முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.125.திருச்சிவபுரம் - திருவிராகம்
1.125.திருச்சிவபுரம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - வியாழக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1348 |
கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன் முலைமலி தருதிரு வுருவம துடையவன் சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே. |
1.125.1 |
மேகலை பொருந்திய அகன்ற அல்குலை உடைய உமையம்மை இடப்பாகமாகப் பொருந்திய திருவுருவினனும், அதனால் ஒரு கூற்றில் நகில் தோன்றும் திருவுருவை உடையவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய கருங்கற்களால் இயன்ற மதில்களால் பொதியப் பட்டுள்ள சிவபுர நகரைத் தொழுதால் நம்மை நலியும் வினைகள் இல்லை. இருமையிலும் இடர கெடும்.
1349 |
படரொளி சடையினன் விடையினன்
மதிலவை சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம் இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே. |
1.125.2 |
ஒளி விரிந்த சடையினனும், விடை ஊர்தியனும் அசுரர்களின் மும்மதில்களை விளங்கும் எரி கொள்ளுமாறு செய் தழித்தவனுமாகிய சிவன் உறையும் பதி ஆகிய, இடையிடையே திடலைக் கொண்ட நீர் சூழ்ந்த வயல்களை உடைய சிவபுரத்தை அடைந்து தொழுதால் நம் இடர் கெடும். உயர்கதி பெறுவது உறுதி.
1350 |
வரைதிரி தரவர வகடழ லெழவரு நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ் திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம் உரைதரு மடியவ ருயர்கதி யினரே. |
1.125.3 |
மந்தரமலை மத்தாகச் சுழல அதில் கயிறாகச் சுற்றிய வாசுகி என்னும் பாம்பின் வயிற்றிலிருந்து அழலாகத் தோன்றி, நுரையுடன் வெளிப்பட்ட விடம், கடலில் பொருந்த, ஆலகாலம் என்னும் அந்நஞ்சினை உண்டவனுடைய, அழகு விளங்கக் கரையில் மோதும் நீர் நிறைந்த அரிசிலாற்றங்கரையில் விளங்கும் சிவபுரத்தின் பெயரைக் கூறுபவர் உயர்கதிகளைப் பெறுவர்.
1351 |
துணிவுடை யவர்சுடு பொடியின ருடலடு பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர் தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய மணிமிட றனதடி யிணைதொழு மவரே. |
1.125.4 |
அடக்கமுடைய மக்கள் வாழும் சிவபுரத்தில் எழுந்தருளிய நீலமணிபோலும் மிடற்றினை உடைய சிவபிரானுடைய திருவடிகளை வணங்குவோர் துணிபுடையவராவர். திருநீறு பூசும் அடியவர் ஆவர். உடலை வருத்தும் பிணிகளை அடையார். பிறவியும் நீங்கப் பெறுவர்.
1352 |
மறையவன் மதியவன் மலையவ னிலையவன் நிறையவ னுமையவண் மகிழ்நட நவில்பவன் இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம் உறைவென வுடையவ னெமையுடை யவனே. |
1.125.5 |
தேவர்கள் செய்யும் பணிவிடைகளை ஏற்றுச் சிவபுரத்தைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் எம்மை அடிமையாகக் கொண்டவனுமாகிய சிவபிரான் வேதங்களை அருளியவன். பிறை சூடியவன். கயிலை மலையைத் தனது இடமாகக் கொண்டவன். நிலைபேறு உடையவன். எங்கும் நிறைந்தவன். உமையம்மை கண்டு மகிழும் நடனத்தைப் புரிபவன். எல்லோர்க்கும் தலைவன்.
1353 |
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன் எதிர்பவர் புரமெய்த விணையிலி யணைபதி சதிர்பெறு முளமுடை யவர்சிவ புரமே. |
1.125.6 |
முதிர்ந்த சடையின்மீது இளம்பிறை, கங்கை நதி ஆகியவற்றைப் பொருந்த அணிந்து, காலில் அசையும் கழல்கள் ஒலிக்குமாறு அரிய நடனம் புரிபவனும், தன்னை எதிர்த்த அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த ஒப்பற்றவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், திறமையான மனம் உடைய அடியவர் வாழும் சிவபுரமாகும்.
