சத்ய சோதனை - பக்கம் 299
இவ்விதம் இருவகையான எண்ணங்களுக்கிடையே என் மனம் அல்லல் பட்டுக்கொண்டிருந்தது. அப்பொழுது இரவு வேளை. மணிலாலின் படுக்கையில் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தேன். ஈரத்துணியை அவன் உடம்பில் சுற்றி வைப்பது என்று தீர்மானித்தேன். எழுந்து ஒரு துப்பட்டியை நனைத்துப் பிழிந்தேன். அதை, அவன் முகத்தை மாத்திரம் விட்டுவிட்டு உடம்பெல்லாம் சுற்றினேன். பிறகு மேலே இரண்டு கம்பளிகளைப் போட்டுப் போர்த்துவிட்டேன். தலைக்கும் ஒரு ஈரத்துணியைப் போட்டேன். பழுக்கக் காய்ச்சிய இரும்பு போல அவன் உடம்பெல்லாம் கொதித்தது. ஒரே வறட்சியாகவும் இருந்தது. கொஞ்சங்கூட வியர்வையே இல்லை.
நான் மிகவும் களைத்துப் போனேன். மணிலாலைப் பார்த்துக் கொள்ளுமாறு அவன் தாயாரிடம் விட்டுவிட்டு வெளியே கொஞ்சம் உலாவி வரலாம் என்று சௌபாத்தி கடற்கரைக்குப் போனேன். அப்பொழுது இரவு பத்து மணி இருக்கும். அங்கே இரண்டொருவரே நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை நான் பார்க்கக்கூட இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினேன். “ஆண்டவனே, இச் சமயத்தில், என் மானத்தைக் காப்பது உன் பொறுப்பு” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். என் உதடுகள் ராம நாமத்தை உச்சரித்தவண்ணம் இருந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டுக்குத் திரும்பினேன். இருதயம் பட படவென்று அடித்துக்கொண்டிருந்தது.
மணிலால் படுத்திருந்த அறைக்குள் நான் நுழைந்ததுமே அவன், “வந்துவிட்டீர்களா, பாபு?” என்றான்.
“ஆம், கண்ணே” என்றேன்.
“என் உடம்பெல்லாம் எரிகிறது. தயவுசெய்து என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.”
“உனக்கு வேர்க்கிறதா, குழந்தாய்?”
“வேர்வையில் ஊறிப் போய்க் கிடக்கிறேன். என்னை வெளியே எடுத்துவிடுங்கள்.”
நெற்றியைத் தொட்டுப் பார்த்தேன். முத்து முத்தாக வேர்த்திருந்தது. சுரமும் குறைந்துகொண்டு வந்தது. கடவுளுக்கு நன்றி செலுத்தினேன்.
“மணிலால், உன் சுரம் நிச்சயமாகக் குறைந்துவிடும். இன்னும் கொஞ்சம் வேர்க்கட்டும். பிறகு உன்னை வெளியே
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 299, அவன், புத்தகங்கள், வெளியே, சத்ய, பக்கம், நான், சோதனை, உடம்பெல்லாம், போனேன், என்னை, எடுத்துவிடுங்கள், கொஞ்சம், விட்டுவிட்டு, சிறந்த, அப்பொழுது, இரவு, பிறகு, இல்லை