ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.076.திருக்கானூர்
5.076.திருக்கானூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - செம்மேனிநாயகர்.
தேவியார் - சிவயோகநாயகியம்மை.
1830 | திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாம் கருவ னாகி முளைத்தவன் கானூரில் பரம னாய பரஞ்சுடர் காண்மினே. |
5.076.1 |
கானூரில் தெய்வச்சுடராகிய இறைவன் திருமகள் கணவனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உறைகின்ற அழகுடையவனாகிய பிரமனும் ஆகி உலகத்தின் எல்லா உயிர்களுக்கும் கருவிலேயே உற்றுக் காப்பவனாகி முளைத்தவன் ஆவன்.
1831 | பெண்டிர் மக்கள் பெருந்துணை நன்னிதி உண்டின் றேயென்று கவன்மி னேழைகாள் கண்டு கொண்மின்நீர் கானூர் முளையினைப் புண்டரீகப் பொதும்பி லொதுங்கியே. |
5.076.2 |
அறிவற்றவர்களே! பெண்டிர், மக்கள் பெருந்துணையாகவுள்ள நல்ல செல்வம் இன்று உண்டு என்று மகிழாதீர்;தாமரையாகிய பொதும்பில் ஒதுங்கியே கானூர் முளையாகிய கடவுளை நீர் கண்டுகொள்வீராக; (அவரே பெருந்துணையாவார்).
1832 | தாயத் தார்தமர் நல்நிதி யென்னுமிம் மாயத் தேகிடந் திட்டு மயங்கிடேல் காயத் தேயுளன் கானூர் முளையினை வாயத் தால்வணங் கீர்வினை மாயவே. |
5.076.3 |
பங்காளியர், தம் சுற்றத்தார், நல்ல செல்வம் என்னும் இம்மாயத்திலே கிடந்து மயங்கவேண்டா; உம் உடலுள்ளேயே உள்ளவனாகிய கானூர் முளையாகிய பெருமானை உங்கள் வினைகள்கெட வாயாற் கூறிப் பரவி வணங்குவீராக.
1833 | குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண் நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன் அறிய லுற்றிரேல் கானூர் முளையவன் செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே. |
5.076.4 |
இரத்தற் குறிப்பொடு நின்று ஏற்று உண்ணும் ஆடையற்ற அமண்நெறியைவிட்டு நீங்கி எம்பிரான் அருள்நிறையும் கழலைப் பற்றினேன்; அதற்குக் காரணம் அறியலுறுவீரேல், கானூர்முளையாகிய கடவுள் என்சிந்தையில் செறிவு செய்திட்டிருப்பதே ஆகும்.
1834 | பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்த னென்று வியந்திட லேழைகாள் சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே. |
5.076.5 |
அறிவற்றவர்களே! பொத்தலை உடையதும், மண்சுவர் உடையதுமாகிய இழிந்த இக்குடிசையைத் தன்மெய் என்று ஒவ்வொருவரும் வியந்திடல் வேண்டா. சித்தர்களும் பத்தர்களும் சேர்கின்ற திருக்கானூரில் இறைவன் பாதம் அடைதலே உமக்குக் கருமம் ஆகும்.
1835 | கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன் செல்வம் மல்கு திருக்கானூ ரீசனை எல்லி யும்பக லும்மிசை வானவா சொல்லி டீர்நுந் துயரங் கள்தீரவே. |
5.076.6 |
கல்வியும், ஞானமும், கலையும் ஆகியவற்றின் பொருளாயிருப்பவனும், செல்வம் மல்கும் திருக்கானூரில்இருப்பவனும் ஆகிய ஈசன் இரவும் பகலும் இசைந்து அருள்புரிய ஆனவாற்றை உம் துயரங்கள் தீரச் சொல்லுவீராக.
1836 | நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதங் கானூர் முளைத்தவன் சேர்வு மொன்றறி யாது திசைதிசை ஓர்வு மென்றில ரோடித் திரிவரே. |
5.076.7 |
நீரும், மண்ணும், தீயும், வெயிலும், முகிலும், காற்றும் ஆகிய அனைத்துமாகிக் கானூரில் முளைத்த கடவுளைச் "சேர்தும்" என்ற ஒன்றை அறியாது திசைதோறும் திசைதோறும் உணர்ச்சி சிறிதும் இலராய் ஓடித் திரிவர் உலகத்தவர்.
1837 | ஓமத் தோடயன் மாலறி யாவணம் வீமப் பேரொளி யாய விழுப்பொருள் காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே. |
5.076.8 |
வேள்விகளாலும். திருமாலும், பிரமனும் அறியாதவண்ணம் இடுகாட்டகத்தே பேரொளியாகிய உயர்ந்த பொருளும், காமனைக் காய்ந்தவனும் ஆகிய கானூர் முளைத்த கடவுள் என் சிந்தையே பாதுகாவலுக்குரிய இருப்பாகக் கொள்வன்.
1838 | வன்னி கொன்றை யெருக்கணிந் தான்மலை உன்னி யேசென் றெடுத்தவ னொண்திறல் தன்னை வீழத் தனிவிரல் வைத்தவன் கன்னி மாமதிற் கானூர்க் கருத்தனே. |
5.076.10 |
இளமையுடைய மாமதில் சூழ்ந்த கானூர்க்கருத்தன், வன்னியும், கொன்றையும், எருக்கும் அணிந்த தனக்குரிய மலையைப் பெயர்த்தெடுக்க உன்னிச்சென்று எடுத்தவனாகிய இராவணனின் ஒண்திறல் தன்னை வீழும்படியாகத் தனி விரல் ஒன்றினால் வைத்து அடர்த்தவனாவன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.076.திருக்கானூர் , கானூர், முளைத்தவன், செல்வம், கானூரில், திருமுறை, சிந்தையே, ஆகிய, திருக்கானூர், முளைத்த, திசைதோறும், செறிவு, தன்னை, கடவுள், பற்றினேன், பாதம், ஆகும், நீரும், அறிவற்றவர்களே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், இறைவன், திருமாலும், நல்ல, மக்கள், பெண்டிர், பிரமனும், முளையாகிய