மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.028.திருமழபாடி
3.028.திருமழபாடி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
3096 | காலையார் வண்டினங் கிண்டிய காருறும் சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே வேலையார் விடம்அணி வேதியன் விரும்பிடம் மாலையார் மதிதவழ் மாமழ பாடியே |
3.028.1 |
காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய, மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில், சொல்லையும், பொருளையும் பயில்வன. கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிந்தருளும் இடம், மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3097 | கறையணி மிடறுஉடைக் கண்ணுதல் நண்ணிய பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணும்ஊர் துறையணி குருகினம் தூமலர் துதையவே மறையணி நாவினான் மாமழ பாடியே |
3.028.2 |
நீலகண்டராயும், நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர். அவர் வீற்றிருந்தருளும் ஊர், நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.
3098 | அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும் செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப் பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம் மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே |
3.028.3 |
அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிறவேதங்கள் ஒலிக்கவும், செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும், சிறப்புடன், இறைவன், பந்து வந்தடைகின்ற மென்மையான விரல்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.
3099 | அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன் முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன் பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும் அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே |
3.028.4 |
யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன். வீடுபேறாயும், மும்மூர்த்திகட்கு முதல்வனாயும் விளங்குபவன். பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன், அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும்.
3100 | கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன் வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச் செங்கயற் கண்உமை யாளொடுஞ் சேர்விடம் மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே |
3.028.5 |
கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான். கொடிய கண்ணையுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன். வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன். தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3101 | பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும் காலனார் உயிர்செகக் காலினால் சாடினான் சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம் மாலினார் வழிபடும் மாமழ பாடியே |
3.028.6 |
பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான், சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3102 | விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் கண்ணினால் காமனைக் கனல்எழக் காய்ந்தஎம் அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே |
3.028.7 |
சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர். நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3103 | கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன சிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும் வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே |
3.028.8 |
தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பேருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர். பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட, அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3104 | ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய் நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம் பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில் மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே |
3.028.9 |
இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அடிமுடி தேட, காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3105 | உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின் பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான் மறிபிடித் தானிடம் மாமழ பாடியே |
3.028.10 |
நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும், வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா. படமெடுத்தாடும், புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து, இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் விற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும்.
3106 | ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும் சீலத்தான் மேவிய திருமழ பாடியை ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல் கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே |
3.028.11 |
இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு, நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை, உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.028.திருமழபாடி , திருமழபாடி, என்னும், சிவபெருமான், பாடியே, இடம், மாமழ, வீற்றிருந்தருளும், திருத்தலம், ஆகும், விளங்கும், திருத்தலமாகும், உமாதேவியோடு, உறைவிடம், அழகிய, திருமுறை, விளங்குபவன், அணிந்தவன், அப்பெருமான், வழிபடும், ஆபரணமாக, சிறப்புடைய, பாம்பை, கண்ணையுடைய, சேர்விடம், சந்திரனை, பதிகங்கள், தேவாரப், மூன்றாம், திருச்சிற்றம்பலம், வேதியன், தம்மை, விரும்பி, அணிமழ