தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 தோபியோ, கடவுளின் தூதரது வார்த்தையை நினைவு கூர்ந்தவனாய்த் தன் பையிலிருந்த ஈரலின் ஒரு துண்டை எடுத்து, அதை நெருப்பிலிட்டான்.
3 அப்போது இரபாயேல் என்ற தூதர் பேயைப் பிடித்து மேற்கு எகிப்தின் பாலைவனத்தில் கட்டிப்போட்டான்
4 பின்னர் தோபி கன்னியைப் பார்த்து, "சாராளே, எழுந்திரு. இன்றிரவும் நாளையும் நாளைக் கழித்தும் நாம் கடவுளை மன்றாடுவோம். ஏனெனில், இம் மூன்றிரவும் கடவுளுடன் நாம் ஒன்றித்திருந்து, மூன்றாவது இரவு கழிந்த பின் நமது இல்வாழ்வில் இணைவோம்.
5 நாம் புனிதர்களின் மக்கள் அல்லவா? கடவுளை அறியாத புறவினத்தாரைப் போல் நாம் உறவு கொள்ளக் கூடாது" என்று புத்தி சொன்னான்.
6 எனவே இருவரும் எழுந்து தங்களுக்கு வாழ்வு பிறக்க வேண்டும் என்று உருக்கத்துடன் வேண்டிக் கொண்டனர்.
7 அப்பொழுது தோபி சொன்ன செபமாவது: "எங்கள் முன்னோரின் ஆண்டவரான கடவுளே, விண்ணும் மண்ணும் கடலும் நீர் ஊற்றுகளும் அருவிகளும் அவற்றிலுள்ள எல்லாப் படைப்புகளும் உம்மை வாழ்த்தட்டும்!
8 நீர் களிமண்ணைக் கொண்டு ஆதாமைப் படைத்து, ஏவாளை அவனுக்குத் துணைவியாகக் கொடுத்தீர்.
9 இப்பொழுதும், ஆண்டவரே, நான் என் உறவினளாகிய இப்பெண்னை மணந்து கொண்டது உமது திருப்பெயர் என் சந்ததியில் என்றென்றும் வாழ்த்தப்படும்படியாகவே அன்றி, என் உடல் இச்சையை நிறைவேற்றுவதற்காக அல்ல என்று நீர் அறிவீர்."
10 சாராளும் கடவுளை நோக்கி, "ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும். நாங்கள் இருவருமே நலமுடன் முதிர் வயதை அடைய அருள் தாரும்" என்று வேண்டிக் கொண்டாள்.
11 கோழி கூவும் நேரத்தில் இரகுவேல் தம் ஊழியர்களை அழைத்து வரக் கட்டளையிட்டார். அவர்கள் அவரோடு போய்த் தரையில் ஒரு குழியை வெட்டினர்.
12 ஏனெனில் இரகுவேல், "முன்பு அவளோடு உறவு வைத்திருந்த ஏழு கணவர்களுக்கும் வந்த கதி இவனுக்கும் நேரிட்டிருக்கக் கூடும்" என்று தமக்குள்ளே கூறிக்கொண்டார்.
13 குழி வெட்டியதும் இரகுவேல் தம் மனைவியிடம் திரும்பி வந்து அவளை நோக்கி, "நீ உன் வேலைக்காரிகளில் ஒருத்தியை அனுப்பி, அவன் இறந்து பட்டானோ என்று பார்த்து வரச் சொல்.
14 ஏனெனில், அவன் இறந்து போயிருந்தால் பொழுது விடியு முன்பே அவனைப் புதைத்து விட வேண்டும்" என்றார்.
15 அவள் வேலைக்காரிகளில் ஒருத்தியை அனுப்பி வைத்தாள். இவள் மணவறையில் நுழைந்து அவர்கள் இருவரும் நலமுடன் சேர்ந்து படுத்துத் தூங்குவதைக் கண்டு திரும்பி வந்து அவர்களுக்கு அந்நற்செய்தியை அறிவித்தாள்.
16 இரகுவேலும் அவர் மனைவி அன்னாளும் ஆண்டவரைப் புகழ்ந்தனர்.
17 இஸ்ராயேலின் ஆண்டவரான கடவுளே, நாங்கள் நினைத்திருந்தபடி நிகழாததனால் உம்மைப் போற்றிப் புகழ்கின்றோம்.
18 நீர் எங்கள் மேல் இரங்கி எங்களை வதைத்திருந்த எதிரியை எம்மிடமிருந்து அகற்றி,
19 எமது ஒரே மகனும், ஒரே மகளுமான இவ்விருவர் மேலும் இரக்கம் வைத்தீர். ஆண்டவரே, மண்ணின் எவ்விடத்திலும் நீர் ஒருவரே கடவுள் என்று எல்லா இனத்து மக்களும் அறிந்து கொள்ளும்படி, இவ்விருவரும் உம்மை முற்றும் துதிக்கவும், உமக்கு நன்றியறிதலாகவும், தங்கள் உடல் நலத்தின் பொருட்டும் அவர்கள் உமக்குப் பலிகளை ஒப்புக் கொடுக்கவும் அருள் செய்யும்" என்றனர்.
20 உடனே இரகுவேல் தம் ஊழியரை அழைத்து அவர்கள் வெட்டியிருந்த குழியை விடியு முன் மூடி விடக் கட்டளையிட்டார்.
21 பிறகு தம் மனைவியைப் பார்த்து, ஒரு விருந்தையும், வழிப் பயணத்திற்குத் தேவையான எல்லாவித உணவு வகைகளையும் தயாரிக்கக் கட்டளையிட்டார்.
22 மேலும், இரண்டு கொழுத்த பசுக்களையும் நான்கு செம்மறிக் கிடாய்களையும் அடிக்கச் சொல்லித் தம் அயலார், நண்பர் ஆகிய அனைவருக்கும் விருந்து தயார் செய்தார்.
23 பின்னர் தோபி தம்மோடு இரண்டு வாரம் தங்கியிருக்குமாறு இரகுவேல் அவனை வேண்டிக் கொண்டார்.
24 இரகுவேல் தம் உடைமைகள் அனைத்திலும் ஒரு பாதியைத் தோபிக்குக் கொடுத்தார். அத்தோடு தங்கள் சாவுக்குப்பின் அந்த மறு பாதியும் அவனுக்குச் சொந்தமாகும் என்று எழுதிக் கொடுத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, ", இரகுவேல், ஏற்பாடு, நீர், நாம், பழைய, ஏனெனில், கடவுளை, வேண்டிக், எங்கள், கட்டளையிட்டார், ஆகமம், தொபியாசு, ஆண்டவரே, பார்த்து, வந்து, தோபி, வேலைக்காரிகளில், ஒருத்தியை, திரும்பி, குழியை, ஆன்மிகம், அனுப்பி, இறந்து, இரண்டு, கொடுத்தார், தங்கள், மேலும், அழைத்து, விடியு, அவன், நலமுடன், கடவுளே, உணவு, ஆண்டவரான, பின்னர், உறவு, இருவரும், உம்மை, திருவிவிலியம், நாங்கள், அருள், மேல், நோக்கி, உடல், இரவு