அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானத்தின் பரிபக்குவ நிலை
அங்காந்து காத்திருப்பான். ஆரத் தழுவியவன் உடலைப் புறம் தழுவி, உண்ணும் சுவை கூட்டி கேட்டது கேட்டபடி தடைகள் சொல்லாமல், ஏதும் மறைக்காது, எதிர்த்தொன்றும் சொல்லாது, தூமலர்த்தேன் உறிஞ்சும் தும்பியைப் போலவனும் காமவிருத்தாடக்
களிப்போடுறவாடு!ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
நாளை வரை அவனும் காத்திருக்க மாட்டான்; பாளைச்
சிரிப்புதிர்க்கும் பாவை நீ புறப்படு!
காளை அவன் மனத்தைக் கண்ணாடிப் பெட்டகம் போல், நோவாது கொள்ள மதுஹரியும் மனங்களிக்க!
மருள்கொள் புலவியிலே மதி மயக்கம் தந்திடவே தருணம் இது தோழி! தயங்காமல் புறப்படுக!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!’
கண்ணனும் ராதையும் கலந்து விளையாடியதை, காமரஸமாகச் சித்திரிக்கும் ஜயதேவர், அதில் ஒரு ஞானரஸத்தையும் ஊட்டுகிறார்.
`காமக் கலவி’ என்பது ஒருவகை லயம்.
ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாகவே காட்சியளிப்பது அது.
அது அத்வைத நிலை, சமாதி நிலை.
பேசுவது சரீரங்களைப் பற்றியேயாயினும், உள்ளுணர்வு ஆன்மாவைப் பற்றியது.
இரண்டற்ற நிலையில் ஜீவராசிகள் முழுவதுமே ஒவ்வொரு கட்டத்தில் இயங்குகின்றன.
அந்த லயத்தில் மானிடஜாதி ஈடுபட வேண்டுமென்று தான் இல்லறத்தை ஒரு புனித `அற’மாக ஆக்கினார்கள்.
ஆடு மாடுகளுக்குக்கூட திடீர் திடீரென்று அந்த உணர்வு பெருக்கெடுக்கிறது.
ராதா கிருஷ்ண பாவம், லெளகீகத்தின் சாரம்.
`பகவானைப் பற்றி இப்படிப்பட்ட கதைகளா?’ என்று கேட்கக் கூடாது.
பகவான், லோகாயத சுகத்தின் குருவாக ஆக்கப்படுகிறான்.
காமத்துக்கெனக் கூறப்படும் சாஸ்திரம், பகவான் வடிவத்தில் காட்டப்படுகிறது.
வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சியாக, அது எழுந்து நிற்கிறது.
செயலின் மூலம் செயலற்ற நிலையே காமம்.
அந்த இயக்கத்தில் மனம் ஒன்று பட்டபின் வேறு சிந்தனைகள் இயங்காமல் நின்று விடுகின்றன.
அவனையே அவளும், அவளையே அவனும் நினைக்கிறார்கள்.
பக்தி தத்துவத்திலும் இதுதானே நிலை!
படுக்கை அறை `பள்ளியறை’ என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டவன் சயனிப்பதும், `பள்ளி’ என்று கூறப்படுகிறது.
உடல் உறவில் அடைகின்ற அமைதி, பக்தியிலும் கிடைக்கிறது.
பக்தியில் கிடைக்கின்ற ஆனந்தநிலை உடல் உறவிலும் கிடைக்கிறது.
சிருஷ்டியில், `ஆண்-பெண்’ என்று இரண்டு படைக்கப்பட்டு, இரண்டுக்கும் உணர்வுகள் உண்டாவது ஏன்?
சிருஷ்டிகர்த்தா, சிற்றின்பத்திற்கு விரோதியாக இருந்திருந்தால், அவன் இப்படிப்பட்ட இரண்டு வடிவங்களை ஏன் படைக்க வேண்டும்?
`சிற்றின்பம்’ என்ற வார்த்தையிலும், `இன்பம்’ இருக்கிறது; பேரின்பத்திலும் இருக்கிறது.
கோபுரங்களில் காமரஸப் பதுமைகளை வைப்பதும் அதற்காகவே.
நேபாளக் கோயில்களில் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற சிலைகள் உண்டு. அதன் பெண் குறியில் தான் குங்குமம் கொட்டி, வைக்கப்படுகிறது, என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
ஏன், சிவலிங்க வடிவமே அதுதானே!
