முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.024.சீகாழி
1.024.சீகாழி
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
250 |
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே. |
1.024.1 |
பாடல்களின் சொற்பொருளாய்க் கலந்து நிற்கும் பரமர், பக்தர்கள், "கொன்றைப் பூக்கள் பொருந்திய முறுக்கேறிய செஞ்சடை ஈசா காவாய்!" என நின்று துதித்துப் போற்றும் சீகாழிப் பதியினராவார். மனம் ஒன்றாத அசுரர்களின் மூன்று புரங்களை அழித்தவரும் அவரேயாவார்.
251 |
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார் வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் அந்தி நட்ட மாடும் மடிகளே. |
1.024.2 |
அந்திக் காலத்தில் நடனம் ஆடும் அடிகளாகிய இறைவர், தேவர்கள் எந்தையே என அன்போடு அழைத்து ஆலயத்துட் புகுந்து குழுமி மணம்மிக்க மாலைகளை அணிவித்தற் பொருட்டுச் சேரும் சீகாழிப் பதியினராவார். அவரே நன்றாகச் சுட்டு எடுத்த திருநீற்றை அணிந்தவரும், குற்றம் அற்றவருமாவார்.
252 |
தேனை வென்ற மொழியா ளொருபாகங் கான மான்கைக் கொண்ட காழியார் வான மோங்கு கோயி லவர்போலாம் ஆன வின்ப மாடும் மடிகளே. |
1.024.3 |
முற்றிய இன்பத்தோடு ஆடுகின்ற சிவபிரான், இனிப்பில் தேனை வென்று விளங்கும் மொழிகளைப் பேசுகின்ற உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காட்டில் திரியும் இயல்பினதாகிய மானைக் கையின்கண் ஏந்தி விளங்கும் காழிப் பதியினராவார். அவர் வானளாவ உயர்ந்த திருக்கோயிலில் விளங்குபவர் ஆவார்.
253 |
மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக் களித்த காழியார் நாணார் வாளி தொட்டா ரவர்போலாம் பேணார் புரங்க ளட்ட பெருமானே. |
1.024.4 |
தம்மைப் பேணி வழிபடாத அசுரர்களின் முப்புரங்களை அழித்த பெருமான், மாட்சிமையில்லாத வெற்றியை உடைய காலனை மடியுமாறு செய்து, தம்மையன்றி வேறொன்றையும் காணாத மார்க்கண்டேய முனிவருக்கு என்றும் பதினாறாண்டோடு விளங்கும் வரத்தை அளித்தருளிய காழிப் பதியினர் ஆவார். முப்புரங்களை அழித்தற்பொருட்டு நாணிற் பூட்டிய அம்பைத் தொடுத்த வருமாவார்.
254 |
மாடே யோத மெறிய வயற்செந்நெற் காடே றிச்சங் கீனுங் காழியார் வாடா மலராள் பங்க ரவர்போலாம் ஏடார் புரமூன் றெரித்த விறைவரே. |
1.024.5 |
குற்றம் பொருந்திய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தருளிய இறைவர், அருகில் கடல் நீரின் அலைகள் எறிந்த சங்குகள் வயல்களில் விளைந்த செந்நெற் பயிர்களின் செறிவில் ஏறி முத்துக்களை ஈனும் சீகாழிப் பதியினர். அவர் வாடா மலர்களைச் சூடி விளங்கும் பார்வதி தேவியைத்தம் திருமேனியின் ஒரு பங்காக உடையவராவார்.
255 |
கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார் அங்க ணரவ மாட்டு மவர்போலாஞ் செங்க ணரக்கர் புரத்தை யெரித்தாரே. |
1.024.6 |
சிவந்த கண்களை உடைய அரக்கர் மூவரின் திரிபுரங்களை எரித்தவராகிய இறைவர், கோங்கு, செருந்தி, கொன்றை மலர் இவற்றுடன் கங்கையை அணிந்துள்ள சடைமுடியினர். அக்காழியர் தாம் அணிந்துள்ள பாம்புகளை அவ்விடத்தே தங்கி ஆட்டுபவராகவும் உள்ளார்.
