இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.017.திருவேணுபுரம்
2.017.திருவேணுபுரம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
திருவேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1645 | நிலவும்
புனலும் நிறைவா ளரவும் இலகுஞ் சடையார்க் கிடமா மெழிலார் உலவும் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணு புரமே. |
2.017. 1 |
பிறை, கங்கை, மிகக் கொடிய நாகம் ஆகியன விளங்கும் சடையினை உடைய சிவபெருமானுக்கு இடம், அழகிய மகளிர் உலாவுவதும், ஒளிபொருந்திய முத்துக்கள் வயல்களில் விளங்குவதும், விலகி உள்ள கடற்கரையை அடுத்துள்ளதுமான வேணுபுரம் ஆகும்.
1646 | அரவார்
கரவன் னமையார் திரள்தோள் குரவார் குழலா ளொருகூ றனிடங் கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு விரவா கவல்லார் வேணு புரமே. |
2.017. 2 |
பாம்பைக் கையில் கங்கணமாக அணிந்தவனும், மூங்கில் போன்று திரண்ட தோளினையும் குராமலர் அணிந்த கூந்தலினையும் உடைய உமையம்மையை ஒருகூறாக உடையவனும் ஆகிய சிவபிரானுக்கு இடம், மறையாதகொடையாளரும், தம்மோடு பழகியவர்களை நட்புக் கொண்டு ஒழுகுபவர்களும் ஆகிய நல்லோர் வாழும் வேணுபுரம் ஆகும்.
1647 | ஆகம்
மழகா யவள்தான் வெருவ நாகம் முரிபோர்த் தவன்நண் ணுமிடம் போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கண் மேகந் தவழும் வேணு புரமே. |
2.017. 3 |
அழகிய மேனியை உடைய உமையம்மை வெருவுமாறு யானையை உரித்துப் போர்த்த சிவபிரான் உறையும் இடம். மக்கட்கு விளைபொருள்களாகிய பயனைத்தரும் வயல்கள் சூழ்ந்துள்ள உயரிய பொழில்களில் மேகங்கள் தவழும் வேணுபுரம் ஆகும்.
1648 | காசக்
கடலில் விடமுண் டகண்டத் தீசர்க் கிடமா வதுவின் னறவ வாசக் கமலத் தனம்வன் றிரைகள் வீசத் துயிலும் வேணு புரமே. |
2.017. 4 |
முத்து பவளம் ஆகிய மணிகளை உடைய கடலில் எழுந்த நஞ்சினை உண்ட கண்டத்தை உடைய ஈசனுக்கு இடமாவது; இனிய தேன் நிறைந்ததும் மணம் நிறைந்ததுமான தாமரை மலரில் அன்னம் அலைகள் காற்று வீசத் துயில் கொள்ளும் வளம் நிறைந்த வேணுபுரம் ஆகும்.
1649 | அரையார்
கலைசே ரனமென் னடையை உரையா வுகந்தா னுறையும் மிடமாம் நிரையார் கமுகின் னிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே. |
2.017. 5 |
இடையில் மேகலை அணிந்தவளும், அன்னம் போன்ற நடையினளும் ஆகிய உமையம்மையைப் புகழ்ந்து உரைத்து, சிவபிரான் மகிழ்வுடன் உறையும் இடம், வரிசையாக வளர்ந்துள்ள கமுக மரங்களின் பாளைகள் உடைதலால் மணம் பொருந்தித் தோன்றும் பொழில்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
1650 | ஒளிரும்
பிறையும் முறுகூ விளவின் றளிருஞ் சடைமே லுடையா னிடமாம் நளிரும் புனலின் நலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. |
2.017. 6 |
ஒளிதரும் பிறையையும், வில்வத்தளிர்களையும் சடைமிசை உடையவனாகிய சிவபெருமானுக்குரிய இடம், குளிர்ந்த நீரில் நல்ல செங்கயல்மீன்கள் விளங்கும் வயல்கள் சூழ்ந்த வேணுபுரம் ஆகும்.
1651 | ஏவும்
படைவேந் தனிரா வணனை ஆவென் றலற அடர்த்தா னிடமாந் தாவும் மறிமா னொடுதண் மதியம் மேவும் பொழில்சூழ் வேணு புரமே. |
2.017.8 |
இலக்குத் தவறாது செல்லும் கணைகளொடுகூடிய விற்படையை உடைய இராவணனை ஆ என்று அலறுமாறு அடர்த்தருளிய சிவபிரானுக்குரிய இடம், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.
1652 | கண்ணன்
கடிமா மலரிற் திகழும் அண்ணல் லிருவர் அறியா இறையூர் வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள் விண்ணில் திகழும் வேணு புரமே. |
2.017. 9 |
திருமாலும், மணம் பொருந்திய சிறந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் ஆகிய இருவரும் அறியாதவாறு உயர்ந்து நின்ற இறைவனது இடம், அழகிய சுதை தீட்டப்பட்ட மாளிகைகளின்மேல் கட்டப்பட்ட கொடிகள் வானத்தில் திகழும் வேணுபுரம் ஆகும்.
1653 | போகம்
அறியார் துவர்போர்த் துழல்வார் ஆகம் அறியா அடியார் இறையூர் மூகம் அறிவார் கலைமுத் தமிழ்நூல் மீகம் அறிவார் வேணு புரமே. |
2.017. 10 |
சிவபோகத்தின் சிறப்பை அறியாதவர்களும், துவராடை போர்த்துத்திரிபவர்களும் ஆகிய சமண புத்தர்களின் உடலை ஏறெடுத்தும் பாராத சிவனடியார்களுக்குத் தலைவனாகிய சிவபிரானது ஊர், மௌனத்தின் சிறப்பை அறிந்தவர்களும், கலைகளையும் முத்தமிழ் நூல்களையும் கற்றமேலான அறிவுடையவர்களும் வாழும் வேணுபுரம் ஆகும்.
1654 | கலமார்
கடல்போல் வளமார் தருநற் புலமார் தருவே ணுபுரத் திறையை நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன குலமார் தமிழ்கூ றுவர் கூர் மையரே. |
2.017. 11 |
மரக்கலங்களையுடைய கடல் போல் பரவிய வளங்களை உடையதும், நன்செய் நிலங்கள் நிறைந்ததும் ஆகிய வேணுபுரத்து இறைவனை, நன்மைகள் நிறைந்த ஞானசம்பந்தன் போற்றிச் சொன்ன மேன்மைமிக்க இத்தமிழ் மாலையை அன்போடு பாராயணம் புரிவோர் மதிநுட்பமும் திருவருட்பெருக்கமும் உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டாம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 2.017.திருவேணுபுரம் , வேணு, புரமே, வேணுபுரம், ஆகும், இடம், ஆகிய, உடைய, திருவேணுபுரம், மணம், திருமுறை, உறையும், அழகிய, திகழும், சிறப்பை, அறிவார், நிறைந்த, மலரில், தாமரை, பொழில்சூழ், அன்னம், பொழில்கள், இறையூர், அறியா, கொடிகள், குளிர்ந்த, சூழ்ந்த, உடையதும், சிவபிரான், கிடமா, நாகம், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், இரண்டாம், தேவாரப், விளங்கும், வாழும், கடலில், வீசத், வயல்கள், தவழும், ஆகம், வயல்சூழ், நிறைந்ததும்