காரணம் உலக இயக்கத்துக்கு இது தேவை.
திருமணங்களின் மூலம் குடும்பங்கள் உருவாகிப் பண்பாடுகள் காக்கப்படுகின்றன.
மாதா மாதம் இறைவன் பூமிக்கு வந்து சில உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக அவன் உருவாக்கிய கருவிகளே ஆணும் பெண்ணும்.
அவை சிருஷ்டிக்கான கருவி என்பதால் யந்திரம் மாதிரி இயங்க முடியாது.
அந்த உறவு சந்தோஷமில்லாமல், பானை செய்வது போலவும், பாத்திரம் செய்வது போலவும், அதுவும் ஒரு தொழிலாகி விட்டால், அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவார்களே தவிர, பணி செய்ய மாட்டார்கள்.
அதனால் தான் சிருஷ்டி தத்துவத்தில் ஒரு சுகபோக லயம் கலக்கப்பட்டது.
அதுவும் வெறும் சுகமாக இருந்தால் ஆடு மாடுகளைப் போல, அந்த நேரத்து உணர்ச்சியாகி விடும்.
ஆகவே, அது கலையாக விவரிக்கப்பட்டது.
பலவகையாக அது வடிவமெடுத்தது.
ஒவ்வொரு சிறு காரியமும், பிரமாதப்படுத்தப்பட்டன.
வெறும் பார்வையே கூட காவியமாக்கப்பட்டது.
முத்தம் இடுவது கூட வகை வகையாக விவரிக்கப்பட்டது.
வீடு விட்டுக் காடு சென்ற முனிவர்களே கூட அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார்கள்.
அங்கங்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் கூட காவியங்களுக்கான கருவாக அமைந்தது.
வருணனைகளைப் படிக்கும் போதே, `வாழ்ந்து பார்க்க வேண்டும்’ என்று ஆசை கிளர்ந்தெழுமாறு எல்லா பாஷைகளிலும் இந்தத் சுவையே மிகைபடத் தொடங்கிற்று.
ஆகவே, நோக்கம் சிருஷ்டி; அதற்கே இரண்டு கருவிகள்; அந்த இரண்டு கருவிகளைத் தூண்டிவிடும், வருணனைகள்.
மூலநோக்கம் சிருஷ்டி என்பதனை மனத்திலே கொண்டால், சிற்றின்பம் விரஸமாகத் தெரியாது.
காமம், உடல் சார்ந்த உறவு புனிதமாகி விடும்.
அந்தப் புனிதமான உடல் சார்ந்த உறவை ஜயதேவர் வருணிக்கிறார்.
`கட்டி உடல் தழுவிக் காதல் புரிகையிலே மட்டில்லா இன்ப வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க, கண்ணை இமைமூடில் காதல் சுகம் பெருகும்’ என்று கண் இமை திறந்து அங்கே கலவிச் சுகம் கண்டார்.
ஒருவர் இதழ் ஒருவர் கடித்து உறிஞ்சித் தேன்மாந்தும் பருகுவாய்க் கள்ளின் இணை கூறச் சுவையுண்டோ?
கலவிப் போர் இன்னும் வெற்றி தோல்வி என்று பகுத்துரைக்கும் வண்ணம் நடந்து முடியவில்லை.
இதுதான் துவக்கம்!
இன்பத்தின் வருணனைகள் இதுவென்று உரைப்பதற்கு என்னால் இயலவில்லை.
முடிவின் நிலை என்ன?
யார் உரைக்க வல்லாரோ?
கைகள் சிறைபிடிக்க, கடினமுலை மார்தாக்க, கை நகங்கள் உடல் கீற, மையச் சிவந்த வாய் பற்கள் கடித்து உதற, கார் குழலைக் கைப்பிடித்துக் கலைத்து இழுத்து, உயிர்த் துடிப்போடு கனிவாயில் வாய்வைத்துக் கள்ளுறுஞ்சும் வகையுரைக்கப் போமோ!
போதை தலைக்கேற புதுக்கனிகள் சுவைக்கின்றார். காதல் விளையாட்டுக்கென்றே இலக்கணங்கள் ஓதி உணராது உடல் புணர மாட்டாதோ?
கலவி மயக்கத்தின் அடையாளம், அறிவார்கள், உலவும் உள்ளத்து உணர்ச்சி பொங்கி, போர் ஆரம்பித்தவுடன் ஆனந்தம் பொங்குதடி!
