மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.109.கூடச்சதுக்கம்
3.109.கூடச்சதுக்கம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
பண் - பழம்பஞ்சுரம்
திருச்சிற்றம்பலம்
3967 | மண்ணது
வுண்டரி மலரோன்காணா வெண்ணாவல் விரும்பும யேந்திரரும் கண்ணது வோங்கிய கயிலையாரும் அண்ணலா ரூராதி யானைக்காவே |
3.109.1 |
மண்ணுண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் காணமுடியாதபடி, திருமயேந்திர மலையில் எழுந்தருளியிருப்பவரும், காட்சிமிக்க திருக்கயிலையில் எழுந்தருளி இருப்பவரும், திருவாரூரில் வீற்றிருப்பவரும், வெண்ணாவல் மரத்தின்கீழ் எழுந்தருள விரும்புபவரும் ஆகிய தலைவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவானைக்காவேயாகும்.
3968 | வந்துமா
லயனவர் காண்பரியார் வெந்தவெண் ணீறணி மயேந்திரரும் கந்தவார் சடையுடைக் கயிலையாரும் அந்தணா ரூராதி யானைக்காவே |
3.109.2 |
சிவபெருமான், திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவர். அவர் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்தவராய்த் திருமயேந்திரத்திலும், நறுமணம் கமழும் சடையுடையவராய்த் திருக்கயிலையிலும், அழகிய, குளிர்ச்சிமிக்க திருவாரூரிலும், பழமை வாய்ந்த திருவானைக்காவிலும் விளங்குபவர்.
3969 | மாலயன்
றேடிய மயேந்திரரும் காலனை யுயிர்கொண்ட கயிலையாரும் வேலைய தோங்கும்வெண் ணாவலாரும் ஆலையா ரூராதி யானைக்காவே |
3.109.3 |
திருமாலும், பிரமனும் தேடிய சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவரே மார்க்கண்டேயருக்காகக் காலனை மாய்த்த கயிலைநாதர். பஞ்சபூதத் தலங்களுள் அப்புத்(நீர்) தலமாக விளங்கும் திருஆனைக்காவில் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருந்தருளுபவர். கருப்பங்கழனிகளை உடைய திருவாரூரில் வீற்றிருந்தருளுபவரும் அவரே.
3970 | கருடனை யேறரி யயனோர்காணார் வெருள்விடை யேறிய மயேந்திரரும் கருடரு கண்டத்தெங் கயிலையாரும் அருளனா ரூராதி யானைக்காவே |
3.109.4 |
கருடவாகனம் கொண்ட திருமாலும், பிரமனும் காணமுடியாதவராகிய சிவபெருமான், பகைவர் அஞ்சத்தக்க இடபவாகனத்தில் விளங்குகின்ற திருமயேந்திரர், கருநிறக் கண்டத்தையுடைய திருக்கயிலைநாதர். அருளே திருமேனியாகக் கொண்ட திருஆரூரர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுபவர்.
3971 | மதுசூதன்
நான்முகன் வணங்கரியார் மதியது சொல்லிய மயேந்திரரும் கதிர்முலை புல்கிய கயிலையாரும் அதியனா ரூராதி யானைக்காவே |
3.109.5 |
மது என்ற அசுரனைக் கொன்றவனாகிய திருமாலும், பிரமனும் வணங்குதற்கு அரியராய் விளங்குபவர் சிவபெருமான். ஆகமங்களை உபதேசித்தருளிய திருமகேந்திர மலையில் வீற்றிருந்தருளுபவர். ஒளி பொருந்திய கொங்கைகளையுடைய உமாதேவியைத் தழுவிய திருக்கயிலைநாதர். எவர்க்கும் மேம்பட்டவர். திருவாரூரில் வீற்றிருந்தருளுபவர். அவரே ஆதியாகிய திருவானைக்காவில் வீற்றிருந்தருளுகின்றார்.
3972 | சக்கரம்
வேண்டுமால் பிரமன்காணா மிக்கவர் கயிலை மயேந்திரரும் தக்கனைத் தலையரி தழலுருவர் அக்கணி யவராரூ ரானைக்காவே |
3.109.6 |
சக்கராயுதத்தை வேண்டிப் பெற்ற திருமாலும், பிரமனும் காணாத வண்ணம் விளங்கிய, யாவரினும் மேம்பட்டவரான சிவபெருமான், திருக்கயிலைமலையிலும், திருமயேந்திரத்திலும் வீற்றிருந்தருளுகின்றார். அவர் தக்கனின் தலையை அரிந்தவர். நெருப்புருவானவர். உருத்திராக்கமாலை அணிந்தவர். திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுபவர்.
