அர்த்தமுள்ள இந்துமதம் - ஆணவம் !
இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.
என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.
நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன்.
காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.
ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;
தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றார்கள்.
`எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.
`மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
மகாபாரதத்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.
பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானாம்!
துரியோதனனும் அர்ச்சுனனும் அவனிடம் உதவி கேட்கப் போனார்களாம்.
துரியோதனன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம்.
அர்ச்சுனன் காலடியில் அமர்ந்தானாம்!
காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்ததும் முதன் முதலில் அவனையே பார்த்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று
கூறிவிட்டானாம்.ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.
அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.
பாரதப் போரில் ஆணவம் தோற்றது.
ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.
நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது.
`எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.
`அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றவனும் அவனே!
நான்கு வரி ஒழுங்காக எழுதுவதற்கு முன்னால், `கம்பன் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்’ என்று பேசுகிறவர்கள் உண்டு.
ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.
அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.
இந்துக்கள் வற்புறுத்தும் பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!
இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.
தன்னைவிட வயதில் மூத்தவரைச் சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறான்.
வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.
என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.
நான் சொன்னேன்:
“அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக் கிரகம் செய்யப் போன கால்கள்.
சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள்.
என்னுடைய கால்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”
சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கிவிடும்.
`நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்துவிட்டோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - ஆணவம் ! , ஆணவம், நான், யானை, புத்தகங்கள், அந்த, தான், உண்டு, காலடியில், கால்கள், என்ன, உதவி, அந்தப், அர்த்தமுள்ள, இந்துமதம், பரந்தாமன், மீண்டும், சொன்ன, சிறந்த, அமர்ந்தானாம், காலைத், அமர்ந்தது, சபைகளில், என்னுடைய, கோவில், சுத்தமாக, ஒதுங்கி, கொண்டே, பன்றி, இன்னொரு, கண்டு, தலைவர்கள், அலட்சியப்படுத்தும், குளித்துவிட்டு, எதிரே