ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.029.திருவாவடுதுறை
5.029.திருவாவடுதுறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1355 | நிறைக்க வாலிய ளல்லளிந் நேரிழை மறைக்க வாலிய ளல்லளிம் மாதராள் பிறைக்க வாலப் பெரும்புன லாவடு துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே. |
5.029.1 |
பிறையோடு கூடிய செஞ்சடையில் கங்கையாகிய பெரும்புனலை உடையவரும், திருவாவடுதுறையில் உள்ள கபாலியுமாகிய சிவபெருமானோடு ஆடிய திருநீற்றினை நிறைக்கத் தூய்மையுடையவள் அல்லள் இந்த நேரிழையணிந்த பெண்; அன்றியும் இப்பெண் அதனால் வரும் துயரங்களை மறைக்கும் வல்லமை உடையலளுமல்லள்.
1356 | தவள மாமதிச் சாயலோர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞக னெம்மிறை அளவு கண்டில ளாவடு தண்டுறைக் களவு கண்டன ளொத்தனள் கன்னியே. |
5.029.2 |
இக்கன்னி, வெள்ளிய பெருமைமிகுந்து மதிக்கத்தக்க சாயலை உடைய சந்திரனின் பிளவாகிய பிறையினை சூடிய எம்மிறைவனாகிய பிஞ்ஞகனின் அன்பின் அளவை முற்றும் கண்டலளேனும், திருவாவடுதுறையிலே அவனைக் களவொழுக்கத்தாற் கண்டவளை ஒத்தாள் ஆயினள்.
1357 | பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை ஓதி யென்னுளங் கொண்டவ னொண்பொருள் ஆதி ஆவடு தண்டுறை மேவிய சோதி யேசுட ரேயென்று சொல்லுமே. |
5.029.3 |
இப்பெண், தன் திருமேனியில் ஒரு பாதிப் பெண்ணினை உடையவனே என்றும், பலவாகிய மறைகளை ஓதியருளி என்னுள்ளத்தைக் கவர்ந்துகொண்டவனே என்றும், ஒள்ளிய உலகத்துப் பொருள்களுக்கெல்லாம் ஆதியானவனே என்றும், திருவாவடுதுறையில் விரும்பியெழுந்தருளியிருக்கும் சோதியே என்றும், சுடரே என்றும் சொல்லும் இயல்பினள்.
1358 | கார்க்கொண் மாமுகில் போல்வதோர் கண்டத்தன் வார்க்கொண் மென்முலை சேர்ந்திறு மாந்திவள் ஆர்க்கொள் கொன்றைய னாவடு தண்டுறைத் தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே. |
5.029.4 |
இப்பெண், கருமையைக்கொண்ட பெரிய முகில் போலும் கண்டத்தை உடையவனும், கச்சினைக்கொண்ட மெல்லிய முலையாளாகிய உமையம்மையைச் சேர்ந்து இறுமாந்து இவளது நெஞ்சைப் பிணைக்கும் கொன்றையினை உடையவனும் ஆகிய திருவாவடுதுறைப் பெருமானின் திருமார்பில் அணிந்துள்ள கொன்றைமாலைக்கு மனம் தாழ்கின்றனள்; காண்பீராக.
1359 | கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் பருகு பாலமு தேயெனும் பண்பினன் அருகு சென்றில ளாவடு தண்டுறை ஒருவ னென்னை யுடையகோ வென்னுமே. |
5.029.5 |
இப்பெண், கருத்த கண்டத்தை உடையவனும், கதிர்காய்கின்ற ஒளிவடிவினனும், பருகுதற்கினிய பால் அமுது என்று கூறத்தக்க பண்பை உடையவனுமாகிய அப்பெருமான் அருகிற் சென்றனள். அல்லளாயினும், அவன்பாற்கொண்ட காதல் மிகுதியால் "என்னை உடையவன் திருஆவடுதண்டுறையில் உறையும் தலைவனே" என்று கூறும் இயல்பினள்.
