தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 2
2 அப்பொழுது அவர் தம் மகனை நோக்கி, "நம் குலத்தாரில் தெய்வபயமுள்ள சிலரை விருந்துக்கு அழைத்துவா" என்று சொன்னார்.
3 அவனும் அவ்வாறே சென்றான். திரும்பி வந்த போது, "இஸ்ராயேல் மக்களுள் ஒருவன் கொலை செய்யப்பட்டுத் தெருவிலே கிடக்கிறான்" என்று தன் தந்தையிடம் சொல்லவே, அவர் அவ்வினாடியே பசியோடு பந்தியை விட்டு எழுந்து பிணம் கிடந்த இடத்திற்குச் சென்றார்.
4 சூரியன் மறைந்த பின் அவனை எச்சரிக்கையாய் அடக்கம் செய்யலாம் என்று எண்ணி, ஒருவருக்கும் தெரியாமல் பிணத்தைத் தம் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு வந்தார்,
5 அதை அங்கே மறைத்து வைத்து விட்டு, ஆறாத்துயரோடும் திகிலோடும் உணவு அருந்தினர்.
6 ஏனெனில், "உங்கள் திருநாட்களைத் துக்கமும் புலம்பலும் நிறைந்த நாட்களாக மாற்றுவோம்" என்று இறைவாக்கினார் ஆமோசு மூலம் கடவுள் கூறியிருந்த வாக்கு அவரது நினைவுக்கு அப்போது வந்தது.
7 சூரியன் மறைந்த பின், அவர் போய்ப் பிணத்தைப் புதைத்தார்.
8 எனவே, அவருடைய அயலார் அனைவரும் அவரைக் கடிந்து பேசி, "இதே செயலைச் செய்ததற்காக முன்பு ஒரு முறை சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டும், எப்படியோ தப்பித்துக் கொண்டீர், மறுபடியும், நீர் இறந்தோரை அடக்கம் செய்யத் துணிந்தது ஏன்?" என்றனர்.
9 ஆனால் அரசனுக்கு அஞ்சுவதை விடத் தொபியாசு கடவுளுக்கே அதிகம் அஞ்சி வந்தார். ஆதலால், கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைத் தூக்கி வந்து தம் வீட்டிலேயே ஒளித்து வைத்து, நள்ளிரவில் அவற்றை அடக்கம் செய்து வந்தார்.
10 அன்றொரு நாள் நிகழ்ந்ததாவது: அவர் அன்று அடக்கம் செய்த களைப்பில், தம் வீட்டிற்குத் திரும்பி வந்து, அங்கே சுவரோரமாய்க் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்.
11 அப்பொழுது தூக்கணாங்குருவிக் கூண்டிலிருந்து சூடான எச்சம் தூங்கிக் கொண்டிருந்த அவர் கண்களில் விழ, அவை குருடாயின.
12 புனித யோபின் பொறுமையைப் போல், இவரது பொறுமையும் இவருடைய சந்ததியாருக்கு எடுத்துக் காட்டாய் இருக்கும் பொருட்டே, இச்சோதனை இவருக்கு நேரிடக் கடவுள் திருவுளமானார்.
13 இவர் இளமை முதல் எப்போழுதும் கடவுளுக்கு அஞ்சி, அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்து வந்திருந்தபடியால், பார்வையிழந்த இந்த அவல நிலையிலும், அதுப்பற்றிக் கடவுளுக்கு எதிராய் அவர் முறையிடவில்லை.
14 அதற்கு மாறாக, அவர் தெய்வ பயத்தில் நிலையாய் நின்று தம் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கு நன்றி கூறி வந்தார்.
15 ஏனெனில், புனித யோபை மன்னர்கள் பழித்தது போல், இவருடைய உற்றார் உறவினரும் இவரது நடத்தையை இகழ்ந்து பேசினார்கள்.
16 நீர் எதை நம்பித் தர்மம் கொடுத்தும், இறந்தோரை அடக்கம் செய்தும் வந்தீரோ, அந்த உமது நம்பிக்கை வீண்போயிற்று அன்றோ?" என்று அவரைப் பழித்து வந்தார்கள்.
17 தொபியாசோ அவர்களைக் கடிந்து, "நீங்கள் இவ்வாறு பேசாதீர்கள். ஏனெனில், நாம் புனிதர்களின் மக்கள்.
18 கடவுள் மேல் என்றுமே தளரா விசுவாசம் கொண்டிருப்போருக்கு அவர் அளிக்கவிருக்கும் மறுவுலக வாழ்வை எதிர்பார்ப்போர் நாம்" என்பார்.
19 அவருடைய மனைவி அன்னாள் நாள் தோறும் நெசவு வேலைக்குப் போய்த் தன் சொந்த உழைப்பால் பெறக்கூடிய ஊதியத்தை வீட்டிற்குக் கொண்டு வருவாள்
20 ஒருநாள், அவள் ஓர் ஆட்டுக் குட்டியை வாங்கி அதை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வந்தாள்.
21 அவளுடைய கணவர் அது கத்தக்கேட்டு, "இது களவு செய்யப்பட்ட ஆடு அல்ல என்று பார்த்துக் கொள். களவு செய்யப்பட்டதாயின் அதன் உரிமையாளரிடம் திரும்பிக் கொடுத்து விடு. ஏனெனில், களவு செய்யப்பட்ட பொருளைத் தொடுவதும் உண்ணுவதும் நமக்கு ஆகாது" என்றார்.
22 இதைக்கேட்ட அவருடைய மனைவி கோபம் கொண்டு, "உமது நம்பிக்கை எல்லாம் வீண் என்றும், உம் தருமச் செயல்கள் அனைத்தும் இவ்வளவு தான் என்றும் இப்போது நான் தெளிவாய்க் காண்கிறேன்" என்றாள்.
23 இவ்வாறு அவள் அவரை ஏசினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தொபியாசு ஆகமம் - பழைய ஏற்பாடு, ", அவர், ஏற்பாடு, அடக்கம், ஏனெனில், தொபியாசு, பழைய, வந்தார், கடவுள், கடவுளுக்கு, அவருடைய, ஆகமம், களவு, புனித, கொண்டு, வந்து, நாள், தூங்கிக், போல், உமது, அவள், செய்யப்பட்ட, என்றும், மனைவி, இவ்வாறு, இவருடைய, அஞ்சி, நம்பிக்கை, இவரது, வைத்து, திரும்பி, கொலை, அப்பொழுது, போது, திருவிவிலியம், ஆன்மிகம், விட்டு, சூரியன், கடிந்து, நீர், அங்கே, வீட்டிற்குத், மறைந்த, பின், இறந்தோரை