ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.015.திருவிடைமருதூர்
5.015.திருவிடைமருதூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருதீசர்.
தேவியார் - நலமுலைநாயகியம்மை.
1216 | பறையி னோசையும் பாடலி னோசையும் மறையி னோசையும் வைகு மயலெலாம் இறைவ னெங்கள் பிரானிடை மருதினில் உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே. |
5.015.1 |
பறை, பாடல், மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும், இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.
1217 | மனத்துள் மாயனை மாசறு சோதியை புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை எனக்குத் தாயையெம் மானிடை மருதனை நினைத்திட் டூறி நிறைந்ததெ னுள்ளமே. |
5.015.2 |
மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும், குற்றமற்ற ஒளிவடிவானவனும், மிக்க இளமதியைச் சூடியவனும், எனக்குத் தாயானவனும், எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது.
1218 | வண்ட ணைந்தன வன்னியும் மத்தமும் கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை எண்டி சைக்கு மிடைமரு தாவென விண்டு போயறும் மேலை வினைகளே. |
5.015.3 |
வண்டணைந்த வன்னியும், மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை, எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்றுகூற, நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும்.
1219 | துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோ டணைய லாவ தெமக்கரி தேயெனா இணையி லாவிடை மாமரு தில்லெழு பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே. |
5.015.4 |
ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின், தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர்.
1220 | மண்ணை யுண்டமால் காணான் மலரடி விண்ணை விண்டயன் காணான் வியன்முடி மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல் பண்ணை யாயமுந் தானும் பயிலுமே. |
5.015.5 |
மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான், என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும், மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள். பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி.
1221 | மங்கை காணக் கொடார்மண மாலையை கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே. |
5.015.6 |
பெண்களே, இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் (கொன்றை மலரின்நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார்.) ஆயின், அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின், பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள்; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது. இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது. மற்று எங்கிருந்து இப்பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.015.திருவிடைமருதூர் , காணான், என்றும், திருமுறை, திருவிடைமருதூர், னோசையும், மலரடி, கொடுத்தல், இயலாது, வியன்முடி, ஆகலின், முதல்வன், காணக், கொடுத்துள்ளார், வன்னியும், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், ஐந்தாம், னுள்ளமே, ஆகிய, சடைமுடிக், எனக்குத், உள்ளம், மாமரு