கேள்வி எண் 96 - சட்டக்கேள்விகள் 100
96. எனக்கு வயது 52. கடந்த 10 வருடங்களாக என் மனைவி பிரிந்து வாழ்கிறாள். நான் மறுமணம் செய்யலாமா?
வணக்கம், நான் ஒரு பிராமணன், வயது 52, எனக்கு 2002ல் திருமணம் நடந்தது, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் செய்தேன். திருமணமான 3 மாதத்தில் அவள் பிறந்த வீட்டிற்கு சென்று விட்டாள். பலமுறை அழைத்தும் வர மறுக்கிறாள். பெரியோர்கள் மூலமாகவும், நேரடியாகவும் பலமுறை அவள் வீட்டிற்குச் சென்று அழைத்தும் ஏமாற்றம் தான் மிச்சம். நான் மார்க் கெட்டிங் தொழிலில் இருப்பதால் திருச்சி, பெரம்பலூர், கரூர், அரியலூர் என்று பல இடங்களுக்கு செல்ல வேண்டி யுள்ளது. ஆகையால் என்னுடன் வந்து தனியாக குடித்தனம் நடத்தும்படி பலமுறை அழைத்தும் இது நாள் வரை நல்ல பதில் இல்லை, கடைசியாக 2013ல் எங்கள் குடும்ப நண்பரான ஒரு சாஸ்திரிகள் மூலம் சென்று அழைத்தும், “என்னால் உங்களுடன் வரமுடியாது, என்னால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது, நீங்கள் உங்கள் வழியைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாள். தற்போது 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது.
ஆகையால் நான் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி யும், மறுமணம் செய்து கொள்வதற்கான ஆலோசனையும் தாங்கள் தான் அளிக்க வேண்டும். நன்றி
- V.சுரேஷ், திருச்சி
பதில் :
திருமணமாகி 3 மாதத்தில் பிரிந்ததாக கூறியுள்ளீர்கள், பொதுவாக கணவனானவன், தான் திருமணம் செய்த மனைவிக்கு, உண்ண உணவு, இருக்க இடம் போன்ற வற்றுக்கு தார்மீக காப்பாளனாக அமைவதுபோல் அதே போல் கட்டிய மனைவியும் கணவனின் நலன்களுக்கு உரிய காப்பாளராவாள், அவளுக்கு தார்மீக அடிப்படையில் கணவனுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய கடமை உள்ளது. ஆனால் சமீப காலங்களில், கணவன் கொடுமை செய்தான் என்று கூறும் பெண்ணின் கூற்றை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு மனைவி கணவனுக்கு செய்யும் கொடுமைகளை இச்சமுதாயம் ஏற்க மறுக்கிறது என்பதுதான் உண்மை. சட்டம் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்றால் அது மிகையாகாது.
நீங்கள் பிரிந்து தற்போது 10 வருடங்கள் வரை சென்றுவிட்டன. ஆகையால் இதற்கு மேல் உங்கள் இருவருக்குமான இணைப்பு என்பது என்னைப் பொறுத்தவரை சாத்திய மில்லை. ஆகையால் நீங்கள் உங்கள் மனைவியை நேரடியாக அணுகி இருவரும் இசைந்து விவாகரத்து கோர அழையுங்கள், (Divorce in Mutual consent), ஒரு வேளை அதற்கும் அவர்கள் வர மறுத்தால் உரிய வழக்குரைஞரை அணுகி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யுங்கள். நீண்ட கால இடைவெளியாதலால் நீங்கள் உடனடியாக விவாகரத்து பெற முடியும். இதில் நீங்கள் கோரும் விவாகரத்து, முறையானது என்று நீதிமன்றத்தின் முன் தெளிவுபடுத்தவேண்டும்.
மேலும் இரண்டாவது திருமணம் என்பது, முறையாக நீதி மன்றத்தில் விவாகரத்து ஆணை பெற்ற பின்னர் மட்டுமே நீங்கள் செய்துகொள்ள முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, நீங்கள், விவாகரத்து, திருமணம், அழைத்தும், ஆகையால், நான், பலமுறை, உங்கள், சென்று, தான், இதற்கு, உரிய, தார்மீக, என்பது, அணுகி, முடியும், வயது, தற்போது, மனைவி, எனக்கு, பெரியோர்கள், மாதத்தில், திருச்சி, மறுமணம், பிரிந்து, பதில், அவள்