சீசெல்சு தீவில் தமிழர் - தமிழர் வாழும் நாடுகள்
வீடு :
சீசெல்சு தமிழர்கள் கடற்கரையை ஒட்டியுள்ள சிற்றூர்களிலும், கிராமங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் குடிசை மிகவும் எளிமையானவை; பனை ஓலை வேய்ந்த கூரைகளை உடையவை. உள்ளும் புறமும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.
உணவு :
நம் நாட்டில் உள்ள காய்கறிகள் எல்லாம் மாகியில் கிடைக்கின்றன. அன்றாட உணவில் பழங்கள், காய்கறிகள் முதலியவற்றை நிறையப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு குடிசையைச் சுற்றிலும் பெரும்பாலும் தோட்டம் உண்டு. இத்தோட்டத்தில் காய்கறிகள் பயிராகின்றன. இறைச்சிக்காகப் பன்றிகளையும், கோழிகளையும் ஒவ்வொரு குடும்பத்தினரும் நிறைய வளர்க்கின்றனர்.
செய்தித் தொடர்பு :
வானொலி, தொலைக்காட்சியில் தமிழ் ஒலிபரப்புகள் உண்டு. சீசெல்சு இந்துக் கோயில் சங்கத்தின் உறுப்பினர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகள் சீசெல்சின் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுகின்றன. தமிழ்த்திரைப்படங்களை வீடியோவில் கண்டு வருகின்றனர்.
தமிழ்மொழியின் நிலை :
இந்துக் கோயில் சங்கத்தால் தமிழ்மொழி வகுப்புகள் ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிமுதல் 11 மணி வரை நடத்தப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் இல்லை. தமிழும் பேசுவது குறைந்து கிரியோலே வீட்டு மொழியாகி உள்ளது. மு.நடேசன், பழனி, சோதி மாணிக்கம் போன்றவர்கள் தமிழினிமையுடன் கவிதை எழுதி வருகின்றனர்.
அமைப்பு :
இத்தீவிலுள்ள பெரும் அமைப்பு இந்துக்கோயில் சங்கமாகும். இது சமயம், பண்பாடு, மொழி, கலை நிகழ்ச்சிகளை இங்குள்ள தமிழர்களிடம் வளர்த்து வருகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு கழகத்தின் கிளை இங்குள்ளது. அதில் ஜி.எம்.ஆர். பிள்ளை, கண்ணாபடையாச்சி முதலியோர் உள்ளனர்.
தமிழர் சாதனைகள் :
1789-இல் ரியூனியனிலிருந்து அரசு சார்பில் வந்தவர்-இராமலிங்கம். இவரைப் போன்றவர்கள் அரசு நிருவாகத்தில் முக்கிய பங்கு வகித்தனர். தீவு, சுதந்திரம் பெற்ற பிறகு அமைத்த ஆட்சியில் 1977 ஆம் ஆண்டு திரு. செட்டி என்பவர் அமைச்சராக இருந்துள்ளார்.
வணிகம், தொழில் புரிவோர் விபரம்
1864-75 காலக்கட்டத்தில் திரு. நாயக்கன் என்பவர் விக்டோரியா நகரத்தின் பெரும்பகுதி நிலவுரிமையாளரானார். வணிக முன்னோடியான இவருக்குப்பின் திரு.கந்தசாமி, திரு.பிள்ளை, ஆகியோர் சிறப்பாக வணிகத்தில் விளங்குகின்றனர். சீசெல்சு தீவில் உள்ள வியாபார நிறுவனங்கள் தமிழர் பெயரிலேயே இருக்கின்றன. குறிப்பாக தஞ்சையில் இருந்து சென்ற நாயுடு, பிள்ளை, படையாட்சி, செட்டி முதலியவர்கள் வசம் வணிக நிறுவனங்கள் உள்ளன. எல்லா கிராமத்திலும் தமிழரால் நடத்தப்படும் கடை இருக்கும். துணி ஏற்றுமதி, இறக்குமதி, வியாபாரம், உணவு, வீட்டுப் பாவனைப்பொருள்கள் வியாபாரம் தமிழரால் செய்யப்படுகின்றன. மாகித் தீவில் உள்ள மிகப் பெரிய வணிகக் கடையை வைத்து நடத்துபவர் ஒரு தமிழரே ஆவார்.
முருகன் ஸ்டோர், பாலன் ஸ்டோர்ஸ், ஸ்வாமி ஸ்டோர்ஸ், சேகர் ஸ்டோர்ஸ், மோகன் இந்து ஷாப்பிங் சென்டர், சக்தி ஸ்டூடியோ போன்ற பெயருடைய கடைகளை விக்டோரியாவிலும் பிற ஊர்களிலும் காணலாம்.
ஏர் இந்தியா விமானம் சீசெல்சு வழியாக மொரீசியசு செல்வதால், தமிழ் வியாபாரிகள் தமிழகத்தோடு நெருங்கிய தொடர்பை வைத்துக் கொண்டுள்ளனர். பல பொருள்களைத் தமிழகத்திலிருந்து வரவழைத்து விற்பனை செய்கின்றனர்.
1974-81 காலகட்டத்தில் சீசெல்சு வந்த தமிழர்கள் அனைவரும் தொழில் நுணுக்கப் பணியாளர்கள். இவர்கள் இங்கு தொழில்துறை, தொழில் நுட்பத்துறை, மேலாண்மை, நிர்வாகம், எழுத்தர், பொறியியல் போன்ற துறையில் பணியாற்றி வருகின்றனர்.
- ப. திருநாவுக்கரசு
ஆதார நூல்கள்:
1. சீசெல்சு நாட்டில் தமிழர் - க. சச்சிதானந்தம் - தமிழ்க்கலை
2. அயல்நாடுகளில் தமிழர் - எஸ். நாகராஜன்.
3. உலகத் தமிழர் 2ஆம் பாகம் - இர.ந.வீரப்பன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீசெல்சு தீவில் தமிழர் - Tamils in Seychelles - தமிழர் வாழும் நாடுகள் - Tamil Persons Living Countries - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - தமிழர், சீசெல்சு, தீவில், வாழும், நாடுகள், திரு, பிள்ளை, உள்ள, வருகின்றனர், தகவல்கள், தமிழ், காய்கறிகள், தொழில், ஸ்டோர்ஸ், தமிழ்நாட்டுத், வியாபாரம், அமைப்பு, போன்றவர்கள், தமிழரால், | , உலகத், செட்டி, என்பவர், அரசு, வணிக, பண்பாட்டு, நிறுவனங்கள், ஒவ்வொரு, living, countries, tamilnadu, persons, tamil, tamils, seychelles, information, இந்தியா, உண்டு, தொலைக்காட்சியில், இந்துக், நாட்டில், உணவு, தமிழர்கள், இவர்கள், கோயில்