1360 | குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமும் தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான் அழக னாவடு தண்டுறை யாவெனக் கழலுங் கைவளை காரிகை யாளுக்கே. |
5.029.6 |
இவ்வழகுடைய பெண், கொன்றை மலர்களும், கூவிளந்தளிர்களும், ஊமத்தமலர்களும் சூடிய சடையும், தையல் ஒரு பாகமும் கொண்ட ஆவடுதண்டுறைக்குரிய அழகனே என்று விரும்பி அழைத்தலால், கைவளைகள் கழலுகின்ற நிலைமையள் ஆயினள்.
1361 | பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும் அஞ்சு வாளல்ல ளாவடு தண்டுறை மஞ்ச னோடிவ ளாடிய மையலே. |
5.029.7 |
இப்பெண் திருவாவடுதண்துறையில் உள்ள, புலன் ஐந்தும் வென்ற பெருவீரனாகிய சிவபெருமானோடு ஆடிக் கொண்ட மயக்கத்தினால், பஞ்சனைய மெல்லடியுடைய உமா தேவியாரைப் பங்கிற்கொண்ட அப்பரமனைத் தஞ்சப்பொருளாகக் கொண்டு இறுமாப்பு எய்தி, வேறு யாரையும் அஞ்சாதவள் ஆயினள்.
1362 | பிறையுஞ் சூடிநற் பெண்ணோ டாணாகிய நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் அறையும் பூம்பொழி லாவடு தண்டுறை இறைவ னென்னை யுடையவ னென்னுமே. |
5.029.8 |
இப்பெண், பிறையினைச் சென்னியிற் சூடிய பெண்ணும் ஆணுமாகிய இறைவனும், மேகங்களும், வண்டினங்களும் ஒலிக்கின்ற பூம்பொழில்களை உடைய ஆவடுதண்துறையில் என்னை உடையவனும் ஆகிய பெருமானே, என் கற்பினையும், உள்ளத்தினையும், பிற தன்மைகளையும் கவர்ந்து கொண்டவன் என்று சொல்லுமியல்பினள்.
1363 | வையந் தாளைந் தானும் அயனுமாய் மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான் ஐய னாவடு தண்டுறை யாவெனக் கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே. |
5.029.9 |
உலகங்களைத் தான் அளந்தவனாகிய திருமாலும், பிரமனும் ஆகிய இருவரும் மெய்பொருளாகிய பிரமத்தைக் காணலுற்றபோது அவ்விருவர் முன்னே பேரழலாய் நிமிர்ந்த பெருமானே! ஐயனே! ஆவடுதண்டுறையில் உள்ள அண்ணலே என்று வாய்விட்டுக்கூவி உடல் மெலிதலால் இவள் கைகளில் உள்ள வெள்வளைகள் கழல்கின்றவாயின.
1364 | பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான் மிக்க வாளரக் கன்வலி வீட்டினான் அக்க ணிந்தவ னாவடு தண்டுறை நக்க னென்னுமிந் நாணிலி காண்மினே. |
5.029.10 |
பெருமான் தன் நெஞ்சும் கற்பும் கவர்ந்து கொண்டனனேனும், அதுகுறித்துச் சிறிதும் நாணமில்லாதவளாகிய இப்பெண், மீண்டும், பூதங்கள் பக்கத்தில் நின்று பாடப் பலி கொள்வான் என்றும், ஆற்றல்மிக்க வாளை உடைய அரக்கனை வலி கெடுத்தான் என்றும், அக்கமாலைகள் அணிந்தான் என்றும், திரு ஆவடு தண்டுறையில் உள்ள திகம்பரன் என்றும் கூறிப்புகழ்ந்தவண்ணம் இருப்பாள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.029.திருவாவடுதுறை , என்றும், இப்பெண், தண்டுறை, உள்ள, உடையவனும், னாவடு, சூடிய, ஆயினள், உடைய, ஆகிய, திருவாவடுதுறை, ளாவடு, திருமுறை, கண்டத்தை, னென்னை, கவர்ந்து, பூதங்கள், பாடப், பெருமானே, கொண்டவன், என்னை, யாவெனக், கொண்ட, காண்மினே, ஆவடு, திருச்சிற்றம்பலம், வாலிய, பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், லாவடு, திருவாவடுதுறையில், இயல்பினள், பாதிப், பெண், சிவபெருமானோடு, கண்டத்தன்