தேரா விளையாட்டு தெவிட்டா இன்பச்சுவை; என்னென்ன ஆடலடி! எப்படித்தான் கூடுகிறார்?
கன்னல் பிழிந்தாற்போல் கலவி பிழிந்த சுகம், கடலின் அடுக்கடுக்காய் பொங்கி வரும் அலையாம்!
உடலை ஒருவனுக்கு ஒப்படைத்த மங்கையவள், தலைவன் தாக்கியதும் தான் எதிர்த்து தாக்கியதும், முலைகள் குதித்து வர மெய் தழுவிக் குதித்ததுவும், அலையா மனம் அடக்கி அந்தரத்தில் நின்றதும், வாக்கு மனம் செயல் இம்மூன்றும் மறைந்ததடி!
தாபச் சுரம் பெருக, தணிந்தபின் உடல் சோர, வாடும் மலர்க்கொடிபோல், வாடி உடல் சாய, பேசும் பேச்சிறைக்க, பேசாது மூச்சிறைய, வாசமலர் விழியாள் வைத்தில் கண்ட சுகம் நாசம் அடைவதுண்டோ, நலிவுடலும் கொள்வதுண்டோ?
பேசும் மாந்தர்களே!
புவியில் கூடலுக்கு நேரம் உண்டோ?
`பாற்கடலின் கரை அருகில் பாவை உன் அழகுடலைப் பார்த்த பரமசிவன், `மனம் கொண்ட காதல் இனி நடவாது’ என்று உணர்ந்து, நலிவுற்ற மனத்தாலே சிவகாமி சிந்தை கவர் சிவனார் அந்நாளில் ஆலகால விஷம் அருந்தியதை நானறிவேன்!’
-பற்பலவாம் பேச்சுரைத்துப் பன்மாயக் கள்வனவன் பொற்கொடியின் சோர்ந்த உடல் பூமியில் சாய்ந்துறக்கம் மேற்கொண்ட வேளையிலே,
மெல்ல அவள் மேலாடை அப்புறமாய் ஒதுக்கி, ஆர்த்தெழுந்த கொங்கையினை கொப்பூழ் வனப்போடு குனிந்தபடி பார்த்திருந்தான்!
தீராது விளையாட்டுப்பிள்ளை, என் கண்ணன்
நேராது தீங்கு என்றும் நம்மை தினம் காப்பான்!
காலமெல்லாம் கண்விழித்துக் கண்கள் சிவப்பாக,
பற்பதித்து, செவ்விதழும் வெளுத்துப் பொலிவிழக்க,
நற்கூந்தல் சூடுமலர், சருகாய் வாடிவிட,
ஆடை சீர்குலைய, அங்கம் வெளித்தெரிய
இரவைக் கலைத்தொரு கதிரோன் வெளிப் போந்தான்.
நம்பி முகம் பார்த்து நாணும் கண்ணிரண்டும்
வம்பு செய் காதல் உணர்வை மீட்டி விட,
நம்பியுடன் நங்கை நாடிப் புணர்ந்ததனை
நாவால் எடுத்துரைக்க நல்ல சொல் கிடைக்கவில்லை!
முடித்த குழல் அவிழ்ந்து மொய்த்துத் தரை புரள,
வடித்து உடல் நீரால் கணைக் கதுப்பொளிர,
தடித்த செவ்வாயும் தனிக்காதல் மணம் பரப்ப,
கொங்கை மேல் குதித்து முத்து வடம் குலுங்க,
மங்கையவள் மேகலையும் மண்ணில் சிதறி விழ
அருகிருப்பார் பாராது அல்குல் அணிமார்பாம்
மருளும் பேதை கரம் மறைவாய்க் காத்தபடி
உருகித் தடுமாறும் ராதையைக் கண்டவுடன்
`வருக’ என கண்ணன் விடு கோரிக்கை கண்டவுடன்,
`தையல் காணிக்கை’யென்று,
உடல் உண்ட சுகம் மீண்டும் உண்ண வருவதற்கு,
தண்மாலை துறந்தவளும் தாவி அவன் மேல் விழுந்து
கொண்ட சுவைக்கு ஒருகணக்கும் இல்லையடி!
பனியால் வளர்ந்து வரும் பச்சைப் புல் போல
கனிவாய் முறுவலிக்கும் கன்னி உடல் ஒசிய,
காதல் குரல் எடுக்க,
சொற்கள் பொருளிழக்க,
நாதன் தரும் இன்பத் தடுமாற்றம் நிலைகுலைக்க,
இதழ்கள் ஒவ்வொன்றில் எத்தனையோ பற்குறிகள்!
