இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.076.திருஅகத்தியான்பள்ளி
2.076.திருஅகத்தியான்பள்ளி
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அகத்தீசுவரர்.
தேவியார் - மங்கைநாயகியம்மை.
2291 | வாடிய வெண்டலை
மாலைசூடி மயங்கிருள் நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப் பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே. |
2.076. 1 |
தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.
2292 | துன்னங்கொண்ட
வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான் மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர் அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே. |
2.076. 2 |
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும்.
2293 | உடுத்ததுவும்
புலித்தோல் பலி திரிந் துண்பதுங் கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால் அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே. |
2.076. 3 |
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத் திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.
2294 | காய்ந்ததுவு
மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால் பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. |
2.076. 4 |
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான் மகளை. அத் தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
2295 | போர்த்ததுவுங்
கரியின் னுரிபுலித் தோலுடை கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக் கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே. |
2.076. 5 |
போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது புலித்தோல். ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
2296 | தெரிந்ததுவுங்
கணையொன்று முப்புரஞ் சென்றுடன் எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான் புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே. |
2.076. 6 |
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
2297 | ஓதியெல்லாம்
உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச் சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும் ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே. |
2.076. 7 |
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண்பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும்.
2298 | செறுத்ததுவுந்
தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம் ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம் அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான் இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. |
2.076. 8 |
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.
2299 | சிரமுநல்ல
மதிமத்த முந்திகழ் கொன்றையும் அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப் பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. |
2.076. 9 |
தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும்.
2300 | செந்துவ
ராடையினாரும் வெற்றரை யேதிரி புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச் சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. |
2.076. 10 |
சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.
2301 | ஞாலம்
மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள் சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே. |
2.076. 11 |
உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய இத்தமிழ்மாலையை ஓத வல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.076.திருஅகத்தியான்பள்ளி , அகத்தியான், அகத்தியான்பள்ளி, வினைகள், பொழில்சூழ், பள்ளியான், ஆவான், இறைவன், பள்ளியை, பொழில்கள், புலித்தோல், சூழ்ந்த, திருஅகத்தியான்பள்ளி, விளங்கும், அத்தகையோன், திருமுறை, வெண்மழு, அழகிய, மலருறை, செய்தது, பிரமனின், மேல்வினை, மலரையும், மேல்வரும், ஞானசம்பந்தன், சிறந்த, தக்கன், உறையும், தலையை, தீர்த்திடும், எங்கள், தாமரைமலர், சினந்து, பள்ளியைப், செறிந்த, மனம், வெண்டலை, திருச்சிற்றம்பலம், இரண்டாம், தேவாரப், பதிகங்கள், பொருந்திய, கொன்றை, கொன்றது, கழலணிந்த, திரிபுரங்களை, உடுத்துள்ளது, காலினால், ஊமத்தை, அகத்தியான்பள்ளியை, நீங்கும், வேதங்களை