மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.098.திருவீழிமிழலை
3.098.திருவீழிமிழலை
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
3853 | வெண்மதி
தவழ்மதில் மிழலையு ளீர்சடை ஒண்மதி யணியுடை யீரே ஒண்மதி யணியுடை யீருமை யுணர்பவர் கண்மதி மிகுவது கடனே |
3.098.1 |
விண்ணிலுள்ள வெண்ணிறச் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்துள்ள மதில்களையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், சடையில் ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ளவருமான சிவபெருமானே! ஒளி பொருந்திய சந்திரனை அணிந்துள்ள உம்மை முதற்பொருளாக உணர்ந்து வழிபடுபவர்கள் சிவஞானம் பெறுவர்.
3854 | விதிவழி
மறையவர் மிழலையு ளீர்நடம் சதிவழி வருவதொர் சதிரே சதிவழி வருவதொர் சதிருடை யீருமை அதிகுணர் புகழ்வது மழகே |
3.098.2 |
வேதங்களில் விதிக்கப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழும் அந்தணர்கள் நிறைந்த திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்றவரும், தாளத்துக்கு ஏற்ப அழகாகத் திருநடனம் புரிபவருமான சிவபெருமானே! தாளத்திற்கு ஏற்பத் திருநடனம் புரியும் பெருமையுடைய உம்மைச் சத்துவகுணமுடைய ஞானிகள் போற்றிப் புகழ்வது சிறப்பானது.
3855 | விரைமலி
பொழிலணி மிழலையு ளீரொரு வரைமிசை யுறைவதும் வலதே வரைமிசை யுறைவதொர் வலதுடை யீருமை உரைசெயு மவைமறை யொலியே |
3.098.3 |
நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் பெருமையுடைய கயிலைமலையில் வாழ்வதும் சாமர்த்தியமே. கயிலைமலையில் வாழும் பெருமையுடைய உம்மைப் போற்றிப் புகழ்வன வேதங்கள்.
3856 | விட்டெழில்
பெறுபுகழ் மிழலையு ளீர்கையில் இட்டெழில் பெறுகிற தெரியே இட்டெழில் பெறுகிற தெரியுடை யீர்புரம் அட்டது வரைசிலை யாலே |
3.098.4 |
மிகுந்த அழகும், புகழுமுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும் கையில் ஏந்தப்பட்டதால் அழகுபெற்ற நெருப்பை உடையவருமான சிவபெருமானே! அழகிய நெருப்பேந்திய நீர் திரிபுரத்தை எரித்தது மேருமலையை வில்லாக வளைத்தும் (அக்கினியைக் கணையாக எய்தும்) அல்லவா_
3857 | வேனிகர்
கண்ணியர் மிழலையு ளீர்நல பானிக ருருவுடை யீரே பானிக ருருவுடை யீரும துடனுமை தான்மிக வுறைவது தவமே |
3.098.5 |
வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களையுடைய பெண்கள் வாழ்கின்ற திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற, நல்ல பால் போன்ற நிறமுடைய சிவபெருமானே! பால் போன்ற நிறமுடைய உம்முடன் உமாதேவி வீற்றிருந்தருளுவது தவச்சிறப்புடையதாகும்.
3858 | விரைமலி
பொழிலணி மிழலையு ளீர்செனி நிறையுற வணிவது நெறியே நிறையுற வணிகதொர் நெறியுடை யீரும தரையுற வணிகவன வரவே |
3.098.6 |
நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளியுள்ளவரும், மண்டையோட்டால் ஆகிய மாலையை அணிந்துள்ளவருமான ஆளுகையையுடைய சிவபெருமானே! அவ்வாறு தலை மாலை அணிந்து ஆளுகை உடைய நீவிர் உமது அரையில் கச்சாகக் கட்டியது அரவமே.
3859 | விசையுறு
புனல்வயன் மிழலையு ளீரர வசையுற வணிவுடை யீரே அசையுற வணிவுடை யீருமை யறிபவர் நசையுறு நாவினர் தாமே |
3.098.7 |
வேகமாக ஓடிப் புனல் வற்றாத நீர்வளம் மிக்க வயல்களை உடைய திருவீழிமிலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், அரவம் அசையும்படி ஆபரணமாக அணிந்துள்ளவருமான சிவபெருமானே! அவ்வாறு அசையும் அரவத்தை ஆபரணமாக அணிந்துள்ள உம்மை அறிபவர்களே, தாம் கூறுவனவற்றை அனைவரும் விரும்பிக் கேட்கும்வண்ணம் உண்மைப் பொருளை உபதேசிக்கும் வல்லுநர் ஆவர்.