கோதை முக அழகை உண்டு ரசிக்கையிலும்,
இதமாய் உடல் தழுவி இருக்கும் சேர்க்கையிலும்
எத்தனையோ இன்பமடி!
எடுத்துரைக்க வார்த்தை இல்லை!
-மேலே வடமொழி மூலத்தில் இருந்து என் நண்பர் `ஆஷா’ மொழி பெயர்த்ததை, அப்படியே கொடுத்திருக்கிறேன்.
இந்து மார்க்கத்தின் லெளகீக சுகத்துக்கு உச்சகட்ட உதாரணம், ஜயதேவர் அஷ்டபதி.
என்னைப் பொறுத்தவரை காமத்தைப் பாடி மனிதனை ஞானத்துக்குப் பக்குவப்படுத்துவதைப் பெரிதும் விரும்புகிறேன்.
அண்மைக் காலங்களில் அமெரிக்க நாட்டில் இந்து மதம் பரவி வரும் வேகம் நமக்குத் தெரிந்ததே. அங்கே இந்தியாவில் இல்லாத ஒரு புதுவித யோகத்தைக் கற்பித்தார்கள்.
சுமார் இருபது ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நின்று கொள்வது; அதுவும் இடுப்பளவு தண்ணீரில் ஒரு ஆண், ஒரு பெண்ணென்று வட்டமாக நிற்பது; ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொள்வது; ஆனால் யாருக்கும் காம இச்சை வரக்கூடாது. இப்படி ஒரு பயிற்சி.
மூன்றாண்டுகளுக்கு முன் `லைப்’ பத்திரிகையில் இந்தப் படத்தையே நான் பார்த்தேன்.
காம நிலையில் இருந்து கொண்டே காமத்தை மறப்பதென்பது இதன் பெயர்.
அப்படி ஒரு பக்குவம் எல்லாருக்குமே ஏற்பட்டு விடாது.
ஜயதேவரின் ராதா கிருஷ்ண பாவனை, காம உணர்வினையே தூண்டக்கூடும். ஆனால், அதிலிருந்து ஒரு ஞானயோகத்தை உருவாக்கும் முயற்சியை அறிவாளிகள் ஏன் மேற்கொள்ளக் கூடாது.?
வீணாக ஜயதேவரின் அஷ்டபதி கீத கோவிந்தத்தை ஒதுக்கி விடுவதில் பொருளில்லை.
கண் அந்த நூலைக் காண வேண்டும்; மனம் அதைப் படிக்க வேண்டும்; ஆண்மையுள்ள உடம்பு கூட உணர்ச்சியற்றிருக்க வேண்டும்; அதுதான் ஞானத்தின் பரிபக்குவ நிலை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அர்த்தமுள்ள இந்துமதம் - ஞானத்தின் பரிபக்குவ நிலை, உடல், நிலை, அந்த, காதல், புத்தகங்கள், சுகம், மனம், தான், வேண்டும், ஒருவர், அவன், ஞானத்தின், இரண்டு, தழுவி, அர்த்தமுள்ள, இந்துமதம், ஒவ்வொரு, பரிபக்குவ , வரும், ஜயதேவர், கொங்கை, அதுவும், சிருஷ்டி, கடித்து, போர், கலவி, பொங்கி, தழுவிக், அங்கே, விடும், விவரிக்கப்பட்டது, வருணனைகள், ஆகவே, தாக்கியதும், இருந்து, எத்தனையோ, கண்டவுடன், இந்து, அஷ்டபதி, ஜயதேவரின், கொள்வது, மேல், எடுத்துரைக்க, குதித்து, வெறும், பேசும், கொண்ட, கண்ணன், ஒதுக்கி, மங்கையவள், செய்வது, நிலையில், ஒன்று, கரத்தால், பற்றியொரு, கிருஷ்ண, ராதா, லயம், கலந்து, விளையாட, வனமாலி, அவனும், பாவை, கொள்ள, பாசமிகு, இப்படிப்பட்ட, கூடாது, இருக்கிறது, சிறந்த, பெண், உண்டு, கோபியரின், முடியாது, கிடைக்கிறது, ஆனந்தத், மூலம், பகவான், காமம், தென்றலடி, நின்று, போலவும்