சத்ய சோதனை - பக்கம் 497
தண்டனையை ஏற்றுக்கொள்ளுவதற்கு நான் கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்னாலேயே மாஜிஸ்டிரேட் எழுத்து மூலம் எனக்குத் தகவலை அனுப்பிவிட்டார். என் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கவர்னர் உத்தரவிட்டிருக்கிறார் என்று அதில் அவர் கூறியிருந்தார். கலெக்டரும் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நான் நடத்தவிருந்த விசாரணையை நான் தாராளமாக நடத்திக் கொண்டு போகலாம் என்றும், எனக்கு வேண்டிய உதவி அதிகாரிகளிடமிருந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வளவு விரைவில், இவ்விஷயம் இப்படி மகிழ்ச்சிகரமான வகையில் தீர்ந்துவிடும் என்று எங்களில் யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
கலெக்டர் ஸ்ரீ ஹேகாக்கைப் பார்க்கப் போனேன். அவர் நல்லவராகவும், நியாயத்தைச் செய்யவேண்டும் என்பதில் ஆவலுள்ளவராகவுமே காணப்பட்டார். பார்க்க விரும்பும் தஸ்தாவேஜு களை நான் கேட்கலாம் என்றும், நான் விரும்பும் போதெல்லாம் தம்மை வந்து காணலாம் என்றும் அவர் கூறினார்.
இவ்விதம் சாத்விகச் சட்ட மறுப்பில் முதல் உதாரண பாடத்தை நாடு பெற்றது. சம்பாரணில் எங்கும் இதைக் குறித்தே பேசினர். பத்திரிகைகளும் தாராளமாக எழுதின. இதனால், நான் மேற்கொண்ட விசாரணைக்கு எதிர்பாராத விளம்பரமும் கிடைத்தது.
அரசாங்கம் நடுநிலைமை வகிக்க வேண்டியது என் விசாரணைக்கு மிகவும் அவசியமானது. ஆனால், பத்திரிகை நிருபர்களின் உதவியும், பத்திரிகைகளில் தலையங்கம் எழுதி ஆதரிப்பதும் இந்த விசாரணைக்குத் தேவையில்லை. உண்மையில் சம்பாரணில் இருந்த நிலைமை, மிக ஜாக்கிரதையாகக் கையாள வேண்டிய கஷ்டமான நிலைமை. ஆகையால், அதிகப்படியாகக் கண்டித்து எழுதிவிடுவதோ, மிகைப்படுத்தி விடும் செய்திகளோ நான் அடைய முற்பட்டிருந்த லட்சியத்திற்குத் தீமை விளைவித்து விடக்கூடும். எனவே, முக்கியமான பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினேன். பிரசுரிக்க வேண்டியது அவசியம் என்று இருப்பதை நானே எழுதுவதாகவும், நிலைமையை அப்போதைக்கப்போது அவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பதாகவும் நான் எழுதியதோடு, நிருபர்களை அனுப்பும் சிரமம் அவர்களுக்கு வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 497, நான், என்றும், புத்தகங்கள், அவர், பக்கம், மாஜிஸ்டிரேட், சத்ய, சோதனை, விரும்பும், சம்பாரணில், வேண்டியது, நிலைமை, வேண்டிய, விசாரணைக்கு, கடிதம், இப்படி, மூலம், எனக்கு, சிறந்த, தாராளமாக