3860 | விலங்கலொண்
மதிளணி மிழலையு ளீரன்றவ் இலங்கைமன் னிடர்கெடுத் தீரே இலங்கைமன் னிடர்கெடுத் தீருமை யேத்துவார் புலன்களை முனிவது பொருளே |
3.098.8 |
மலைபோன்ற உறுதியான மதிலையுடைய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும், அன்று இலங்கை மன்னனான இராவணனைக் கயிலையின் கீழ் அடர்த்தபோது, அவன் உம்மைப் போற்றிச் சாமகானம் பாட அவன் துன்பத்தைப் போக்கியவரும் ஆகிய சிவபெருமானே! அவ்வாறு இலங்கை மன்னனின் துன்பத்தைப் போக்கிய உம்மைப் போற்றி வணங்குபவர்களே புலன்களை அடக்கி ஆளும் வல்லமையுடையவர்.
3861 | வெற்பமர்
பொழிலணி மிழலையு ளீருமை அற்புத னயனறி யானே அற்புத னயனறி யாவகைநின்றவ நற்பத மறிவது நயமே |
3.098.9 |
மலைபோன்ற மாளிகைகளும், சோலைகளு முடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நின்றவருமான சிவபெருமானே! அவ்வாறு திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நின்ற உம் நல்ல திருவடிகளை இடையறாது நினைப்பதே மானிடப் பிறவி எய்தினோர் அடையும் பயனாகும்.
3862 | வித்தக
மறையவர் மிழலையு ளீரன்று புத்தரொ டமணழித் தீரே புத்தரொ டமணழித் தீருமைப் போற்றுவார் பத்திசெய் மனமுடை யவரே |
3.098.10 |
நான்மறைகளைக் கற்றுவல்ல அந்தணர்கள் வாழும் திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவரும், புத்தமும், சமணமும் வீழுமாறு செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு புத்தமும், சமணமும் வீழ்ச்சியடையும்படி செய்த உம்மைப் போற்றுபவர்களே பத்தியுடைய நன்மனம் உடையவர்கள்.
3863 | விண்பயில்
பொழிலணி மிழலையு ளீசனைச் சண்பையுண் ஞானசம் பந்தன சண்பையுண் ஞானசம் பந்தன தமிழிவை ஒண்பொரு ளுணர்வது முணர்வே |
3.098.11 |
ஆகாயத்தைத் தொடும்படி உயர்ந்தோங்கிய சோலைகளையுடைய அழகிய திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானை, திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தன் போற்றி அருளினான். அவ்வாறு, திருச்சண்பையில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தின் சீரிய கருத்தை உணர்ந்து ஓதுதல் நல்லுணர்வு ஆகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.098.திருவீழிமிழலை , திருவீழிமிழலை, என்னும், திருத்தலத்தில், மிழலையு, விரும்பி, சிவபெருமானே, அவ்வாறு, அழகிய, வீற்றிருந்தருளுகின்றவரும், பொழிலணி, உம்மைப், யீருமை, யீரே, அணிந்துள்ளவருமான, திருமுறை, பெருமையுடைய, வாழும், தீரே, புலன்களை, மலைபோன்ற, னிடர்கெடுத், இலங்கை, சோலைகளையுடைய, உடைய, வணிவுடை, ஆகிய, ஆபரணமாக, இலங்கைமன், நிறையுற, னயனறி, சண்பையுண், சமணமும், புத்தமும், ஞானசம், பந்தன, ஞானசம்பந்தன், அவதரித்த, டமணழித், புத்தரொ, அற்புத, போற்றி, துன்பத்தைப், நிறமுடைய, திருமாலும், அறியாவண்ணம், பிரமனும், அவன், கயிலைமலையில், உம்மை, அணிந்துள்ள, உணர்ந்து, மறையவர், வருவதொர், சதிவழி, சந்திரனை, பொருந்திய, தேவாரப், மூன்றாம், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், யணியுடை, ஒண்மதி, புகழ்வது, அந்தணர்கள், பெறுகிற, இட்டெழில், பானிக, ருருவுடை, நல்ல, யீரும, நீர், வீற்றிருந்தருளும், போற்றிப், திருநடனம், விரைமலி, வரைமிசை, கமழும், நறுமணம், பால்