முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.094.திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
1.094.திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
1014 |
நீல மாமிடற், றால வாயிலான் பால தாயினார், ஞால மாள்வரே. |
1.094.1 |
நீலநிறம் பொருந்திய கண்டத்தினை உடைய திரு ஆலவாய் இறைவனைச் சென்று தொழுது மனத்தால் அவன் அருகில் இருப்பதாக உணர்பவர்கள், இவ்வுலகை ஆள்வர்.
1015 |
ஞால மேழுமாம், ஆல வாயிலார் சீல மேசொலீர், காலன் வீடவே. |
1.094.2 |
எமபயம் இன்றி வாழ, ஏழுலகங்களிலும் எழுந்தருளியிருக்கும் ஆலவாய் இறைவனது மெய்ப்புகழையே உரையால் போற்றி வருவீர்களாக.
1016 |
ஆல நீழலார், ஆல வாயிலார் கால காலனார், பால தாமினே. |
1.094.3 |
கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.
1017 |
அந்த மில்புகழ், எந்தை யாலவாய் பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. |
1.094.4 |
ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.
1018 |
ஆட லேற்றினான், கூட லாலவாய் பாடி யேமனம், நாடி வாழ்மினே. |
1.094.5 |
வெற்றியோடு கூடிய ஆனேற்றினானது நான்மாடக்கூடல் என்னும் ஆலவாயின் புகழைப் பாடி மனத்தால் அவ்விறைவனையே நாடி வாழ்வீர்களாக.
1019 |
அண்ண லாலவாய், நண்ணி னான்றனை எண்ணி யேதொழத், திண்ண மின்பமே. |
1.094.6 |
தலைமையாளனும் ஆலவாய் என்னும் மதுரைப் பதியின் கோயிலைப் பொருந்தியிருப்பவனுமாகிய சோமசுந்தரப் பெருமானையே எண்ணித் தொழுதுவரின் இன்பம் பெறுவது திண்ணமாகும்.
1020 |
அம்பொ னாலவாய், நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. |
1.094.7 |
அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.
1021 |
அரக்க னார்வலி, நெருக்க னாலவாய் உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே. |
1.094.8 |
அரக்கனாகிய பெருவலிபடைத்த இராவணனைக் கால் விரலால் நெரித்தருளிய ஆலவாய் அரன் புகழை உரைக்கும் உள்ளத்தார்க்கு அவனது கருணை உளதாகும்.
1022 |
அருவ னாலவாய், மருவி னான்றனை இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே. |
1.094.9 |
அருவனாய் விளங்கும் இறைவன் திருவாலவாயில் திருமால் பிரமர் ஆகிய இருவர் போற்றும் உருவனாய் மருவி ஓங்கி நிற்கின்றான்.
1023 |
ஆர நாகமாம், சீர னாலவாய்த் தேர மண்செற்ற, வீர னென்பரே. |
1.094.10 |
பாம்பாகிய ஆரத்தை அணிந்தவனாய், ஆலவாயில் பெரும் புகழாளனாய் விளங்கும் இறைவன், புத்தரையும் சமணரையும் அழித்த பெருவீரன் ஆவான் என்று அடியவர்கள் அவனைப் புகழ்ந்து போற்றுவார்கள்.
1024 |
அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன் முடிவி லின்றமிழ், செடிக ணீக்குமே. |
1.094.11 |
ஆலவாயில் எழுந்தருளிய அடிகளாகிய இறைவனது திருவருளில் தோய்ந்த ஞானசம்பந்தனின் அழிவற்ற இனிய இத்தமிழ் மாலை நமக்கு வரும் வினைகளைப் போக்குவதாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.094.திருஆலவாய் - திருவிருக்குக்குறள் , ஆலவாய், திருமுறை, னாலவாய், விளங்கும், மனத்தால், திருஆலவாய், திருவிருக்குக்குறள், இறைவன், னான்றனை, நம்பி, துன்பம், என்னும், ஆலவாயில், மருவி, லாலவாய், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், வாயிலார், இறைவனது, பாடி, ஆகிய, நாடி