தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 6
2 அவன் நதியிலே கால் அலம்பப் போன போது, இதோ! பெரிய மீன் ஒன்று அவனை விழுங்க வந்தது.
3 தோபி அதைக் கண்டு அஞ்சி, "ஐயா, என்னை விழுங்க வருகிறதே!" என்று அலறினான்.
4 கடவுளின் தூதர் அவனை நோக்கி, "அதைச் செவுள்களாலே பிடித்து இழு" என்றார். அவனும் அவ்வாறே செய்து கரை வரை அதை இழுக்க, அது அவன் முன்பாகவே துடிதுடித்துச் செத்தது.
5 பின்னர் கடவுளின் தூதர் தோபியைப் பார்த்து, "மீனின் வயிற்றைக் கிழித்து, அதன் இதயத்தையும் பித்தப் பையையும் ஈரலையும் எடுத்துப் பத்திரமாய் வை. ஏனெனில் நல்ல மருந்துகளைத் தயாரிக்க அவை உதவும்" என்றார்.
6 அவனும் அவ்வண்ணமே செய்தான். பின்பு மீனின் ஒரு பகுதியை அப்போதைய தேவைக்கு எடுத்துக் கொண்டு போய்ப் பொரித்தார்கள். மீதியை உப்பு போட்டு மேதியருடைய இராஜேசு நகரை அடையும் வரைத் தங்கள் செலவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்கள்.
7 பிறகு தோபி கடவுளின் தூதரை நோக்கி, "சகோதரன் அசாரியாசே, நீ மீனிலிருந்து எடுத்துப் பதனப்படுத்தச் சொல்லியவை எதற்கு மருந்தாகும்? தயவுசெய்து சொல்" என்று கேட்டான்.
8 அதற்குக் கடவுளின் தூதர் அவனை நோக்கி, "அதனுடைய இதயத்தின் ஒரு பகுதியை நெருப்பில் போட்டால், அதிலிருந்து கிளம்பும் புகையானது ஆண், பெண் அனைவரிடமும் உள்ள எவ்விதப் பேய்களையும் ஓட்டி விடும். அதன் பின்னர் அவை அவர்களை நெருங்கா.
9 அதன் பித்த நீரையோ கண் படலமுள்ளவர்கள் கண்ணிலே பூசினால் அவர்கள் நலம் அடைவார்கள்" என்றார்.
10 அதன் பிறகு தோபி கடவுளின் தூதரைப் பார்த்து, "நாம் இன்று எங்கே தங்கலாம் என்று நினைக்கிறீர்?" என்று கேட்டான்.
11 அதற்குத் தூதர், "இந்த ஊரில் உன் குலத்தினனும் உனக்கு உறவினனுமான இரகுவேல் வாழ்ந்து வருகிறான். சாராள் என்ற பெயர் கொண்ட ஒரு மகள் அவனுக்கு உண்டு. அவளைத் தவிர அவனுக்கு வேறு மகனோ மகளோ இல்லை.
12 நீ அவளை உன் மனைவியாகக் கொள்வாயானால் அவனுடைய உடைமைகள் அனைத்தும் உனக்குக் கட்டாயம் வந்து சேரும்.
13 எனவே, அவளை உனக்கு மனைவியாகத் தரும்படி அவளுடைய தந்தையிடம் கேள். அவனும் அவளை உனக்கு மணம் செய்து கொடுப்பான்" என்றார்.
14 தோபி அவரை நோக்கி, "ஆனால் அவள் ஏழு கணவர்களுக்கு வாழ்க்கைப் பட்டிருந்ததாகவும், அவர்கள் அனைவருமே இறந்து விட்டதாகவும் கேள்விப்பட்டேனே, மேலும் பேய் தான் அவர்களைக் கொன்றுப் போட்டதாகவும் சொல்லுகிறார்களே.
15 அப்படி என்றால் எனக்கும் அவ்வாறே நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். நானோ என் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. அப்படி இருக்க, நான் செத்தால் வயதான அவர்கள் என் மேலுள்ள ஏக்கத்தினால் உயிரை விடுவார்கள்" என்று மறுமொழி சொன்னான்.
16 இரபாயேல் என்ற தூதர் அவனுக்கு மறு மொழியாக, "நான் சொல்வதைக் கேள். பேயின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள் யார் யார் என்று உனக்குக் காண்பிப்பேன்.
17 தங்களிடமிருந்தும் தங்கள் எண்ணத்தினின்றும் கடவுளைக் தள்ளிவிட்டு, அறிவற்ற குதிரையையும் கோவேறு கழுதையையும் போல் தமது காம இச்சையை நிறைவேற்றுவதற்காகத் திருமணம் செய்து கொள்பவர்கள் மேல் மட்டுமே பேய்க்கு வல்லமை உண்டு.
18 நீயோ அவளை ஏற்றுக் கொண்டபின் மணவறையில் நுழைந்து மூன்று நாள் வரை அவளோடு தொடர்பு கொள்ளாது அவளோடு சேர்ந்து செபம் மட்டும் செய்.
19 அன்றிரவு நீ மீனின் ஈரலைப் புகைக்கவே பேய் ஓடிப் போகும்.
20 இரண்டாம் இரவு புனித குலத் தந்தையார் கூட்டத்தில் நீயும் ஏற்றுக் கொள்ளப் பெறுவாய்.
21 மூன்றாம் இரவு உங்களுக்கு நல்ல மகப்பேறு கிடைக்கும் பொருட்டு நீ இறை ஆசீரை அடைந்திடுவாய்.
22 மூன்றாம் இரவு கழிந்த பின், ஆபிரகாம் சந்ததியில் மகப்பேற்றைப் பெறக் கருதி, மோக இச்சையை நிறைவேற்றுவது பற்றி அத்துணை நினையாது, மகப்பேற்றையே தலையானதாய் விரும்பித் தெய்வ பயத்தோடு அக்கன்னிப் பெண்ணுடன் உறவு கொள்" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, ", கடவுளின், என்றார், தூதர், தோபி, ஏற்பாடு, பழைய, அவன், நோக்கி, அவளை, இரவு, செய்து, உனக்கு, அவனும், தொபியாசு, அவனுக்கு, மீனின், ஆகமம், அவனை, பேய், அப்படி, கேள், உனக்குக், நான், இச்சையை, மூன்றாம், அவளோடு, ஏற்றுக், திருவிவிலியம், யார், புனித, எடுத்துப், நல்ல, பார்த்து, பின்னர், விழுங்க, பகுதியை, தங்கள், அவ்வாறே, ஆன்மிகம், கேட்டான், பிறகு, உண்டு