1354 |
வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர் பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன் செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம் அடைதரு மடியவ ரருவினை யிலரே. |
1.125.7 |
அழகிய வடிவினைக் கொண்ட மலைமகள் நீர்மகளாகிய கங்கை ஆகியோருடன் புள்ளி பொருந்திய மானினது தோல் விளங்கும் அழகிய உருவத்தைக் கொண்டவனும், தீ நாற்றம் வீசும் மண்டையோட்டில் பிச்சையை ஏற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் சிவபுரத்தை அடையும் அடியவர் நீங்குதற்கரிய வினைகள் இலராவர்.
1355 |
கரமிரு பதுமுடி யொருபது முடையவன் உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை பரனென வடியவர் பணிதரு சிவபுர நகரது புகுதனம் முயர்கதி யதுவே. |
1.125.8 |
இருபது கைகளையும், பத்துத் தலைகளையும் உடையவனாகிய இராவணனின் மார்பு நெரியுமாறு கயிலை மலையால் அடர்த்தருளிய சிவபிரான் உறைவதும், மேலான பரம் பொருள் இவனேயாவான் என அடியவர் வழிபாடு செய்வதும் ஆகிய சிவபுரத்தை அடைதல் நமக்கு உயர் கதியைத் தரும்.
1356 |
அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர் சென்றள விடலரி யவனுறை சிவபுரம் என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர் ஒன்றிலர் புகழொடு முடையரிவ் வுலகே. |
1.125.9 |
தங்கள் செயலுக்கு மாறுபட்ட தன்மையொடு கூடிய பன்றி அன்னம் ஆகிய வடிவங்களைக் கொண்ட திருமால் பிரமன் ஆகியோர் சென்று அளவிடுதற்கு அரியவனாய் ஓங்கிசிவபிரான் உறையும் சிவபுரம் என்று இருபொழுதுகளிலும் நினைத்து வழிபடும் அடியவர் ஒரு துன்பமும் இலராவர். இவ்வுலகில் புகழோடும் பொருந்தி வாழ்வர்.
1357 |
புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை வித்தக மொழிகில விடையுடை யடிகடம் இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம் மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே. |
1.125.10 |
புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும், அவை அறிவுடைமைக்கு ஏற்ப மொழியாதவை. அவற்றை விடுத்து விடையூர்தியை உடையதலைவனாகிய சிவபிரானை நோக்கிச் செய்யும் இத்தவத்தைச் செய்யும் முயற்சியை மேற்கொள்வீராயின் அவ்விறைவனது சிவபுரத்தைச் சென்றடைந்து வழிபடுதல் சிறந்த குணங்களை உங்கட்குத் தரும்.
1358 |
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை எந்தையை யுரைசெய்த விசைமொழி பவர்வினை சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே. |
1.125.11 |
அறிவுடையவர்கள் ஓதும் வேதங்களை ஓதி உணர்ந்த புகலி மன்னனாகிய ஞானசம்பந்தன் தமிழைக் கொண்டு சிவபுர நகரில் உறையும் எந்தையைப் போற்றி உரை செய்த இவ்விசை மாலையை ஓதி வழிபடுபவர் வினைகள் முற்பட்டு நீங்க உயர்கதி பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதல் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 1.125.திருச்சிவபுரம் - திருவிராகம் , சிவபுர, சிவபுரம், சிவபிரான், அடியவர், ஆகிய, உறையும், உடைய, விளங்கும், திருமுறை, செய்யும், சிவபுரத்தை, வினைகள், கொண்ட, பொருந்திய, திருச்சிவபுரம், எழுந்தருளிய, திருவிராகம், கொண்டவனும், தேவாரப், பதிகங்கள், நவில்பவன், தனது, கயிலை, இலராவர், தரும், அழகிய, மலைமகள், வாழும், கங்கை, வேதங்களை, என்னும், அசுரர்களின், உமையம்மை, பெறுவது, முயர்கதி, கெடும், திருச்சிற்றம்பலம், நீர், பொருந்த, தொழுதால், மடியவ, உயர்கதி, பெறுவர்