ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.011.திருப்பூவணம்
7.011.திருப்பூவணம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்.
தேவியார் - மின்னாம்பிகையம்மை.
104 |
திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையொர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ! |
7.011.1 |
திருமால், பிரமன் ஆகிய காரணக் கடவுளரிலும் மேலான செல்வத்தை யுடையவரும், தமது திருமேனியில் உமையம்மையை ஒரு பாகமாக உடையவரும், அன்புடையவராய்த் தம்மை அடைவாரது வினைகளைத் தீர்க்கும் விருப்பம் உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, 'திருப்பூவணம்' என்னும் தலம் இதுதானோ?
105 |
எண்ணி யிருந்து கிடந்தும் நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ! |
7.011.2 |
இருப்பினும், கிடப்பினும், நடப்பினும், தம்மையே முதல்வராக ஓர்ந்து நினைவாரது வினைகளை நீக்குபவரும், அறவடி வினருமாகிய இறைவர், பண்ணாகிய இசைபோலப் பொருந்திய மொழியினையுடைய மகளிர் பலர் இனிய பாடல்களைப்பாட எழுந்தருளியிருக்கின்ற, 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
106 |
தௌளிய பேய்பல பூத மவற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும் அவர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ! |
7.011.3 |
தௌவையுடைய பல பேய்பூதங்களுடன், செறிந்த இருளில் நடனத்தைப் புரிகின்றவரும், வஞ்சகராகின்றவருக்குத் தாமும் வஞ்சகராவோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
107 |
நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ! |
7.011.4 |
நிலத்தை வாழும் இடமாக உடைய மான் கன்று கையிடத்ததாக, தெய்வத் தீயாம் தன்மையையுடைய பெரிய மழுவை ஒரு கையிற் பிடித்து, அதனோடே மற்றொரு கையில் நெருப்பை யுடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
108 |
நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடிஅணி வார்உறை பூவணம் ஈதோ! |
7.011.5 |
பெருமித நடையையுடைய நல்ல ஆனேற்றின் மீது ஏறுபவரும், மகளிரது வாயில் தோறும் சென்று, 'பிச்சை இடுமின்' என்று இரப்பவரும், உடுக்கை போலும் இடையினையுடைய தேவியின் அழகிய மேனியின் பொலிவோடு, சாம்பலைப் பூசிக்கொள் வோரும் ஆகிய இறைவர் எழுந்தருளியுள்ள, 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
109 |
மின்னனை யாள்திரு மேனி விளங்கஓர் தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ! |
7.011.6 |
மின்னல்போலும் மாதராள் திருமேனி தனது திரு மேனியின் ஒரு பாகத்தில் விளங்க விரும்பிவைத்த 'சங்கரன்' என்னும் பெயரையுடையவனும், தன்னை நினையாதவரது அரண்களை முன்பு தீக்கு இரையாக்கிய, பொன் போலும் நிறத்தை யுடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
110 |
மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லாலிற வூன்றி நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம் புக்குறை வான்உறை பூவணம் ஈதோ! |
7.011.7 |
தனது தலைமையை எல்லை கடந்து மதித்தவனாகிய இராவணனது தீய எண்ணங் காரணமாக, வெகுளி நகை செய்து, தனது இடமாகிய கயிலையை, அவன் நெரியுமாறு, விரலால் சிறிதே ஊன்றி, தன்னையே உருகி நினைவாரது ஒப்பற்ற நெஞ்சிலே குடிபுகுந்து, ஒருஞான்றும் நீங்காது உறையும் இறைவன் எழுந்தருளியுள்ள, 'திருப்பூவணம்' என்னும் திருத்தலம் இதுதானோ?
111 |
சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் ஆர விருப்பிட மாவுறை வான்றனை ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே. |
7.011.10 |
அழகினால் மிகப் பொலிகின்ற, 'திருப்பூவணம்' என்னும் திருத்தலத்தில், விருப்பம் மிக இடமாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவனை, நம்பியாரூரன் பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் இந்நிலவுலகில் பாடுபவர், தம் பாவத்தை அறுப்பவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏழாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 7.011.திருப்பூவணம் , திருப்பூவணம், என்னும், பூவணம், இதுதானோ, ஆகிய, திருத்தலம், எழுந்தருளியுள்ள, இறைவர், தனது, திருமுறை, போலும், கையில், தாமும், புள்ளுவ, மேனியின், மாலைகள், இறைவன், சங்கரன், ஏழாம், னார்உறை, உடையவரும், யுடையவரும், வார்வினை, தீர்க்கும், விருப்பம், திருச்சிற்றம்பலம், யார்உறை, தேவாரப், பதிகங்கள், நினைவாரது