சத்ய சோதனை - பக்கம் 232
அது எப்படியாவது இருக்கட்டும். தப்பிப் போய் விடுவதற்குச் செய்த ஏற்பாடுகளில் என் காயங்களை மறந்து விட்டேன். சூப்பரிண்டெண்டென்டின் யோசனைப்படி. இந்தியக் கபன்ஸ்டபிளின் உடையைப் போட்டுக்கொண்டேன். ஒரு சட்டி மீது மதராஸி அங்கவஸ்திரத்தைச் சுற்றிக் கவசமாகத் தலையில் வைத்துக்கொண்டேன். என்னுடன் இரண்டு துப்பறியும் போலீஸார் வந்தனர். அவர்களில் ஒருவர், இந்திய வர்த்தகர் வேஷம் போட்டுக்கொண்டார். இந்தியரைப்போல் தெரிய வேண்டும் என்பதற்காக அவர், தம் முகத்தில் வர்ணம் பூசிக்கொண்டார். மற்றொருவர் என்ன வேடம் போட்டுக் கொண்டார் என்பது எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு குறுக்குச் சந்தின் வழியாகப் பக்கத்துக் கடைக்குள் புகுந்தோம். அங்கே அடுக்கிக் கிடந்த சாக்குக் கட்டுகளின் ஊடேசென்று, அக் கடையின் வாசலை அடைந்தோம். அங்கிருந்து கூட்டத்திற்குள் புகுந்து, தெருக்கோடிக்குப் போனோம். அங்கே ஒரு வண்டி எங்களுக்குக்கென்று தயாராக வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறி, போலீஸ் ஸ்டேஷனை அடைந்தோம். எனக்கு அடைக்கலம் தருவதாக ஸ்ரீ அலெக்ஸாண்டர், கொஞ்ச நேரத்திற்கு முன்னால் சொன்னதும், அதே போலீஸ் ஸ்டேஷன்தான். அவருக்கும் துப்பறியும் அதிகாரிகளுக்கும் நன்றி கூறினேன்.
இவ்வாறு நான் தப்பி வந்துகொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீ அலெக்ஸாண்டர் ‘புளிப்பு ஆப்பிள் மரத்தில், கிழட்டுக் காந்தியைத் தூக்கில் போடு!’ என்று பாட்டுப்பாடி, அவர்களுக்குச் சுவாரஸ்யம் அளித்துக்கொண்டிருந்தார். நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்து விட்டேன் என்பது தெரிந்ததும்,அவர், பின்வரும் செய்தியைக் கூட்டத்தினருக்கும் வெளியிட்டார். “சரி நீங்கள் தேடும் ஆசாமி, பக்கத்துக் கடைவழியாகத் தப்பிப் போய்விட்டார். ஆகையால், இப்பொழுது நீங்கள் வீட்டுக்குப் போகலாம்”. இதைக் கேட்டுச் சிலர் கோபம் அடைந்தனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 232, புத்தகங்கள், சத்ய, அவருடைய, போலீஸ், சோதனை, பக்கம், அங்கே, எனக்கு, என்பது, பக்கத்துக், ஸ்ரீ, நீங்கள், நான், அலெக்ஸாண்டர், அவர், அடைந்தோம், தப்பிப், குறிப்பிட்ட, இப்பொழுது, நடந்து, சிறந்த, ஒருவர், வெளிப்படையான, விட்டேன், அறிந்துவிட, கண்டு, துப்பறியும்