ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.026.திருவன்னியூர்
5.026.திருவன்னியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1326 | காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம் பாட மாநட மாடும் பரமனார் வாட மானிறங் கொள்வர் மணங்கமழ் மாட மாமதில் சூழ்வன்னி யூரரே. |
5.026.1 |
மணம் கமழ்கின்ற மாமடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.
1327 | செங்கண் நாகம் அரையது தீத்திரள் அங்கை யேந்திநின் றாரெரி யாடுவர் கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர் மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே. |
5.026.2 |
உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்.
1328 | ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர் தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம் தானங் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே. |
5.026.3 |
வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.
1329 | இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை மெய்ம்மை தானறி யாது விளம்புவர் மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை வம்மின் றீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே. |
5.026.4 |
உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக.
1330 | பிறைகொள் வாள்நுதற் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர் கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர் மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே. |
5.026.5 |
வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.
1331 | திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர் துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே. |
5.026.6 |
வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.
1332 | குணங்கொள் தோளெட்டு மூர்த்தி யிணையடி இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான் வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும் வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே. |
5.026.7 |
வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்.
1333 | இயலு மாலொடு நான்முகன் செய்தவம் முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான் அயலெ லாமன்ன மேயுமந் தாமரை வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே. |
5.026.8 |
அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்.
1334 | நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட இலங்கை மன்ன னிருபது தோளினை மலங்க வூன்றிவைத் தர்வன்னி யூரரே. |
5.026.10 |
வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முடிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னரின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.026.திருவன்னியூர் , யூரரே, இறைவர், வன்னியூர்த்தலத்து, காட்டுவர், உடைய, கொண்டவர், திருமுறை, கொண்டு, ஆவர், திருவன்னியூர், தம்மை, கொன்றையர், கண்டத்தர், யார்வன்னி, மெய்ம்மை, மூர்த்தி, உடையவர், நான்முகன், கொண்ட, நீண்ட, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், வன்னியூரில், வீற்றிருக்கும், தானங், அழகிய, தார்வன்னி, வார்சடை, அடைதற்குரிய