256 |
கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங் கல்ல வடத்தை யுகப்பார் காழியார் அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரே. |
1.024.7 |
எல்லா இடங்களிலும் நிறைந்து விளங்கும் பரமராகிய பெருமானார், முல்லை நிலத்துக்குரிய ஆன் ஏற்றை ஊர்ந்து அதன் முன்னே பூத கணங்கள் வளைந்து நௌந்து ஆடிச்செல்லக் கல்லவடம் என்னும் பறையை விரும்புபவர். அக்காழியார் தம்மை அறிந்து போற்றுநர் அல்லாதார் இடங்களிலும் தோன்றி அருள் வழங்கும் இயல்பினர்.
257 |
எடுத்த வரக்க னெரிய விரலூன்றிக் கடுத்து முரிய வடர்த்தார் காழியார் எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே. |
1.024.8 |
பொடியாக அமைந்த திருநீற்றைப் பூசும் தூயவராகிய பெருமானார், கயிலைமலையை எடுத்த இராவணனின் முடிகள் நெரியுமாறு தம் கால் விரலை ஊன்றிச் சினந்து அவனது ஆற்றல் அழியுமாறு அடர்த்தவர். அக்காழியார் இராவணன் எடுத்த பாடலாகிய சாமகானத்துக்கு இரங்கி அருள் செய்தவராவார்.
258 |
ஆற்ற லுடைய வரியும் பிரமனுந் தோற்றங் காணா வென்றிக் காழியார் ஏற்ற மேறங் கேறு மவர்போலாங் கூற்ற மறுகக் குமைத்த குழகரே. |
1.024.9 |
வாழ்நாளைக் கூறுபடுத்திக் கணக்கிட்டு உயிர்கொள்ளும் இயமன் அஞ்சுமாறு அவனை உதைத்து, மார்க்கண்டேயர்க்கு அருள்செய்த குழகராகிய சிவபிரானார், ஆற்றல் உடைய திருமாலும் பிரமனும் தம் அடிமுடிகள் தோன்றுமிடங்களைக் காணாதவாறு வானுற ஓங்கிய வெற்றியை உடையவராய்க் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளார். அவர் மிக உயர்ந்த ஆன்ஏற்றில் ஏறி உலா வந்து அருள்பவராவார்.
259 |
பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர் கரக்கு முரையை விட்டார் காழியார் இருக்கின் மலிந்த விறைவ ரவர்போலாம் அருப்பின் முலையாள் பங்கத் தையரே. |
1.024.10 |
தாமரை அரும்பு போன்ற தனபாரங்களை உடைய உமையம்மையை ஒருபங்காகக் கொண்டுள்ள தலைவராகிய சிவபிரான், உண்மையின்றி மிகப் பிதற்றுகின்ற சமணர் சாக்கியர்களின் வஞ்சக உரைகளைக் கொள்ளாதவராய்க் காழியில் எழுந்தருளியுள்ளார். அவரே இருக்கு வேதத்தில் நிறைந்துள்ள இறைவரும் ஆவார்.
260 |
காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச் சீரார் ஞான சம்பந் தன்சொன்ன பாரார் புகழப் பரவ வல்லவர் ஏரார் வானத் தினிதா விருப்பரே. |
1.024.11 |
நீர் வளத்தால் கருஞ்சேறுபட்டு விளங்கும் வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் விளங்கும் கோமகனாகிய சிவபிரான்மீது, சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் அருளிச்செய்த பாடல்களை ஓதி உலகோர் போற்றத் துதிக்க வல்லவர், அழகிய வானகத்தில் இனிதாக இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.024.சீகாழி , காழியார், விளங்கும், ரவர்போலாம், எடுத்த, சீகாழிப், உடைய, பொருந்திய, பதியினராவார், இறைவர், திருமுறை, ஆவார், அவர், அசுரர்களின், சீகாழி, கொன்றை, செருந்தி, வாடா, வெற்றியை, பதியினர், அணிந்துள்ள, அக்காழியார், எழுந்தருளியுள்ளார், சமணர், வல்லவர், ஆற்றல், பூசும், பெருமானார், முப்புரங்களை, அருள், இடங்களிலும், உமையம்மையை, பயிலும், பரமரே, மாடும், புரமூன், தேவாரப், திருச்சிற்றம்பலம், கொன்றைப், மடிகளே, அவரே, காழிப், உயர்ந்த, வென்றிக், பதிகங்கள், சிவபிரான், குற்றம், தேனை, காணா