ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.010.திருமறைக்காடு
5.010.திருமறைக்காடு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்.
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.
1163 | பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. |
5.010.1 |
பண்ணையொத்த மொழியாளாகிய உமை அம்மையை ஒருபங்கிற் கொண்டவரே! மண்ணுலகத்தவர் வலம் புரியும் மறைக்காட்டுறையும் பெருமானே! அடியேன் என்கண்களால் உம்மைக் காணுமாறு, வேதங்களால் அடைக்கப் பெற்ற இக்கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள்செய்வீராக.
1164 | ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும் நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே. |
5.010.2 |
ஆகத்தில் ஈண்டிய செஞ்சடைகொண்ட இறைவரே! தொகுதியாய கருமுகிலின் நிறத்தையும் தளிரின் ஒளியையும் உடைய மணிகண்டரே. அடியேனை ஆண்டுகொண்ட நீரே அருள் செய்வீராக; நீண்ட இப்பெருங்கதவின் வலியினை நீக்குவீராக.
1165 | அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ சட்ட விக்கத வந்திறப் பிம்மினே. |
5.010.3 |
அட்டமூர்த்தியாகிய எந்தையே! தீயவர் புரங்களைச் சுட்ட உயர்ந்த தேவரே! பட்டமாகக் கட்டிய சடைமுடியுள்ள பரமரே! செவ்வையாக இக்கதவினைத் திறப்பித் தருள்வீராக.
1166 | அரிய நான்மறை யோதிய நாவரோ பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ விரிகொள் கோவண ஆடைவிருத்தரோ பெரிய வான்கத வம்பிரி விக்கவே. |
5.010.4 |
அருமை உடைய நான்மறை அருளிய நாவுடையவரே! பெரிய புரம் எரியுண்ணுமாறு சுட்ட உயர்ந்த தேவரே! விரிந்த கோவண ஆடை கொண்ட மிகப்பழையவரே! பெரிய இக்கதவினைப் பிரித்தருள்வீராக.
1167 | மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ விலையில் மாமணி வண்ண வுருவரோ தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே. |
5.010.5 |
திருமலையைப்போல் அழியாதிருக்கும் மறைக்காட்டுறையும் பெருமானே! கலைகள் வந்திறைஞ்சிக் கழல் ஏத்தப் படுபவரே! விலைமதிப்பற்ற செம்மணிவண்ணத் திருமேனியரே! தொலைவில்லாத இக்கதவுகளைத் திறந்தருள்வீராக.
1168 | பூக்குந் தாழை புறணி யருகெலாம் ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை நோக்கிக் காணக் கதவைத் திறவுமே. |
5.010.6 |
ஊர்ப்புறத்து நீரின் மருங்கெலாம் தாழை பூப்பதும், தண்பொழில் சூழ்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்குங் காண்டல் அரியீர்! அடிகளே! உமைநோக்கிக் காணும் பொருட்டு இக்கதவைத் திறந்தருள்வீராக!
1169 | வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ அந்த மில்லி யணிமறைக் காடரோ எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட இந்த மாக்கத வம்பிணி நீக்குமே. |
5.010.7 |
வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசும் மேலானவரே! முடிவில்லாதவரே! மறைக்காட்டுறையும் பெருமானே! எம் தந்தையே! அடியார்கள் நேர்வாயிலில் வந்து இறைஞ்சிடும் பொருட்டு இப்பெருங்கதவம் பிணிக்கப்பட்டிருத்தலை நீக்கித் திறந்தருள்வீராக.
1170 | ஆறு சூடும் அணிமறைக் காடரோ கூறு மாதுமைக் கீந்த குழகரோ ஏற தேறிய எம்பெரு மானிந்த மாறி லாக்கத வம்வலி நீக்குமே. |
5.010.8 |
கங்கையாற்றைச் சடையிற் சூடும் மறைக்காட்டுறையும் பெருமானே! ஒரு கூற்றை உமைக்கு ஈந்த இளையவரே! விடையேறிய எம்பெருமானே! இந்த மாறுபாடில்லாத கதவின் வலியினை நீக்கித் திறந்தருள்வீராக.
1171 | சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ பண்ணி யேறுகந் தேறும் பரமரோ அண்ண லாதி யணிமறைக் காடரோ திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே. |
5.010.9 |
வெண்பொடிச் சுண்ணம் பூசும் உயர்ந்த தேவரே! அழகுசெய்து ஏற்றின்கண் ஏறி உயர்ந்து தோன்றும் பரமரே! அண்ணலே! ஆதியே! அணிமறைக் காட்டுறையும் பெருமானே! திண்ணமாக இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக.
1172 | விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ கண்ணி னாலுமைக் காணக் கதவினைத் திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே. |
5.010.10 |
விண்ணுலகத்தவர் விரும்பி எதிர்கொண்டு இன்புறுமாறு மண்ணுலகத்தவர் சென்று வணங்கியெழும் மறைக்காட்டுறையும் பெருமானே! கண்ணினால் உமைக் காணுவதற்காகக் கதவினைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக.
1173 | அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர் இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ சரக்க விக்கத வந்திறப் பிம்மினே. |
5.010.11 |
பெருகும் புன்னைகள் சூழ்ந்த மறைக்காட்டுறையும் பெருமானே! இராவணனை விரலால் அடர்த்திட்ட நீர் எளியேன்பால் இரக்கம் கொஞ்சமும் இல்லாதவராயுள்ளீர்! எம்பெருமானீரே! விரைந்து. இக்கதவினைத் திறப்பித்தருள்வீராக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 5.010.திருமறைக்காடு , பெருமானே, காடரோ, மறைக்காட்டுறையும், இக்கதவினைத், நீக்குமே, திறந்தருள்வீராக, பெரிய, சுட்ட, பூசும், திருமறைக்காடு, மாக்கத, சுவண்டரோ, திருமுறை, பிம்மினே, வந்திறப், கதவினைத், உயர்ந்த, தேவரே, காணக், திண்ண, லாக்கத, கும்மறைக், ஐந்தாம், கோவண, தேவாரப், கலைகள், பொருட்டு, சூடும், நீக்கித், அணிமறைக், திறப்பித்தருள்வீராக, புன்னைகள், யணிமறைக், வெண்பொடிப், தண்பொழில், சூழ்மறைக், நான்மறை, வெந்த, தாழை, விக்கத, திருச்சிற்றம்பலம், திண்ணமாகத், திறந்து, கண்ணி, மண்ணுலகத்தவர், மாகத், திறந்தருள், செய்ம்மினே, நீண்ட, பதிகங்கள், கட்டிய, பரமரோ, னாலுமைக், வான்புரஞ், வலியினை, உடைய, அருள், செய்வீராக, பரமரே