சத்ய சோதனை - பக்கம் 182
ஆனால், செய்ய வேண்டிய வேலை, நிதி வசூல் செய்வது மாத்திரம் அன்று. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக்கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக்கொண்டிருந்தேன்.
கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடக்கும். அவசியமானால், வாரத்திற்கு ஒரு முறையும் நடப்பது உண்டு. முந்திய கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அடுத்த கூட்டத்தில் படிக்கப்படும். பல விஷயங்களும் விவாதிக்கப்படும். பொது விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளுவதிலும், விஷயத்தை ஒட்டிச் சுருக்கமாகப் பேசுவதிலும் மக்களுக்கு அனுபவமே இல்லை. எழுந்து பேச ஒவ்வொருவரும் தயங்கினர். கூட்டங்களின் நடைமுறை விதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றை மதித்து, அவர்களும் நடந்துகொண்டார்கள். அது தங்களுக்கு ஒரு படிப்பு என்பதை உணர்ந்தார்கள். ஒரு கூட்டத்திலும் இதற்கு முன்னால் பேசியே பழக்கம் இல்லாதவர்கள், சந்தித்துப் பொது விஷயங்களைக் குறித்துப் பகிரங்கமாகப் பேசவும் பழகிக் கொண்டனர்.
பொதுவேலைகளில், சில்லரைச் செலவே சமயத்தில் பெருஞ் செலவாகிவிடும் என்பதை அறிவேன். ஆகையால், ஆரம்பத்தில் ரசீதுப் புத்தகங்களைக்கூட அச்சிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். என் காரியாலயத்தில் பிரதிகள் எடுக்கும் சைக்ளோஸ்டைல் யந்திரம் ஒன்று இருந்தது. அதிலேயே ரசீதுகளுக்கும் அறிக்கைகளுக்கும் பிரதிகளைத் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸினிடம் நிதி அதிகம் சேர்ந்து, அங்கத்தினர்களும் அதிகமாகி, வேலையும் பெருகிய பிறகே அவைகளையெல்லாம் அச்சிட ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் இத்தகைய சிக்கனம் அவசியம். என்றாலும், அதுதான் அனுசரிக்கப்படுவதில்லை என்பதையும் அறிவேன். இதனாலேயே, சிறிய, ஆனால் வளர்ந்துவருகிற ஒரு ஸ்தாபனத்தின் விஷயத்தில் ஆரம்பத்தில் இந்தச் சிறு விவரங்களையெல்லாம் கவனிப்பதே சரி என்று எண்ணினேன்.
தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு ரசீது பெற வேண்டும் என்பதைக் குறித்து மக்கள் கவலைப்படுவதே இல்லை. ஆனால், நாங்கள் வற்புறுத்தி ரசீதுகளைக் கொடுத்து வந்தோம். இவ்விதம் ‘ஒவ்வொரு தம்படிக்கும் சரியாகக் கணக்கு வைக்கப்பட்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 182, புத்தகங்கள், பக்கம், சோதனை, சத்ய, பொது, இல்லை, அறிவேன், ஆரம்பத்தில், நிதி, என்பதை, வரையிலும், சிறந்த, கொடுத்து, இருக்கும், வசூல், வேலை