொல்லி, எனக்கு வேறு பற்றுக் கோடு இன்மையையும், யான் பலராலும் அவர் தூற்றப்படுதலையும், எனக்கு உறவாவார் வேறு இன்மையையும் என்பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?
380 |
குரவநா றக்குயில் வண்டினம் பாடநின் றரவமா டும்பொழில் அந்தண்ஆ ரூரரைப் பரவிநா டும்மதும் பாடிநா டும்மதும் உருகிநா டும்மதும் உணர்த்தவல் லீர்களே. |
7.037.9 |
குராமரங்கள் தமது மலர்மணத்தை வீச, குயில்களும் வண்டுக் கூட்டமும் பாட, பாம்புகள் படமெடுத்து நின்று ஆடுகின்ற சோகைளையுடைய அழகிய தண்ணிய திருவாரூர் இறைவரை யான் தொழுது தேடுகின்ற வகையையும், துதித்துத் தேடுகின்ற வகையையும், நெஞ்சுருகித் தேடுகின்ற வகையையும், என்பொருட்டு அவருக்குத் தெரிவிக்க வல்லீர்களோ?
381 |
கூடும்அன் னப்பெடை காள்குயில் வண்டுகாள் ஆடும்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைப் பாடுமா றும்பணிந் தேத்துமா றுங்கூடி ஊடுமா றும்மிவை யுணர்த்தவல் லீர்களே. |
7.037.10 |
நும் சேவலொடு கூடுகின்ற அன்னப் பெடைகளே, குயில்களே, வண்டுகளே, நடனம் ஆடுகின்ற அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய திருவாரூர் இறைவரை அடையப் பெற்ற பின்புயான் அவரைப் பாடும் முறையையும், பணிந்து புகழும் முறையையும், அவரொடு கூடுதலும் ஊடுதலும் செய்யும் முறையையும் இவை என்று அவருக்கு என் பொருட்டுத் தெரிவிக்க வல்லீர்களோ?
382 |
நித்தமா கந்நினைந் துள்ளமேத் தித்தொழும் அத்தன்அம் பொற்கழ லடிகள்ஆ ரூரரைச் சித்தம்வைத் தபுகழ்ச் சிங்கடி யப்பன்மெய்ப் பத்தனூ ரன்சொன்ன பாடுமின் பத்தரே. |
7.037.11 |
அடியவராய் உள்ளவர்களே. மெய்யுணர்ந்தோர் எல்லாம் உள்ளத்தால் நிலையாக நினைந்து, வாயால் துதித்து, கையால் தொழுகின்ற தந்தையாரும், அழகிய பொன்போலும் திருவடிகளையுடைய தலைவரும் ஆகிய திருவாரூர் இறைவரை, அவரையே எப்பொழுதும் சித்தத்தில் வைத்ததனால் வந்த புகழையுடையவனும், சிங்கடிக்குத் தந்தையும், உண்மையான திருத்தொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாடுமின்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.037.திருவாரூர் , திருவாரூர், லீர்களே, வல்லீர்களோ, தெரிவிக்க, தலைவராகிய, உணர்த்தவல், யான், இறைவரை, அழகிய, எனது, இறைவருக்கு, ஆகிய, லாமையும், றும்மிவை, பொன்போலும், அடிகள்ஆ, கொண்ட, திருமுறை, அவருக்குத், வண்டுகளே, என்பொருட்டு, ணாரைகாள், வெள்ளிய, முறையையும், பொருட்டுத், திருவடிகளையுடைய, நாரைகளே, டும்மதும், வண்டுகாள், வகையையும், ரூரரைப், தேடுகின்ற, றின்மையும், இவைகளை, ஆடுகின்ற, வேறு, இன்மையையும், பாடுமின், இருக்கின்ற, கொங்கைகள், எனக்கு, பொற்கழ, கொண்டவெம், லடிகள்ஆ, கொண்டல்காள், மேகங்களே, பசலை, ரூரர்க்குப், றுழலும்வெண், தேத்துமா, குருகுகளே, தண்ணிய, உள்ளத்தால், றும்பணிந், அந்தண்ஆ, ஏழாம், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், நினைந்து, வளைகள்நில், சுழன்று, திரியும், வளைகள், என்பொருட்டுத், ரூரர்க்கு, நில்லாது, இயல்புடைய, எங்கள், பாடும், கொண்டதும்