ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.062.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
5.062.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொர்ணபுரீசுவரர்.
தேவியார் - சொர்ணபுரிநாயகியம்மை.
1690 | ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே. |
5.062.1 |
ஒப்பற்றவனும், மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும், அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும், தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று, கண்டு, உய்ந்தேன்.
1691 | யாவ ருமறி தற்கரி யான்றனை மூவ ரின்முதல் லாகிய மூர்த்தியை நாவி னல்லுரை யாகிய நாதனைத் தேவனைப் புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே. |
5.062.2 |
எல்லோரானும் அறிதற்கு அருமை உடையவனும், மும்மூர்த்திகளுக்கும் முதலாகிய கடவுளும், நாவில் நல்ல உரையாகி அருளும் நாதனும், தேவனுமாகிய பெருமானைப் புத்தூரிலே சென்று கண்டு உய்ந்தேன்.
1692 | அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே. |
5.062.3 |
அன்பே வடிவானவனும், அடியார்கள் துன்பங்களை நீக்குபவனும், செம்பொன் மேனியனும் விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருப்பவனும் ஆகிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரில் உள்ள நம் பெருமானைக் கண்டு நான் உய்யப் பெற்றேன்.
1693 | மாதனத்தைமா தேவனை மாறிலாக் கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றெனே. |
5.062.4 |
பெருஞ்செல்வமாகிய அருட்செல்வம் உடையானும், மகாதேவனும், மாறுபாடில்லாத பஞ்சகவ்வியத் திருமுழுக்குக் கொள்பவனும், சங்கவெண்குழையணிந்த காதுடையவனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரின் நாதனைக் கண்டு நான் உய்யப்பெற்றேன்.
1694 | குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் அண்ட னைக்கண் டருவினை யற்றெனே. |
5.062.5 |
மிகுந்த பல குற்றத்தை நீக்கி என்னை ஆட்கொண்டு நல்ல அருள் திறம் காட்டிய கூத்தனும், திருநீல கண்டனும் ஆகிய கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் பொருந்தியிருக்கும் பெருமானைக் கண்டு அருவினைகள் அற்றேன்.
1695 | பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே. |
5.062.6 |
பாசமாகிய கட்டினை அறுத்து, என்னை ஆட்கொண்ட பெருவீரனும், மணவாளக்கோலம் உடையானும், பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று.
1696 | உம்ப ரானை யுருத்திர மூர்த்தியை அம்ப ரானை யமலனை யாதியைக் கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே. |
5.062.7 |
தேவர் உலகத்துக்கும் அப்பால் உள்ளவனும், உருத்திரமூர்த்தியும், அம்பர்த்தலத்து எழுந்தருளியிருப்பவனும், மலம் அற்றவனும், ஆதியானவனும், சங்குகளையுடைய நீர்பாயும் கடுவாய்க்கரைக்கண் தென்புத்தூரில் உள்ளவனும் ஆகிய எம்பெருமானைக் கண்டதனால் அடியேற்கு இன்பம் ஆயிற்று.
1697 | மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே. |
5.062.8 |
குற்றம் நிறைந்த பாசமாகிய மயக்கத்தை அறுமாறு செய்து என்னுள்ளத்துக்குள் நேசம் ஆகிய நித்தமணாளன் என்ற திருப்பேர்கொண்டவனும், பூசத்திருநாளில் ஆடற்குரிய கடுவாய்க் கரைத் தென்புத்தூரின்கண் உள்ளவனும் ஆகிய ஈசனே என்று கூற அடியேற்கு இன்பமாயிற்று.
1698 | இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தெனே. |
5.062.9 |
பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத் தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல், கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன்.
1699 | அரக்க னாற்ற லழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி யருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தெனே. |
5.062.10 |
இராவணனது ஆற்றலை அழித்து அவன்பாடல் கேட்டுப் பின்னர் இரங்கி அருள்புரியும் ஈசனாகிய, அலைகளைக் கொண்ட கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.062.திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் , தென்புத்தூர், வாய்க்கரைத், ஆகிய, தென்புத்தூரில், கண்டு, னைக்கடு, உள்ளவனும், நீர்க்கடு, அடியேற்கு, உய்ந்தேன், கடுவாய்க்கரைத், திருமுறை, தாயிற்றே, நாதனைக், கடுவாய்க், நான், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர், உள்ள, பெருமானைக், காட்டிய, கண்டதனால், ரானை, பெரிய, பாசமாகிய, என்னை, உடையானும், னைக்கண்டு, தேவர்க்கும், னையடி, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், ஐந்தாம், தேவாரப், சென்றுகண், டுய்ந்தெனே, நானுய்யப், பெற்றெனே, நல்ல, மூர்த்தியை, பெருமானைப், சென்று, கரைத்