முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.083.திரு அம்பர்மாகாளம்
1.083.திரு அம்பர்மாகாளம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காளகண்டேசுவரர்.
தேவியார் - பட்சநாயகியம்மை.
893 |
அடையார் புரமூன்று மனல்வாய் விழவெய்து மடையார் புனலம்பர் மாகா ளம்மேய விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடும் சடையான் கழலேத்தச் சாரா வினைதானே. |
1.083.1 |
பகைவராகிய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் அனலிடைப்பட்டு அழியுமாறு கணை எய்தவனும், நீரைத் தேக்கும் மடைகளையுடைய புனல் வளம் நிறைந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய விடை எழுதிய கொடியை உடைய எம் தந்தையும், வெண்மையான பிறை மதியை அணிந்த சடையினனும் ஆகிய பெருமான் திருவடிகளை ஏத்துவாரை வினைகள் சாரா.
894 |
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலேத்த வல்ல லடையாவே. |
1.083.2 |
தேன் பொருந்திய செழுமையான ஊமத்தம் மலர், பிறைமதி, கங்கை ஆகியவற்றை முடியில் சூடி, வானளாவிய பொழில்சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய ஊன் பொருந்திய தலையோட்டில் பலியேற்றுத் திரியும் வாழ்க்கையை மேற்கொண்ட பெருமான் திருவடிகளைப் போற்றத் துன்பங்கள் நம்மை அடையா.
895 |
திரையார்புனலோடு செல்வ மதிசூடி விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய நரையார் விடையூரு நம்பான் கழனாளும் உரையா தவர்கண்மே லொழியா வூனம்மே. |
1.083.3 |
அலைகள் பொருந்திய கங்கை நதியோடு, கண்டாரை மகிழ்விக்கும் சிறப்பு வாய்ந்த பிறைமதியை முடியில் சூடி, மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய வெண்மையான விடையை ஊர்ந்து வரும் சிவபிரான் திருவடிப் புகழை நாள்தோறும் உரையாதவர்கள் பால் பழிபாவங்கள் நீங்கா.
896 |
கொந்தண் பொழிற்சோலைக் கோல
வரிவண்டு மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய கந்தங் கமழ்கொன்றை கமழ்புன்சடை வைத்த எந்தை கழலேத்த விடர்வந் தடையாவே. |
1.083.4 |
பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில்களிலும் சோலைகளிலும் அழகிய வரி வண்டுகள் பாடும் மந்தச் சுருதி இசை நிறைந்து விளங்கும் இயற்கை எழில் வாய்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, மணம் கமழும் கொன்றை மலர்களை இயல்பாக மணம் வீசும் தனது சிவந்த சடைமிசை வைத்துள்ள எம் தந்தையாகிய சிவபிரானின் திருவடிகளை ஏத்தினால் இடர்கள் நம்மை வந்தடைய மாட்டா.
897 |
அணியார் மலைமங்கை யாகம் பாகமாய் மணியார் புனலம்பர் மாகா ளம்மேய துணியா ருடையினான் றுதைபொற் கழனாளும் பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே. |
1.083.5 |
அழகு பொருந்திய மலைமங்கையாகிய பார்வதிதேவியைத் தனது உடலின் இடப்பாகமாய்க் கொண்டவனாய் மணிகளோடு கூடிய புனல் வளம் உடைய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளிய, துணிக்கப்பட்ட கோவண உடையினன் ஆகிய சிவபெருமானின் பொன்னிறம் துதைந்த திருவடிகளை நாள்தோறும் பணியாதவரைப் பாவம் நீங்கா.
898 |
பண்டாழ் கடனஞ்சை யுண்டு களிமாந்தி வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக் கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. |
1.083.6 |
முற்காலத்தில் ஆழ்ந்த கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்டு, களிப்புற்று வண்டுகள் மொய்க்கும் சோலைகள் சூழ்ந்த அம்பர்மாகாளத்தில் எழுந்தருளியிருப்பவனும், பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் வெந்தழியுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டருளியவனுமான சிவபெருமான், திருவடிகளைப் போற்ற, குற்றங்கள் நம்மைக் குறுகா.