3973 | கண்ணனு
நான்முகன் காண்பரியார் வெண்ணாவல் விரும்பு மயேந்திரரும் கண்ணப்பர்க் கருள்செய்த கயிலையெங்கள் அண்ணலா ரூராதி யானைக்காவே |
3.109.7 |
கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவரான சிவபெருமான் திருமயேந்திரத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அவர் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலைநாதர். எங்கள் தலைவரான திருவாரூரர். அவர் வெண்ணாவல் மரத்தின்கீழ் வீற்றிருக்க விரும்பும் திருவானைக்காவிலுள்ள ஆதிமூர்த்தி ஆவார்.
3974 | கடல்வண்ணன்
நான்முகன் காண்பரியார் தடவரை யரக்கனைத் தலைநெரித்தார் விடமது வுண்டவெம் மயேந்திரரும் அடல்விடையா ரூராதி யானைக்காவே |
3.109.8 |
கடல்போலும் கருநிறமுடைய திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய சிவபெருமான், பெரிய கயிலைமலையின் கீழ் இராவணனின் தலையை நெரித்த கயிலைநாதர். விடமுண்ட திருமயேந்திரர். வலிய இடபத்தில் ஏறும் திருவாரூரர். அவரே திருவானைக்காவில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தி ஆவார்.
3975 | ஆதிமா
லயனவர் காண்பரியார் வேதங்கள் துதிசெயு மயேந்திரரும் காதிலொர் குழையுடைக் கயிலையாரும் ஆதியா ரூரெந்தை யானைக்காவே |
3.109.9 |
தொன்றுதொட்டுத் திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், வேதங்களால் துதிக்கப்பெறும் மயேந்திரரும், காதில் குழையணிந்த கயிலைநாதரும், ஆதியாகிய திருவாரூர் எந்தையும் ஆவர். அவரே திருவானைக் காவல் வீற்றிருந்தருளுகின்றார்.
3976 | அறிவி
லமண்புத்த ரறிவுகொள்ளேல் வெறியமான் கரத்தாரூர் மயேந்திரரும் மறிகட லோனயன் றேடத்தானும் அறிவரு கயிலையோ னானைக்காவே |
3.109.10 |
இறைவனைப் பற்றி எதுவுமே கூறாத அறிவிலிகளாகிய சமணர்களும், புத்தர்களும் கூறும் உரைகளைக் கொள்ள வேண்டா. மடங்கிவீசும் அலைகளையுடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், பிரமனும் அறிவதற்கரியவரான கயிலை மலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே, மருண்ட பார்வையுடைய மான்கன்றைக் கையிலேந்தித் திருவாரூரிலும், திருமயேந்திரத்திலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார்.
3977 | ஏனமா
லயனவர் காண்பரியார் கானமார் கயிலைநன் மயேந்திரரும் ஆனவா ரூராதி யானைக்காவை ஞானசம் பந்தன் றமிழ்சொல்லுமே |
3.109.11 |
பன்றி உருவமெடுத்த திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவராய் ஓங்கிய சிவபெருமான், சோலைகள் சூழ்ந்த திருக்கயிலையிலும், நல்ல திரு மயேந்திரத்திலும், திருவாரூரிலும், திருவானைக்காவிலும் வீற்றிருந்தருளுகின்றார். அத்தகைய சிவபெருமானைப் போற்றி ஞானசம்பந்தர் அருளிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் பெறலரும் பிறவிப் பயனைப் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 3.109.கூடச்சதுக்கம் , திருமாலும், மயேந்திரரும், பிரமனும், சிவபெருமான், ரூராதி, யானைக்காவே, வீற்றிருந்தருளுகின்றார், கயிலையாரும், அவரே, வீற்றிருந்தருளுபவர், காண்பரியார், வெண்ணாவல், திருவாரூரிலும், அவர், திருவானைக்காவிலும், காண்பதற்கு, கயிலைநாதர், நான்முகன், திருவானைக்காவில், ஆதியாகிய, திருமுறை, திருமயேந்திரத்திலும், கூடச்சதுக்கம், மலையில், லயனவர், திருவாரூரில், வீற்றிருந்தருளும், மரத்தின்கீழ், கயிலை, மூன்றாம், தலையை, ஆதிமூர்த்தி, ஓங்கிய, அரியவராய், ஆவார், தேவாரப், திருவாரூரர், கொண்ட, காலனை, விளங்குபவர், திருக்கயிலையிலும், திருமயேந்திரத்தில், அண்ணலா, திருக்கயிலைநாதர், திருமயேந்திரர், திருச்சிற்றம்பலம், பதிகங்கள்