899 |
மிளிரும் மரவோடும் வெள்ளைப் பிறைசூடி வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய கிளரும் சடையண்ணல் கேடில் கழலேத்தத் தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே. |
1.083.7 |
விளங்குகின்ற பாம்போடு வெள்ளை நிறமுடைய பிறையை முடியிற்சூடி, வளர்கின்ற பொழில்கள் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், விளங்குகின்ற சடைமுடியை உடைய தலைமையாளனாகிய சிவபிரானுடைய குற்றமற்ற திருவடிகளை ஏத்தினால், மிக்க நோய்கள் தளர்வுறும்; தவம் நம்மை வந்து அடையும்.
900 |
கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி மலையார் புனலம்பர் மாகா ளம்மேய இலையார் திரிசூலப் படையான் கழனாளும் நிலையா நினைவார்மே னில்லா வினைதானே. |
1.083.8 |
கொல்லும் தொழிலில் வல்ல மழுவாயுதத்தோடு, அழகிய வில்லையும் கையில் ஏந்தி, கரையோடு மோதும் நீர் நிரம்பிய அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியிருக்கும், இலை வடிவமான முத்தலைச் சூலத்தைப் படையாகக் கொண்ட சிவபெருமான் திருவடிகளை நாள்தோறும் நிலையாக நினைவார்பால் வினைகள் சாரா.
901 |
சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய நறையார் மலரானும் மாலும் காண்பொண்ணா இறையான் கழலேத்த வெய்தும் மின்பம்மே. |
1.083.9 |
சிறகுகளை உடைய வரி வண்டுகள் தேனுண்டு இசைபாட, வேதம் ஓதும் அந்தணர் நிறைந்த அம்பர் மாகாளத்தில்எழுந்தருளியிருப்பவனும், தேன் நிறைந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் காண ஒண்ணாத தலைமையாளனுமாய சிவபிரான் திருவடிகளை ஏத்தினால் இன்பம் கிடைக்கும்.
902 |
மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார் கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய ஈசா வென்பார்கட் கில்லை யிடர்தானே. |
1.083.10 |
அழுக்கடைந்த மேனியரும், துன்ப வடிவினராகி, மண்டை என்னும் பாத்திரத்தில் உணவு கொள்பவருமாய புத்தரும், சமணரும் மனம் கூசாமல் கூறும் பொய்யுரைகளை ஏற்றுக் கொள்ளல் நன்மை தாராது. மணம் கமழும் பொழில் சூழ்ந்த அம்பர் மாகாளத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே என்று கூறுபவர்கட்கு இடர் வாராது.
903 |
வெரிநீர் கொளவோங்கும் வேணு
புரந்தன்னுள் திருமா மறைஞான சம்பந் தனசேணார் பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே. |
1.083.11 |
அஞ்சத்தக்க ஊழி வெள்ளம். உலகத்தை மூட, அவ்வெள்ளத்தே ஓங்கிமேல் மிதந்த வேணுபுரம் என்னும் சீகாழிப் பதியுள் தோன்றிய அழகியனவும் சிறந்தனவுமான வேதங்களில் வல்ல ஞானசம்பந்தனுடைய இத்திருப்பதிகப் பாடல்களை, விண்ணோர் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள அம்பர் மாகாளத்தை விரும்பித் தொழுது உருகி உரை செய்பவர் உயர்ந்த வானோர் உலகத்தை அடைவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.083.திரு அம்பர்மாகாளம் , மாகா, ளம்மேய, அம்பர், மாகாளத்தில், திருவடிகளை, எழுந்தருளிய, பொழிலம்பர், சூழ்ந்த, மணம், பொருந்திய, நிறைந்த, உடைய, வல்ல, கழலேத்த, வண்டுகள், அம்பர்மாகாளம், திருமுறை, நம்மை, சிவபிரான், கமழும், நாள்தோறும், கழனாளும், பெருமான், திரு, சாரா, புனலம்பர், ஏத்தினால், எழுந்தருளியிருக்கும், குறுகா, உலகத்தை, தோன்றிய, நீங்கா, சிவபெருமான், மலியம்பர், என்னும், விளங்குகின்ற, மண்டை, எழுந்தருளியுள்ள, தனது, அழகிய, வரிவண்டு, தேன், பகைவராகிய, அசுரர்களின், புனல், வினைதானே, வெள்ளைப், தேவாரப், பதிகங்கள், திருச்சிற்றம்பலம், வளம், வெண்மையான, சூடி, திருவடிகளைப், வாய்ந்த, முடியில், கங்கை, ஆகிய, வினைகள், பொழில்